செய்கூலி சேதாரம் யாருக்கு..?
தங்க நகைக்கடன்... ரிசர்வ் வங்கி விதிமுறையால் பாதிக்கப்படும் எளிய மக்கள்...
சமீபத்தில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த தங்க நகைக்கடன் மீதான புதிய கட்டுப்பாடுகள், பொது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பொதுவாக இந்திய நடுத்தரக் குடும்பங்களில் தங்கம் வாங்குவதே அவசரத்திற்குத் தேவைப்படும் போது அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அவர்களின் நம்பிக்கையில் பேரிடியாக விழுந்துள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாட்டின்படி இனி தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்படும். அதாவது ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கான தங்கம் என்றால் 75 ஆயிரம் ரூபாய்தான் கடன் வழங்கப்படும்.கொரோனா காலத்தில் இந்த நகையின் மதிப்பில் 80 சதவீதமாக கடன் உயர்த்தப்பட்டிருந்தது.  அதை இப்போது குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. அடுத்ததாக அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இத்துடன் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தரச்சான்றிதழை வழங்க வேண்டும் எனவும், தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெறமுடியும் என்றும் தெரிவித்துள்ளது. 
அதேபோல ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே கடன் வழங்க அனுமதி தந்துள்ளது. இதுதவிர, இனி அடமானம் வைக்கப்படும் நகைகள் 22 கேரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்பட்டு கடன் வழங்கப்படும்.  அடுத்ததாக கடன் தொகையைத் திருப்பி செலுத்திவிட்டால் ஏழு வேலை நாட்களுக்குள் வங்கிகள் சம்பந்தப்பட்டவரிடம் நகையைத் திருப்பித்தரவேண்டும். தாமதம் ஏற்பட்டால் அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இப்படி ஒன்பது அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதாவது நகையை அடமானம் வைப்பவர்கள் ஆண்டு முடியும் தருவாயில் வட்டியைக் கட்டிவிட்டு மீண்டும் நகையை மறு அடமானம் வைப்பார்கள்.
இந்த நடைமுறையை மாற்றி ஆண்டு முடியும்போது முழுக் கடன் தொகையையும் செலுத்திவிட்டு நகையைத் திருப்ப வேண்டும் என்றும், அதற்கு அடுத்த நாளில் அந்த நகையை அடமானம் வைக்கமுடியும் எனவும் தெரிவித்தது.
இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் ரொம்பவே பாதிக்கப்படுவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆண்டு முடிவில் நகையைத் திரும்பப் பெற - மீட்க - போதிய பணம் இல்லாதவர்கள் முழுத் தொகையையும் கட்டமுடியாமல் கந்துவட்டிக்காரர்களிடமே சென்று நிற்பர்; கையேந்துவர்.
முழுத்தொகையையும் அவர்களிடம் அநியாய வட்டிக்குப் பெற்று, அதன்வழியே நகையை மீட்டெடுத்து பின்னர் மீண்டும் மறு அடமானம் வைப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மேலும் ஓர் இடி இறங்கியுள்ளது. அதுதான் மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பது அறிவிப்புகள். பொதுவாக நகைக்கடனை வங்கிகளும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன. மூன்றாவதாக வட்டிக் கடைகளில் நகைகளை அடமானம் வைப்பார்கள். இந்த அறிவிப்பு கெடுபிடிகள் இனி ஏழை, எளிய மக்களை வட்டிக் கடைகளை நோக்கியே நகர வைக்கும் என வேதனை தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்த சில வங்கியாளர்கள். இந்த விஷயங்கள் குறித்து பேசும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், ‘‘ரிசர்வ் வங்கி சமீப காலமாகவே அதன் நம்பிக்கையை இழந்து நிற்கிறது...’’ என்கிறார்.
‘‘பல விஷயங்களில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் திருப்திகரமா இல்ல. அது சாமானிய மக்களுக்கு சாதகமாகவே இருக்கல. தனியார்மயத்தையே ஊக்குவிக்குது. இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். முதல்ல கிரடிட் ரேட்டிங்கைக் குறிப்பிடலாம். முன்பு இது ரிசர்வ் வங்கியிடம்தான் இருந்தது.
2002க்குப் பிறகு இதனை சிபில் கையில் கொடுத்துட்டாங்க. சிபில் டிரான்ஸ்யூனியன் ஒரு தனியார் நிறுவனம். இதன் தலைமையிடம் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கு. இவங்கதான் இன்று 60 கோடி இந்தியர்கள் மற்றும் சுமார் மூன்று கோடி சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுக்கலாமா வேண்டாமானு தீர்மானிக்கிறாங்க.
எதற்கு இதை தனியார் பண்ணணும் என்பதுதான் கேள்வி. அவங்க பண்றதிலும் வெளிப்படைத்தன்மையும் இல்ல. அடுத்து டிமானிட்டேஷனை எடுத்துக்கோங்க.
ஆரம்பத்துல ரிசர்வ் வங்கி எதிர்த்தது. பிறகு இவ்வளவு சாதகங்கள் இருக்கு, பண்ணிக்கோங்கனு அரசிடம் தெரிவித்தது. இப்படி சொல்லிட்டே போகலாம்.இப்ப 75 சதவீதம்தான் நகைக்கடன்னு சொல்லியிருக்கு. இன்னைக்கு 85 முதல் 90 சதவீதம் வரையில் வங்கிகள் தாராளமாக நகைக்கடன் கொடுக்கலாம். கொரோனா காலத்தில் 80 சதவீதம் தந்தாங்க. இப்போது 75 சதவீதமாக குறைச்சிருக்காங்க.
எப்போது ஒருவர் நகையை அடகு வைக்கிறார்னா, கையில் பணம் ஒண்ணுமே இல்லாது வேறு வழியே இல்ல என்கிற நிலையில்தான். சிலர் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக்கொண்டு தாலியைக்கூட அடகு வைக்கிறாங்க.
அவசரத்துக்குனு வைக்கும்போது 75 சதவீதம் மட்டுமே தருவேன்னு சொல்றது சரியில்ல. இந்த விதிமுறையை மாத்தி அமைக்கணும். அதேபோல், சொந்த நகை என்பதற்கான ரசீது கொண்டு வாங்கனு சொல்லப்பட்டிருக்கு.
ரசீது இல்லாதவர்கள் சுயமா ஒரு ஒப்புதல் கொடுக்கலாம்னு சொன்னாகூட பரவாயில்ல.அந்த நகை அவருக்கு எப்படி உரிமையானது என்பது பற்றி ஒரு ஆவணம் உருவாக்குங்கனு ரிசர்வ் வங்கி சொல்லுது. அப்போ, வங்கிகள் இதனை நடைமுறைப்படுத்தும் போது மக்களிடம் கட்டாயம் ரசீது கேட்பாங்க. பாட்டி, அம்மா காலத்து நகைகள்னா அதற்கான ரசீதுக்கு எங்கே போறது? அதனால் ஐந்து லட்சம் ரூபாய் வரை ஏழை மக்கள் நகைக்கடன் வாங்கும்போது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கக்கூடாதுனு சொல்லணும். அதேபோல் முன்னாடி என்னால் நகையைத் திருப்ப முடியலனா எனக்கு மூன்று மாதம் நோட்டீஸ் கொடுத்திட்டு நகையை ஏலம் விட்டு பணத்தை எடுத்திடுவாங்க.
ஆனா, இப்ப புதுசா என்ன சொல்றாங்கனா கடனை திருப்பி செலுத்தக்கூடிய திறன் இருக்கானு கேட்கறாங்க. அதாவது வருமானச் சான்றிதழ் வேணும்னு சொல்றாங்க. இதுவரை இப்படியொரு விஷயம் இருந்ததில்ல. நகைக்கடன் வாங்குகிற எல்லோரும் வங்கிகளிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேல செய்யல. பெரும்பாலான மக்கள் அன்றாடங்காச்சிகள்தான். அவங்க வருமானச் சான்றிதழுக்கு எங்க போவாங்க? அவங்கள வருமானச் சான்றிதழ் கொண்டு வரச் சொல்வதன் மூலம் அவங்களுக்கான கடனை மறுக்குறாங்க. நகையைத் திருப்ப முடியலனா ஏலம் விட்டு பணத்தை எடுத்துக்கலாம்தானே? அதைவிடுத்து கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருக்கானு பார்க்க வருமானச் சான்றிதழ் கேட்பது மற்றொரு மோசமான அம்சம்.அடுத்து நகைக்கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது ஏழு வேலை நாட்களுக்குள் கொடுக்கணும்னு சொல்றாங்க. இல்லையென்றால் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வங்கி தரணும்னு அறிவிப்பில் சொல்லப்பட்டிருக்கு.
ஆனா, இதில் பாயிண்ட் என்னனா நான் கடனை எப்போது அடைக்கிறேனோ அப்போதே கேள்வி கேட்காமல் நகையைத் திருப்பிக் கொடுத்திடணும். அதுதான் சரியானது.
கடன் அடைச்சபிறகும் ஏன் ஏழு நாட்கள் வரை நேரம் ஒதுக்குறீங்க? இது மிஸ்யூஸ் பண்ணப்பட வாய்ப்பு இருக்கு. இதுவும் தவறான விதிமுறைதான்.
இப்படி பல குளறுபடிகள் இதுல இருக்கு. இப்ப தொழில் கடன் கொடுக்கறாங்க. இதில் 90 டூ 95 சதவீதம் வசூலாகலாம். மீதி ஐந்து சதவீதம் வசூலாகாமல் போகலாம். அதேபோல் கல்விக் கடன் கொடுத்தால்கூட 10 சத வீதம் நஷ்டமாகலாம்.
ஆனா, நகைக்கடன் கொடுத்தால் ஒரு பைசா கூட நஷ்டம் வராது. அப்படியிருக்கும் போது நகைக்கடனை எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் கொடுப்பதுதான் நல்லது. இதற்கு நிறைய கண்டிஷன் போடுறது மோசமான விஷயம். இப்ப ரிசர்வ் வங்கி இதனை வரைவுக் கொள்கைனு சொல்லித்தான் அறிவிப்பு வெளியிட்டிருக்கு.
அதாவது பொதுமக்கள், வங்கியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து வரும் கருத்துகளைக் கொண்டு இதனை மாத்தி அமைக்கலாம் என்பது வரைவுக் கொள்கை. ஆனா, நகைக்கடன் தொடர்பான அறிவிப்புகளும் விதிமுறைகளும் உடனே அமலுக்கு வரும்னு அறிவிச்சிருக்காங்க. ஒருபக்கம் வரைவுக் கொள்கைனு சொல்லிட்டு இன்னொரு பக்கம் அதற்கு நேர் எதிரா அமல்படுத்தப்படும்னு சொல்றது என்ன அர்த்தம்? இதுவும் ஏமாத்துற வேலையா இருக்கு. இந்த விதிமுறையில் சில வரவேற்கும் அம்சங்களும் இருக்குது. அதில் ஒண்ணு வெள்ளி நகைக்கும் கடன் வழங்கப்படும்னு சொல்லப்பட்டிருக்கு. அப்புறம், இந்த ஆவணங்கள் முழுக்க வட்டார மொழியில் இருக்கணும்னு கூறப்படுது.
ஒரு லோன் டாக்குமெண்ட் இருக்குதுனா தமிழ்நாட்டில் அதனை தமிழில் வழங்கணும். தமிழ்நாட்டுல இருந்தும் எனக்கு ஆங்கிலத்தில் தாருங்கள்னு கேட்டாலும் வங்கிகள் தரணும்.
இப்படி சில அம்சங்கள்தவிர மற்றவை எளிய மக்களை பாதிக்கக்கூடியவை.
இந்த மாதிரி கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்போது மக்கள் வங்கி நோக்கி வரமாட்டாங்க. கந்துவட்டி, வட்டிக்கடைகளை நோக்கி போகும் ஆபத்து இருக்கு. அதனால் மக்களை அதுபோன்ற சூழலுக்குத் தள்ளக்கூடாதுனு கேட்டுக்கிறோம்...’’ என்கிறார் சி.பி.கிருஷ்ணன்.
பேராச்சி கண்ணன்
|