கலைஞரிடம் இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியவை!
இந்திய விடுதலைப்போராட்டம், சுயமரியாதை இயக்கம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்சி, இந்துத்துவ அரசியல் எழுச்சி, தலித், முஸ்லீம் போன்ற அடையாள அரசியல் அடிப்படையிலான இயக்கங்கள், உலகமயமாக்கல், நவீன தொழில்நுட்பம்... என ஏராளமான மாற்றங்களைத் தன் கண்முன் கண்டவர், டாக்டர் கலைஞர்.
அதேபோல் அவர் எதிர்கொண்ட களங்களும் எதிரிகளும்கூட ஏராளம். ஒரு நீண்ட வரலாற்றின் சாட்சியமாக இருந்த கலைஞர், அந்த வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒருவராகவும் வரலாற்றின் ஒருபகுதியாகவும் மாறிப்போனவர்.
கலைஞர் என்னும் மனிதரை நாம் எப்படி புரிந்துகொள்ளலாம்?
ஓர் எழுத்தாளராக, திரைப்படம் என்னும் மாபெரும் செல்வாக்கு பெற்ற ஊடகத்தில் மகத்தான தாக்கம் செலுத்திய படைப்பாளியாக, இதழியலாளராக, சிந்தனையாளராக, ஆட்சியாளராக, அரசியல் தலைவராக... என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடையாளங்களுக்குள் அடங்காததே அவர் அடையாளம்.
முற்றுமுழுதாகத் தமிழ்வழியாகவே இயங்கிய கலைஞர், இன்று இந்தியளவிலும் நினைவுகூரப்படும் தலைவராக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைத்த திராவிட இயக்கத்தின் கருத்தியல் விழுமியங்கள் இன்று இந்திய அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அப்படி கூர்ந்து கவனிக்கும்படி கலைஞர், தன் செயலால் அனைத்து மாநிலத்தவரையும் கொண்டு வந்திருக்கிறார் என்பதுதான் முக்கியம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கலப்புத் திருமணம் செய்வோருக்கு உதவித்தொகை, கலப்புத் திருமணம் என்றால் இருவரில் ஒருவரில் ஒடுக்கப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற வரையறை, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, பெண்களுக்கு உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்துரிமை...
என்று கலைஞர் கொண்டுவந்த எல்லாத் திட்டங்களுமே தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல... இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துபவை; தேவையானவை; பன்மைத்துவத்தை வலியுறுத்துபவை..அதனால்தான் கலைஞரிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என திரும்பத் திரும்ப தமிழக மக்கள் சொல்கிறார்கள்.அது உண்மைதானே!
|