ஃப்ரெண்ட்ஷிப்பை தப்பா பார்க்காதீங்க!



காஜல் அகர்வால் 

காஜல் அகர்வாலுக்காக காத்திருக்கிற நேரம் அழகானது. ஃபெஸ்டிவல் புன்னகையும் அசத்தல் காஸ்ட்யூமுமாக பார்ப்பவரை அடிமைப்படுத்தும் அழகில் அவர் ‘‘ஸாரி’’ கேட்கும் முன்னரே மன்னித்துவிட்டோம். உதட்டுக் கூடையெங்கும் புன்னகை பொக்கேயோடு நமக்கு  ‘‘ஹலோ’’ சொன்னவரை வேறு என்ன செய்வது?

‘‘நல்லாத்தானே போயிட்டு இருந்தது... திடீரென்று தெலுங்குக்கு போயிட்டீங்களே?’’‘‘என்ன... ஒரு வருஷமா இங்கே இல்லை. அவ்வளவுதான். ரெண்டு படங்கள் தெலுங்கில் ஏற்கனவே ஒப்புக்கொண்டது. பெரிய பட்ஜெட்... கொஞ்ச நாள் பிடிக்கும். என்ன செய்வது? இதோ வந்துட்டேன். அது என்னவோ தெரியலை... தமிழ் இண்டஸ்ட்ரி எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. எனக்குப் பிடிச்சிருந்தா எல்லா ரோலும் பண்ணுவேன்.

 உங்களுக்குத் தெரியுமா, நான் வீட்டிற்குப் போய் முழுசா ஒரு மாதம் உட்கார்ந்து இரண்டு வருஷமாச்சு. எனக்கு இந்த சினிமா எவ்வளவோ கொடுத்திருக்கு. இவ்வளவு ஜனங்களின் அன்பு, வரவேற்பு, கிடைச்சிருக்கிற வசதிகள் எல்லாத்துக்கும் சினிமாதான் காரணம். தமிழ், தெலுங்கு இந்த இரண்டு பக்கம்தான் அங்கே இங்கேன்னு போய்க்கிட்டு இருக்கேன்!’’‘‘முதல் தடவையாக தனுஷுடன் ‘மாரி’... எப்படியிருக்கு?’’

‘‘அவரோட படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், நேரில் பார்க்கும்போது அவருக்கு சினிமாவில் இருக்கிற ஆர்வம், சடசடன்னு புரிஞ்சுக்கிட்டு நடிக்கிற விதம், பக்கத்தில் நடிக்கிறவங்களை ஈஸியா ஃபீல் பண்ண வைக்கிறது எல்லாமே பிடிச்சுப் போச்சு. அந்த ஆர்வம்தான் அவரை தேசிய விருது வரைக்கும் கூட்டிப் போயிருக்கு. எனக்கு இதில் மாடர்ன் கேர்ள் ரோல்.

தனுஷ் லோக்கலா இறங்கி கலக்கும்போது என்னோட கேரக்டர் அதுக்கு நேரெதிரா இருக்கும். எங்க காம்பினேஷன் நல்லாயிருக்குன்னு நானே சொன்னாலும், நீங்களும் அதையேதான் சொல்லப்போறீங்க. ப்ராமிஸ் பாஸ்! டிரெய்லர், சில சீன்ஸ் பார்த்தேன். சும்மா கலகலப்பா வந்திருக்கு. எனக்கு ‘மாரி’ மேல ரொம்ப நம்பிக்கை வந்திருக்கு!’’

‘‘கிசுகிசுக்களில் நீங்கள் இருந்ததே இல்லையே,எப்படி?’’‘‘இப்ப சினிமாவில் எங்கே பார்த்தாலும் இருக்கிறது ஃப்ரெண்ட்ஷிப் ட்ரெண்ட்தான். யார்கிட்டயும் பொறாமை கிடையாது. ஈகோ ரொம்பவும் குறைவு. எல்லோரும் சகஜமா பழகிக்கிறோம். ஒரே இடத்தில், பல நாட்கள் ஷூட்டிங்கில் இருக்க வேண்டி இருக்கு. நடிப்பு விளையாட்டு இல்லை. பல கோடிகள் நடமாடுகிற பிஸினஸ்.

ஒரு ஆபீஸ்ல எப்படி நல்ல ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்கிறாங்களோ, அப்படித்தான் ஒரு ஹீரோயினும் சினிமாவில் நடந்துக்க வேண்டியிருக்கு. அதைத் தப்பா புரொஜெக்ட் பண்ணக் கூடாது. சாதாரணமா பேசிக்கிறது, சிரிச்சுக்கிறது, பழகிக்கிறது காதல் கிடையாது. நான் சினிமாவுல எச்சரிக்கையா இருப்பேன். என் கவனத்தை சிதற விடுறதில்லை. வேலை... வேலைன்னு திரிஞ்சுக்கிட்டு, அடுத்த ஃப்ளைட், அடுத்த ஃப்ளைட்னு போய்க்கிட்டு இருக்கும்போது வேறு எதற்கும் எனக்கு இடம் இல்லை!’’

‘‘இங்கே ஹன்சிகா, த்ரிஷா எல்லாம் திக் ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு அப்படி யாரும் இல்லையா..?’’‘‘எல்லோரிடமும் நல்லா பழகுவேன். எங்கே பார்த்தாலும் ‘ஹாய்’ சொல்லிட்டு, அடுத்தடுத்த புராஜெக்ட் பத்திப் பேசுவோம். யார் மேலேயும் கோபம் இல்லை, வருத்தமும் இல்லை. பெரிய ஃப்ரெண்ட்ஷிப்பும் இல்லை. எல்லாத்துக்கும் டைம் இல்லைன்னுதான் முடிக்க வேண்டியிருக்கு!’’‘‘கார்த்தி, தனுஷ், விஜய், சூர்யா, விஷால்னு நடிச்சிட்டீங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் என்ன பிடிக்கும்?’’

‘‘கார்த்தியோட ரெண்டு படம், அதே மாதிரி விஜய் கூடவும் ரெண்டு படம் செய்துட்டேன். கார்த்தி ஜாலியா பழகுவார். எனக்கு தமிழ் சரியா வராத நேரங்களில் அவர் கை கொடுப்பார். விஜய் சார் பெரிய மாஸ். அமைதியா இருந்து, கேமரா அவர் பக்கம் திரும்பினதும் வேற ஆளா மாறிடுவார். ‘துப்பாக்கி’ எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சூர்யா ரொம்ப அமைதி. ஸ்கிரீன்ல ப்ரெசன்ஸ் கொடுத்துட்டு, தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பார். தனுஷ் செட்டில் ரொம்ப துறுதுறு. கலகலப்பா இயல்பா பழகுவார். விஷால் கூட இப்பதான் ‘பாயும் புலி’ பண்றேன்.

 கூல் நடிகர். தயாரிப்பாளர், நடிகர்னு எல்லாத்திலும் ப்ரில்லியன்ட்!’’‘‘ ‘காக்கா முட்டை’யில் ஐஸ்வர்யா இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிச்சிருக்காங்க. அப்படி ஒரு ரோல் உங்களுக்கு கிடைச்சா...’’‘‘எப்பவாவது அபூர்வமாதான் ஹீரோயின்களை மையப்படுத்தியும், குழந்தைகளை வச்சும் படங்கள் வருது. சவாலான கேரக்டர்கள் எனக்குக் கிடைச்சா... அது மனசுக்குப் பிடிச்சா... ஓகே... தாராளமா செய்வேன்!’’

‘‘காதல், கல்யாணம்... சிந்திக்கவே இல்லையா..?’’‘‘பரபரன்னு ஓடிக்கிட்டு இருக்கும்போது எப்படி..? கல்யாணம் ரொம்ப முக்கியமான விஷயம். இந்த பரபரப்பு முடிச்சிட்டு பக்குவமா பார்த்துக்கலாம். இப்போதைக்கு வேண்டாமே!’’

- நா.கதிர்வேலன்
அட்டை மற்றும்
படங்கள்: புதூர் சரவணன்