குருப்பெயர்ச்சி பலன்கள்



சிம்மம்

(21.11.2010 முதல் 7.5.2011 வரை)
உங்க பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் கடந்த ஓராண்டாக 7ம் வீடு, 8ம் வீடுன்னு மாறி மாறி அமர்ந்ததால தடுமாறிப் போனீங்க; பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டது. இப்ப 21.11.2010 முதல் 8ம் வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை நீடிக்கறாருங்க.21.11.2010 முதல் 2.1.2011 வரை: பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4&ம் பாதத்தில் செல்வதால செல்வாக்கு கூடுமுங்க. பதவிகள் தேடி வரும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்தை சீர்திருத்தம் செய்வீங்க. நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமா தீர்ப்பாகும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை: ரோக சப்தமாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் செல்வதால திருமணம், சீமந்தம்னு நடக்குமுங்க. அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்துல போறதால எதிர்பார்ப்புகள் நிறைவேறுமுங்க. குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குப் போய் நேர்த்திக் கடன் நிறைவேற்றுவீங்க. வியாபாரத்துல உங்க அணுகுமுறை மாறும். டிசம்பர், மார்ச்ல புது ஏஜென்ஸி எடுப்பீங்க. இரும்பு, கெமிக்கல், ஏற்றுமதி&இறக்குமதி வகைகள்ல லாபமுண்டுங்க. உத்யோகத்துல திறமையை நிரூபிப்பீங்க. மேலதிகாரி பாராட்டுவாருங்க. புது வேலைக்கு மாறுவதானால் யோசிச்சு செய்ங்க. கன்னிப்பெண்களுக்கு மனக் குழப்பம், தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்; பெற்றோர் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீங்க. மாணவர்கள் கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தணும். கலைஞர்களுக்கு ஒருபக்கம் விமர்சனம் இருந்தாலும், திறமையால சாதிப்பீங்க. இந்த குருப் பெயர்ச்சி செலவையும், அலைச்சலையும் தந்தாகூட, வருங்காலத் திட்டங்கள்ல சிலதை நிறைவேற்றவும் செய்யுமுங்க.

பரிகாரம்:காஞ்சிபுரம்&உத்திரமேரூர் பாதையில் உள்ள திருப்புலிவனத்துல அருள்பாலிக்கும் வியாக்ரபுரீஸ்வரரையும், சிம்மகுரு தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திர நாள்ல வணங்குங்க. விபத்தில் சிக்கினவங்களுக்கு உதவுங்க. வெற்றி உங்க கையிலதான்.

கன்னி

சுக ஸ்தானாதிபதியான குரு பகவான் கடந்த ஓராண்டாக 6ம் வீடு, 7ம் வீடுன்னு மாறி மாறி அமர்ந்து ஓய்வே எடுக்க முடியாதபடி வேலைச்சுமை தந்தாரே, அவர் 21.11.2010 முதல் 7.5.2011 வரை 7ம் வீட்ல ஆட்சி பெற்று அமர்கிறாருங்க.  21.11.2010 முதல் 2.1.2011 வரை: சுக, சப்தமாதிபதியான குரு பகவான், தன் நட்சத்திரமான பூரட்டாதி 4&ம் பாதத்தில் செல்வதால புதிய முயற்சிகள் கை கூடும். பூர்வீக சொத்து சிக்கல் தீரும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருக்கறவங்களாலும் ஆதாயம் உண்டுங்க.   3.1.2011 முதல் 13.3.2011 வரை: பூர்வ புண்ய, ரோகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் போறதால, தள்ளிப் போன திருமணம் உடனே முடியுமுங்க. பிள்ளைங்க பொறுப்பா நடந்துப்பாங்க. பழைய கடன்ல ஒரு பகுதி அடையும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் உங்க ராசிநாதனும்,

ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்துல செல்வதால வேலை கிடைக்கும். கால் வலி, முதுகு வலி நீங்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீங்க. வியாபாரத்துல தடுமாறிக்கிட்டிருந்த நீங்க, இனி திட்டம் போட்டு செயல்படுவீங்க. பர்னீச்சர், உணவு, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டுங்க. டிசம்பர், மார்ச்ல புது ஒப்பந்தம் ஏற்பாடாகுமுங்க. கூட்டுத்தொழில்ல பங்குதாரர்கள் பணிந்து வருவாங்க. உத்யோகத்துல படாத பாடுபட்டு வேலை செய்தும் நற்பெயர் இல்லாத நிலை மாறிடுமுங்க. மார்ச், ஏப்ரல்ல பதவி, சம்பள உயர்வு எல்லாம் உண்டுங்க. அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கன்னிப்பெண்களுக்கு கசந்த காதல் இனிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். கலைஞர்களோட படைப்புகளை அரசு கௌரவிக்கும். இந்த குருப் பெயர்ச்சி சமூகத்தில் மதிப்பு, மரியாதை தரும்; நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றும்.  

பரிகாரம்: சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருள்பாலிக்கும் குரு பகவானை அனுஷம் நட்சத்திர நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்க. புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவுங்க. நல்லது நடக்கும்.

துலாம்

இதுவரை உங்க ராசிக்கு 5, 6 வீடுகள்ல மாறி மாறி அமர்ந்து சிரமப்படுத்திய குரு பகவான், இப்ப 21.11.2010 முதல் 6ம் வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை நீடிக்கறதால, சந்தோஷமும், சங்கடமும் கலந்தே வருமுங்க. 21.11.2010 முதல் 2.1.2011 வரை: தைரிய ரோகாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4ம் பாதத்தில் செல்வதால சுபச் செலவுகள், திடீர் பயணங்கள்னு ஏற்படுமுங்க. வி.ஐ.பிகள் உதவுவாங்க. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடாதீங்க. 3.1.2011 முதல் 13.3.2011 வரை: சுக, பூர்வ புண்யாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் செல்வதால அமைதி கிட்டுமுங்க. பிரிந்தவங்க ஒண்ணு சேருவீங்க. மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீங்க.

14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் பாக்ய, விரயஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கிடும். கௌரவப் பதவி தேடி வருமுங்க.வியாபாரத்துல ஜனவரி, பிப்ரவரியில பழைய பாக்கிகள் வசூலாகிடும். மர வகைகள், உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகள்ல லாபம் உண்டுங்க. உத்யோகத்தில் நேரம், காலம் பார்க்காம உழைக்க வேண்டியிருக்குமுங்க. மேலதிகாரிகள் பாராட்டு, எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு எல்லாம் மார்ச், ஏப்ரல்ல கிடைக்கும். கன்னிப்பெண்கள் மறதி, மந்த நிலையிலிருந்து விடுபடுவீங்க. மாணவர்கள் நினைவாற்றலை அதிகப்படுத்த கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கோங்க. கலைஞர்களுக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்; ஆனா, சம்பள விஷயத்துல கறாரா இருந்திடுங்க.இந்த குருப் பெயர்ச்சி, விரயச் சனியின் சீற்றத்தைக் குறைக்கறதோட, வளைந்து கொடுக்கும் பண்பையும் கற்றுத் தருமுங்க.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் உத்திரட்டாதி நட்சத்திர நாள்ல போய் வணங்குங்க. வாய் பேச இயலாதவங்களுக்கு உதவுங்க. வாழ்வில் இனிமை கூடும்.

விருச்சகம்

அப்பப்ப நன்மைகளைத் தந்துக்கிட்டிருந்த குரு பகவான், 21.11.2010 முதல் 5ம் வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை அங்கேயே நீடித்து, உங்க வாழ்க்கைத் தரத்தை ஒருபடி உயர்த்துவாருங்க. 21.11.2010 முதல் 2.1.2011 வரை: உங்க தன, பூர்வ புண்யாதிபதியான குரு பகவான், தன்னோட பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்துல போறதால, குழந்தை பாக்கியம் கிடைக்குமுங்க. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீங்க. பேச்சில் தடுமாற்றம் நீங்கும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை: தைரிய சுகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்துல குரு பகவான் போறதால, பழுதான வாகனத்தை மாற்றி, புதுசு வாங்குவீங்க. வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பழைய கடன்ல ஒரு பகுதியை பைசல் செய்வீங்க. திடீர் பயணங்கள் ஏற்பாடாகுமுங்க.

14.3.2011 முதல் 7.5.2011 வரை: குரு பகவான் உங்க அஷ்டம லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்துல செல்வதால கொஞ்சம் அலைச்சல் இருக்குமுங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. அயல்நாட்டுப் பயண வாய்ப்பு இருக்குங்க.வியாபாரத்துல உங்க அணுகு முறையை மாற்றி, போட்டியாளர்களை முறியடிப்பீங்க. மார்ச், ஏப்ரல்ல லாபம் அதிகரிக்குமுங்க. அரிசி, எண்ணெய், மருந்து, ரசாயனப் பொருட்கள், ஏற்றுமதி&இறக்குமதி வகைகள்ல கூடுதல் வருமானம் கிடைக்குமுங்க. உத்யோகத்துல குறை சொல்லிக்கிட்டிருந்த உயரதிகாரி மனம் மாறுவார். ஏப்ரல், மே வாக்கில் எதிர்பார்த்தபடி பதவி, ஊதிய உயர்வு கிடைக்குமுங்க. கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் இனி சிறப்பாக நடக்கும். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடந்துக்கோங்க. கலைஞர்களின் படைப்புகள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகும்.இந்த குருப் பெயர்ச்சி ஏமாற்றங்கள்லேர்ந்து விடுவித்து, நினைத்ததை நிறைவேற்றும் வல்லமை தருமுங்க.
 

பரிகாரம்: திருச்செந்தூரில் அருள்புரியும் முருகப் பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் அஸ்வினி நட்சத்திர நாள்ல போய் வணங்குங்க. இதய நோயால் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுங்க. உயர்வு நிச்சயம்.

(பிற ராசிகள் - அடுத்த இதழில்)
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்