இனி நடக்காமல் இருக்கட்டும்!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடையால் செயற்கை சுவாச கருவி செயல்படாமல் 3 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மின்தடை ஏற்படாமல் இருந்தாலும் நோயாளிகள் மரணம் அடைந்து இருப்பார்கள் என மருத்துவமனை டீன் வனிதா கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் 7-ம் தேதி இரவு மழையால் மின்வெட்டு ஏற்பட்டு இருந்த சமயத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். செயற்கை சுவாச கருவி செயல்படாத காரணத்தால் இந்த மரணம் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. உயர்நீதிமன்றமும் இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா செய்தியாளர்களை சந்தித்தார்.

‘சம்பவத்தன்று மூன்று நோயாளிகளுமே மோசமான நிலைமையில்தான் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். மூவருக்குமே தீவிர தலைக்காயம் ஏற்பட்டு மூளையில் ரத்தக்கசிவு பாதிப்பு இருந்தது. அரசு மருத்துவமனையை பொறுத்தவரை 2500 முக்கிய மருத்துவ உபகரணங்கள் நல்ல நிலையில் உள்ளது.

அதில் 164 செயற்கை சுவாச கருவிகள் இரண்டு மணி நேர பேட்டரி சேமிப்பு திறன் உடன் செயல்பாட்டில் இருக்கிறது. முறையாக உபகரணங்கள் சர்வீஸ் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே, இதற்கும் நோயாளிகள் இறப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார். 

மின் தடை ஏற்படாமல் இருந்திருந்தாலும் அவர்கள் இறந்து இருப்பார்கள். ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டது உண்மைதான். எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்காணித்து பராமரிக்க 11 பேருக்கு மேல் பணியில் இருந்து வருகின்றனர். அவர்களில் இருவர் எப்போதும் பணியில் இருப்பர்.

மேலும் இறந்த நோயாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது அதனை தற்போது வெளியிட இயலாது. இது குறித்த விசாரணை அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்வோம் என்று கூறியிருக்கிறார். உயிரிழப்புகளுக்கு எது காரணமாக இருப்பினும், இனி இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நிகழாமல் இருக்கட்டும்!

- கெளதம்