தஞ்சாவூர் to துணை நடிகை to மிஸஸ் விஷால்..!



தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் நடிகர் என்று பெயர் எடுத்தவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.
47 வயதான விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வி திரைத்துறையில் மட்டுமல்லாமல், ரசிகர்களிடமும் இருந்தது. நடிகர் சங்கக் கட்டடம் முடிந்தபிறகுதான் திருமணம் என்று விஷால் வெளிப்படையாகக் கூறினார்.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் திறப்பு விழா காண இருப்பதால், தனது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று  தனக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் திருமணம் நடைபெறும் என்று ‘யோகி டா’ பட விழாவில் அறிவித்திருக்கிறார்.இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திரைத் துறைக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது.
தன்ஷிகாவுக்கும், விஷாலுக்கும் எப்படி காதல் மலர்ந்தது? இருவரும் ஜோடியாக நடித்ததில்லை. இருவரையும் இணைத்து கிசுகிசுவும் வந்ததில்லை. பிறகு எப்படி இவர்கள் இணைந்தார்கள் என்பதுதான் பலருடைய கேள்வி.காதல் மலர்வதற்கு ஆண்டுகள் தேவையில்லை, ஒரு நொடி பார்த்தால் மனசு குலுங்கிவிடும் என்பதற்கு விஷால் - தன்ஷிகா லவ்தான் சாட்சி.

சரி! யார் இந்த தன்ஷிகா?

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்ஷிகாவுக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்த அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் அவருடைய மாமா அருண். தற்போது அவர் உயிருடன் இல்லை. ஆர்ட்டிஸ்ட் மேேனஜரான அருண் அனைவருக்கும் பரிச்சயமானவர்.

கிராமத்திலிருந்து வந்த தன்ஷிகாவுக்கு சினிமாவுக்கான நடிப்பு, நடனம், சிலம்பம், நீச்சல் என அனைத்து பயிற்சிகளையும் முறையாகப் பயிற்றுவித்து ப்ரொஃபஷனல் நடிகை எனுமளவுக்கு
தன்ஷிகாவின் திறமையை கோலிவுட்டில் பேச வைத்தார்.

ஆரம்பத்தில் துணை நடிகையாக பல படங்களில் நடித்தவருக்கு கன்னடத்தில் ‘கேம்பா’ என்ற படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் சில படங்களில் நாயகியாக நடித்தவருக்கு ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘பேராண்மை’ கதாநாயகி என்ற நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது.

அதன்பிறகு தன்ஷிகாவின் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்து, ‘மாஞ்சா வேலு’, ‘நில் கவனி செல்லாதே’, ‘அரவான்’, ‘பரதேசி’ என்று பெரிய பட்ஜெட் படங்களிலும், பெரிய இயக்குநர்களின் படங்களிலும் நாயகி வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இப்படி பல படங்களில் நடித்துவந்தாலும் அறியப்படாத நடிகையாகவே பார்க்கப்பட்ட தன்ஷிகாவுக்கு திருப்புமுனையைக் கொடுத்த படம் ரஜினியின் ‘கபாலி’. அந்தப் படத்தில் ரஜினியின் மகளாக ரஜினியுடன் சேர்ந்து சண்டைக் காட்சியில் அசத்தியதால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.  தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவருக்கு ‘கபாலி’ தெலுங்கிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து பல மொழிகளில், பல படங்களில் நடித்து வந்தவரின் மார்க்கெட் அதன் பிறகு ‘டல்’ அடிக்க ஆரம்பித்தது.

மனதை ஒருமுகப்படுத்த பல சமய கோயில்களைச் சுற்றி வந்தார். ஒரு கட்டத்தில் சாய் பாபாவின் பக்தையாக மாறியவர் சாய் தன்ஷிகாவாக தனது பெயரை மாற்றிக்கொண்டார். பெயர் மாற்றம் அவருக்கு சில பல பட வாய்ப்புகளைக் கொடுத்தது.இந்த நிலையில்தான் விஷாலின் நட்பு அவருக்கு எதிர்பாராதவிதமாகக் கிடைத்தது. 

சில ஆண்டுகளுக்கு முன் ‘விழித்திரு’ என்ற படத்தில் நடித்தார் தன்ஷிகா. அந்தப் பட விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அப்போது தன்ஷிகா தனது பெயரைக் குறிப்பிடாததால், விழாவில் கலந்துகொண்ட டி.ராஜேந்தர் கோபத்தில் தன்ஷிகாவை அடுக்குமொழியில் வசை பாடினார்.

அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத தன்ஷிகா கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். டி.ராஜேந்தரை சமாதானப்படுத்தும் விதமாக அவர் காலில் வீழ்ந்து மன்னிப்பும் கேட்டார். ஆனால், டி.ராஜேந்தர் மன்னிக்காமல் அங்கிருந்து கடந்து சென்று விட்டார். இந்த நிகழ்வு அப்போது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

நடிகர் சங்கத்துக்கும் தகவல் சென்றது. நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் தன்ஷிகாவுக்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தினார் விஷால். ஏறத்தாழ அதுதான் விஷால் - தன்ஷிகாவின் முதல் சந்திப்பு என்று சொல்லப்படுகிறது. அது முதல் இருவரும் நட்பாகப் பழகத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பல ஆண்டுகளாகவே விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய வீட்டில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக தங்கள் மகனுக்கு ஒரு நடிகையைக் கட்டி வைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள் என்று விஷால் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஏனெனில், விஷால் அண்ணனும் நடிகருமான அஜய் கிருஷ்ணா, ‘திமிர்’ பட நடிகை ஸ்ரேயா ரெட்டியை மணந்து கொண்டார். மூத்த மகன் போல் இளைய மகனும் நடிகையை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விஷாலின் பெற்றோர் ஆர்வமாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

முதலில் பெண் பார்க்கும் படலத்தை கோடம்பாக்கத்தில் ஆரம்பித்தார்கள். த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் என பல நடிகைகளின் பெற்றோரிடம் முறைப்படி பெண் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவை எதுவும் கைகூடாததால் பெண் பார்க்கும் படலத்தை டோலிவுட்டுக்கு மாற்றியுள்ளார்கள். 

நடிகை அனிஷா ரெட்டி வீட்டில் சம்பந்தம் பேசி திருமணத்துக்கான வேலைகளைத் தொடங்கினார்கள். ஆனால், அந்த வரன் நிச்சயத்தோடு நின்றுபோனது.அதிலிருந்து விஷால் கடுமையான மனச் சோர்வில் இருந்ததாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

நடிகர் சங்க வேலை, மந்த நிலையில் மார்க்கெட் என்று மனச்சோர்வில் இருந்த விஷாலுக்கு தன்ஷிகாவின் நட்பு மருந்தாக அமைந்ததால் அதுவே காதலாக மாறியது என்று அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.இவ்விருவரும் காதல் வலையில் சிக்கியது சமீபத்தில்தான் பலருக்குத் தெரிய வந்தது. சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. அவ்விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது திடீரென விஷால் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து விஷாலுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. ஒரு நாள் மருத்துவமனையில் தங்கியிருந்த விஷாலை அருகிலிருந்து கவனித்துக் கொண்டார் சாய் தன்ஷிகா.அந்த சந்திப்புக்குப் பிறகுதான் விஷால் - தன்ஷிகா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி பொதுவெளியில் பேசப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதமாக சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகி டா’ பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஷால் அவ்விழாவில் பேசும்போது, ‘இதற்குமேல் நான் மூடி மறைக்க முடியாது. என்னோட சோல்மேட் தன்ஷிகா. அவரை நான் முழுமையாகக் காதலிக்கிறேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போகிறேன். நடிகர் சங்கம் திறக்கப்படவுள்ள ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி எங்கள் திருமணம் நடைபெறும்’ என்று அறிவிப்பை வெளியிட்டார்.

சாய் தன்ஷிகா பேசும்போது, ‘இந்த மேடை எங்களின் திருமண அறிவிப்பு மேடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆகஸ்ட் 29ம் தேதி விஷாலுடன் எனது திரு
மணம் நடைபெறும்’ என்று அறிவித்தார்.பட விழாவுக்கு வந்த அனைவரும் விஷால் - சாய் தன்ஷிகா ஜோடிக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் சொல்லி வழி அனுப்பி வைத்தார்கள்.  

எஸ்.ராஜா