இந்தியர்கள் கேன்சல் செய்யும் திருமணத்தால் துருக்கிக்கு பிரச்னை!
பல இந்தியர்கள் இன்று ‘துருக்கி’ நாட்டில் இருந்து வரும் ஆப்பிளைக் கூட புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.காரணம் ‘ஆபரேஷன் சிந்தூர்’.பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கண்டித்திருக்கிறது துருக்கி.  அத்துடன் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை நம் நாட்டின் சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் எடுத்துள்ளனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; ஏற்படுத்தியும் வருகிறது.  இச்சூழலில் நம் இந்தியர்கள் கேன்சல் செய்யும் திருமணத்தால் துருக்கிக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா?!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலாப் பயணிகளைக்கொன்றனர்.  இதையடுத்து நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானைப் பந்தாடியது. நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தான் உள்ளே புகுந்து தாக்கின.இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
 நம் நாட்டின் இந்த பதிலடி தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன. அதோடு பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும், வெளிப்படையாகவும் துருக்கியும், அஜர்பைஜானும் ஆதரவை அறிவித்தன.இதில் துருக்கி, நம் நாட்டுக்கு பெரும் துரோகம் செய்துள்ளதாகவே இந்திய மக்கள் நம்புகின்றனர்.துருக்கி, சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் துருக்கிக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல் 2023ம் ஆண்டு துருக்கியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் நம் நாடு துருக்கிக்கு உதவிகளை வழங்கியது. நம் நாட்டில் இருந்து மீட்புப் படையினர், டாக்டர்கள், நர்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், அதையெல்லாம் துருக்கி மறந்துவிட்டு பாகிஸ்தான் பக்கம் சென்றதுடன் நம்மைக் கண்டிக்கவும் செய்தது. அதுமட்டுமின்றி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் நம்மைத் தாக்க ட்ரோன் மற்றும் அதனை ஆபரேட் செய்யும் ஆபரேட்டர்களை வழங்கியது.
இதை முதுகில் குத்தும் துரோகமாகவே இந்தியர்கள் கருதுகின்றனர். இதனையடுத்தே துருக்கியை புறக்கணிக்கும் செயல் தீவிரமாகி இருக்கிறது. விளைவு... பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கியைப் புறக்கணிக்கும் முடிவை சுற்றுலாப் பயணிகள் எடுத்துள்ளனர்.
அதேபோல் வர்த்தகர்களும் துருக்கி நாட்டின் பொருட்களை இறக்குமதி செய்வதையும், துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் அடியைக் கொடுக்க உள்ளது.இப்படியான சூழலில்தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது துருக்கி சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இடம் என்பதால் நம் நாட்டைச் சேர்ந்த பணக்காரர்கள் துருக்கியில் வைத்து திருமணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன்மூலம் துருக்கி கல்லா கட்டி வந்தது.
தற்போது நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டால் பலரும் துருக்கியில் திருமணம் செய்ய எடுத்த முடிவைக் கைவிட்டுள்ளனர். இதன்மூலம் துருக்கிக்கு நேரடியாக ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று அந்தப் பிரிவை நன்கு அறிந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் துருக்கியில் வைத்து நம் நாட்டைச் சேர்ந்தவர்களின் 50 திருமணங்கள் நடந்தன. இதில் ஒவ்வொரு திருமணத்துக்கான செலவும் குறைந்தது ரூ.25 கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடி வரை இருந்தன.
இந்தத் திருமணம் என்பது துருக்கியில் ஹோட்டல் பிசினஸை மட்டும் வளர்க்கவில்லை. அலங்காரம் செய்யும் ஊழியர்கள், மலர் விற்பனையாளர்கள், உணவு வழங்கும் நிறுவனங்கள், டிராவல் ஏஜென்ட், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.
துருக்கியில் வரும் நாட்களில் 50 திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டன. இதில் தற்போது 30 திருமணங்கள் தொடர்பான பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பலரும் துருக்கிக்கு பதில் நம் நாட்டில் ராஜஸ்தான், கோவா, கேரளா, உதய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனால் துருக்கிக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் துருக்கியில் நடக்கும் இந்தியர்களின் திருமணத்தால் அந்த நாட்டுக்கு நம் நாட்டு மதிப்பில் ரூ.1,170 கோடி வரை வருமானம் கிடைக்கும். தற்போது அந்த வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும் என அடித்துச் சொல்கிறார்கள்.
என்.ஆனந்தி
|