கவிதைக்காரர்கள் வீதி





பெண்மை


அவள் தினமும் ரசிக்கும்
நிலைக்கண்ணாடியையும்
அவளை தினமும் ரசிக்கும்
குளியலறைச் சுவர்களையும்
பெண்ணாக்கி வைத்திருக்கிறாள்
ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டி!
- தெ.சு.கவுதமன், சென்னை-52.

பகிர்தல்

வந்தபின்
பகிர்ந்து கொள்கின்றன
நீ வராத
தனிமையின் காத்திருப்புகளை
மௌனம்
- தமிழ்நாயகி, சேலம்.

நிரம்பல்

பக்கத்து வீட்டுக்கு
குடிவருவோர்
பால் காய்ச்சும்போது
அவர்களின் மனசும் வீடும்
விசாலமாகவே உள்ளன.
மறுநாளிலிருந்தே
நிரம்பிடத் தொடங்குகின்றன
இரண்டிலும் ஏதேதோ...
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

நிற்றல்

ஒலிபெருக்கியில்
சினிமா பாடல்
பாதியில் நிற்கிறது
பறவையின் பாடல்!
- பெ.பாண்டியன், காரைக்குடி.

விளையாடல்

சன்னதியில் சத்தத்துடன்
குழந்தை விளையாடுகிறது
அதட்டிவிட்டு
அம்மா திரும்பினால்,
குழந்தையுடன் கடவுள்
விளையாடிக் கொண்டிருக்கிறார்
- கே.கமலவேணி, ஈரோடு.

தூரம்

நமது கைப்பேசிகளுக்கு
இடையில் இருக்கிறது
நம் காதலின் தூரம்
- அ.கோ.விஜயபாலன், திருவாரூர்.