அந்த நாட்களில் அதிக வலியா?!



மகளிர் மட்டும்

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலிகள் பொதுவானவை. சிலர் வலியினை சமாளிக்க முடியாமல் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வதுண்டு. இதுபோல் தானாகவே வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வது சரியானதுதானா, அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் இயற்கையானதாக இருந்தாலும் அதற்கான காரணங்கள் அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இது பற்றி விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மல்லிகா சாமுவேல்.

‘‘மாதவிடாய் காலங்களில் வரும் வலிகள் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும். சிலருக்கு மாதவிடாய் காலங்கள் நெருங்கும்போதே வலி தொடங்கிவிடும், சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மட்டும் வலி இருக்கும் போன்றவை.

மாதவிடாய் கால வலிகளை என்று கூறப்படுகிறது. இது முதன்மையானது, இரண்டாவது வகை என இரண்டாகப் பார்க்கப்படுகிறது. முதன்மை வலியானது மிகவும் சாதாரணமானது. இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. மாதவிடாய் சுழற்சியினால் ஏற்படும் வலி மட்டுமே ஆகும். இது Primary Dysmenorrhea.

இரண்டாவது வகையான வலிக்கு ஏதேனும் மருத்துவரீதியான காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக கருப்பையில் நீர்க்கட்டி, நார்த்திசுக்கட்டி, நோய்த்தொற்று போன்றவற்றாலும் வலி ஏற்படலாம். இது Secondary Dysmenorrhea எனப்படுகிறது. இதில் வலிக்கான காரணம் அறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் வலிகள் முற்றிலும் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

உதாரணமாக நீர்க்கட்டி போன்றவை மாதிரியான வலிகளுக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் மூலம் கட்டிகள் கரைக்கப்படும் அல்லது லேப்ராஸ்கோப்பி மூலம் கட்டிகள் அகற்றப்படும். பிறகு வலி முற்றிலும் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் எந்த வகை சிகிச்சை நமக்கு தேவைப்படுமோ அதை மேற்கொண்டால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இது Secondary Dysmenorrhea.

Primary Dysmenorrhea இரண்டாக பிரிக்கப்படுகிறது. Primary spasmodic Dysmenorrhea, Primary congestive Dysmenorrhea ஆகும். மாதவிடாய் தொடங்கியவுடனேயே வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து பின் குறைய ஆரம்பிக்கும். இது Primary spasmodic Dysmenorrhea. Primary congestive Dysmenorrhea எனப்படுவது மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே வலி சிறிது சிறிது தொடங்கி அதிகரித்து மாதவிடாய் ஆரம்பிக்கும்போது வலி படிப்படியாக குறைந்துவிடும்.

Primary spasmodic Dysmenorrhea-வில் ஏற்படும் வலி 13, 14 வயது பெண்களுக்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக மாதவிடாய் தொடக்கத்தில் இருப்பவர்கள், இளம் பெண்கள் போன்றவர்களுக்கு அதிகமாக காணப்படும். இது மிக சாதாரணமானது. இந்த வலி அதிகமாக இருக்கும் நிலையில் தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்துகள் எடுத்துக் கொள்வது மிக முக்கியம். காரணம் வலி நிவாரணிகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இதை மருத்துவர்களே பரிந்துரைக்கும்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை எடுத்து பிறகு நிறுத்தப்படும். தொடர்ந்து வலி இருக்கும்போது மாதவிடாயின் முதல் நாள் மட்டும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதனால் பக்க விளைவுகள் இருக்காது.
மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு தொடர்ந்து எடுக்கும்போது பக்க விளைவுகள் இருக்குமா?

தாங்க முடியாத தொடர் வலி இருக்கும்போது மாதத்தின் இரண்டாவது பாதியில் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இது மாதம் முழுவதும் எடுக்காமல் கடைசி 10 நாட்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். இதனால் இடுப்பு பகுதியில் ஏற்படும் நெரிசல் குறைந்து வலி குறைய ஆரம்பிக்கும். இந்த இடுப்பு பகுதியில் வரும் நெரிசலானது ஈஸ்ட்ரோஜனால்தான் ஏற்படுகிறது.

புரோஜெஸ்ட்ரோன் மாத்திரைகள் எடுப்பதனால் மாதவிடாய் காலத்தில் இந்த வலி இருக்காது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இதை தொடர்ந்து எடுக்கும்போது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியில் நிவாரணம் இருக்கும்.

மிக கட்டுப்பாட்டுடனும், குறைந்த வீரியமுள்ள மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதாலும், ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே எடுப்பதனாலும் இதனால் பக்கவிளைவுகள் இருக்காது.

மாதவிடாய் கால வலிகளுக்கு மாத்திரைகள் தவிர மாற்று வழிகள் உள்ளதா?

பெண்கள் தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம். அதிகப்படியான வலிகள் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் மாதவிடாய் காலத்தின் போதும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

மாதவிடாய் கால வலிகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குறைந்துவிடுமா?

Primary Dysmenorrhea- வால் ஏற்படும் வலியானது பெண்களின் குழந்தைப்பேறு போன்றவற்றிற்கு பிறகு குறைய ஆரம்பித்துவிடும். காரணம் இடுப்புப் பகுதியில் இருந்த நெரிசலானது குறைந்து தளர்ந்தபின் வலியானது நின்றுவிடும்.

- மித்ரா