ஜெயிச்சுட்டோம் மாறா..!
சமீபத்தில் அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் உலகின் முதல் மனித சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளனர். இதற்குப் பின்னால் இந்தியாவில் பிறந்த மருத்துவர் இருக்கிறார் என்பது ஹைலைட்.  நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான, 41 வயதான ஆஸ்கார், கடந்த ஏழு ஆண்டுகளாகவே புற்றுநோயால் தனது இரண்டு சிறுநீரகங்களையும் சிறுநீர்ப் பையின் பெரும்பகுதியையும் இழந்து டயாலிசிஸை நம்பி வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரொனால்டு ரீகன் யுசிஎல்ஏ மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் நிமா நாசிரியும், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக சிறுநீரகவியல் துறை இயக்குநர் இந்தர்பீர் கில்லும் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இவர்கள் உறுப்பு தானம் செய்பவரிடமிருந்து ஒரு சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பையையும் பெற்று மாற்று அறுவை சிகிச்சையை செய்தனர்.
இந்தப் புதிய மாற்று சிறுநீரகம், உடனடியாக சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கியதுடன், ஆஸ்காரின் டயாலிசிஸ் தேவையையும் நீக்கியுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாராகி தற்போதே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
பி.கே.
|