அஜித்தின் ரோல் மாடல்!
சில நாட்களுக்கு முன்பு இத்தாலியின் இமோலா நகரத்தில் இருந்த ஒரு சிலையின் முன்பு மனம் உருகி, மிகுந்த மரியாதையுடன், மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார் நடிகர் அஜித்குமார். மட்டுமல்ல, சிலையின் பாதங்களுக்கு முத்தமிட்டார். இதை வீடியோவாக்கி, சமூக வலைத்தளங்களில் வெளியிட, அது யாருடைய சிலை என்று லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர்.
 பிறகுதான் தனது ரோல் மாடலான அயர்டன் சென்னாவின் சிலைக்குத்தான் அஜித் மரியாதை செலுத்தியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அடிக்கடி தனது ரோல் மாடல் அயர்டன் சென்னா என்று அஜித் சொல்வது வழக்கம்.
யார் இந்த அயர்டன் சென்னா?
பிரேசிலில் உள்ள சாவ் பாலோ நகரில் வசித்துவந்த ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர், அயர்டன் சென்னா. இவரது தந்தை ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்கு ஏராளமான நிலங்கள் இருந்தன. சென்னாவுக்கு 4 வயதாக இருந்தபோதே கார்களின் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.  சென்னாவுக்கு 7 வயதான போது , தந்தையின் பண்ணையில் ஜீப் ஓட்ட கற்றுக்கொண்டார். அந்த வயதிலேயே கிளட்சைப் பயன்படுத்தாமல் கியர்களை எப்படி மாற்றுவது என்பதையும் அறிந்துகொண்டார். 13 வயதிலேயே கார்ட் ரேஸிங் எனும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்.  ஃபார்முலா ஒன் கார் பந்தய வரலாற்றில் ஜாம்பவான்களான ஷூமேக்கர், ஹாமில்டன், அலோன்சோ உட்பட பல முன்னணி வீரர்களின் ஆரம்பப்புள்ளி கார்ட் ரேஸிங்தான்.
இந்தப் பந்தயத்துக்கான வாகனத்தை சென்னாவின் தந்தைதான் வடிவமைத்துக் கொடுத்தார். கார்ட் ரேஸிங்கில் சென்னாவுடன் போட்டியிட்டவர்கள் எல்லோரும் அவரைவிட மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 17 வயதில் தென் அமெரிக்கன் கார்ட் ரேஸின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் சென்னா. இதற்குப் பிறகு ஐந்து முறை கார்டிங் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு, இரண்டு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் ஓப்பன்-வீல் ரேஸிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார் சென்னா. ஒரு வருடத்திலேயே ஐரோப்பிய சாம்பியன்களை எல்லாம் வென்று, கார் ரேஸிங் உலகத்தில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தார். அப்போது அவரது வயது 21தான்.
இந்நிலையில் குடும்ப பிசினஸை கவனித்துக்கொள்ளும்படி சென்னாவின் மீது அழுத்தம் ஏற்பட்டது. தனது ரேஸிங் பயணத்தைக் கைவிட்டுவிட்டு, பிரேசிலுக்குத் திரும்ப முடிவு செய்தார். சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள ஒரு கார் பந்தய அணியிடமிருந்து சென்னாவுக்கு அழைப்பு வந்தது. தங்களது அணியில் சேர்ந்து பந்தயத்தில் கலந்து கொள்ளும்படியும், அதற்காக ஒரு பெரும் தொகை வழங்கப்படும் என்றும் அந்த அணி சென்னாவிடம் சொல்லியது. பிரேசிலுக்குத் திரும்பிய சென்னா, சில நாட்களுக்குப் பிறகு முழுமையாக ரேஸிங்கில் ஈடுபடுவதற்காக இங்கிலாந்துக்குத் திரும்பினார். 1982ல் ஸ்பான்சர்ஷிப்புடன் களமிறங்கிய சென்னா, 17 போட்டிகளில் வெற்றிபெற்றார். ஐரோப்பிய சாம்பியன்கள் எல்லாம் சென்னாவைப் பார்த்து மிரண்டு போய்விட்டனர்.
சென்னாவின் ரேஸிங் பயணம் சிகரத்தை நோக்கி வேகமாக சென்றது. 1984ல், அதாவது தனது 24 வயதிலேயே ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் அளவுக்குத் தகுதி பெற்றுவிட்டார். பல கார் பந்தய நிறுவனங்கள் தங்களது குழுவில் இணைந்து, போட்டியில் பங்குபெறும்படி சென்னாவுக்கு அழைப்பு விடுத்தன.
டோல்மேன், மெக்லேரன், வில்லியம்ஸ், லோட்டஸ் ஆகிய ரேஸிங் நிறுவனத்தில் இணைந்து ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் கலந்துகொண்டார். 1988, 1990, 1991 ஆகிய வருடங்களில் நடந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தை தட்டினார்.
மூன்று முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சிறப்பையும் தன்வசமாக்கினார். கடந்த 1994ம் வருடம் மே மாதம் ஒன்றாம் தேதியன்று இமோலாவில் உள்ள சர்க்யூட் ரேஸிங் டிராக்கில் நடந்த சான் மரினோ கிராண்ட் பிரிக்ஸ் எனும் ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டியின்போது ஏற்பட்ட கோர விபத்தில் மரணமடைந்தார் சென்னா.
அப்போது அவரது வயது 34தான். மே 4ம் தேதியனறு சென்னாவின் உடல் பிரேசிலுக்குக் கொண்டுவரப்பட்டது. சாவ் பாலோ நகரில் 5ம்தேதி நடந்த சென்னாவின் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
சாவ் பாலோ நகர வரலாற்றிலேயே ஓர் இறுதி ஊர்வலத்தில் இவ்வளவு லட்சம் பேர் கலந்துகொண்டது அதுவே முதல் முறை. மட்டுமல்ல, பிரேசில் அரசு மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரித்தது. சென்னா இறந்த வருடத்தில் பிரேசிலின் கால்பந்து அணி தட்டிய உலகக் கோப்பையை அவருக்கு அர்ப்பணித்தது.
தவிர, சென்னாவின் மரணத்துக்குப் பிறகு 1994ல் நடந்த முக்கியமான கார் பந்தயங்களில் எல்லாம் வெற்றிபெற்றவர்கள் தங்களின் கோப்பைகளை சென்னாவுக்கே அர்ப்பணித்தனர். அந்தளவுக்கு அவர் புகழ்பெற்றிருந்தார். கார் பந்தயம் மட்டுமல்லாமல், விளையாட்டு உலகில் மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது அவரது மரணம். அஜித் ஏன் சென்னாவைத் தனது ரோல் மாடலாகக் கருதுகிறார் என்பது இதிலிருந்தே புரியும்.
த.சக்திவேல்
|