சிறுகதை-சோழப் புயல்
கதிரவன் அஸ்தமிக்கும் நேரம் போர் பாசறையில் அங்கும் இங்கும் அடக்க முடியாத கோபத்தை தன் பாதம் படும் மண்ணின் மேல் ஆழப் பதித்தபடியே உலாவிக் கொண்டிருந்தான் சோழத்தின் உயிர் நாடியான ஆதித்த கரிகாலன்.அவனை அருகில் நெருங்கவோ பேசவோ யாருக்கும் துணிவில்லை. அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்த வேளையில் புரவி வீரன் ஒருவன் புயலென வந்தடைந்தான்.

வந்தவன் அங்கு நிலவும் நிலையைப் பார்த்து திகைத்தவாறு விழிகளை சுழற்றியபடி அருகிலிருந்த பல்லவ வேந்தனைக் கண்டான்.‘என்ன’ என்பது போல விழி உயர்த்தினான் பார்த்திபேந்திர பல்லவன்.‘இட்ட காரியம் ஜெயம்’ என்பதை தன் வேல் உயர்த்தி காட்டினான் சோழ வீரன்.‘‘எங்கே...’’ விழி சுருக்கி கேட்டான் பார்த்திபேந்திரன்.  வீரனும் தன் இடக்கையை மேலே உயர்த்தி தன் தலை உச்சியில் ஐந்து விரல்கள் படியும்படி காண்பித்தான்அடுத்த நொடி, ‘‘புறப்படு பார்த்திபா யானை மலைக்கு...’’ என்ற சிம்மக்குரல் சீறிப்பாய்ந்தது ‘என்ன இது... வந்த வீரனுடன் நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை... அனைத்தும் சமிக்ஞைகளே... அப்படியிருக்கையில் இவரெப்படி அறிந்தார் வீரபாண்டியன் ஆனைமலையில் இருக்கிறான் என்பதை...’ என்ற யோசனையுடன் இளவரசரைப் பார்த்தான் பார்த்திபேந்திரன். பார்த்தவனை நோக்கி ‘‘சோழ வீரனின் நிழல் கூட எனக்கு சொந்தமானது...’’ என கரகரத்தது சோழப் புயல்.அப்போதுதான் புரிந்தது கதிரவனின் மாலை நேர வெளிச்சத்தில் அவன் அசையும் அசைவுகளின் நிழலை வைத்து கண்டறிந்துள்ளார் ஆதித்த கரிகாலன் என்று உள்ளம் உவகை கொண்டான் பார்த்திபன்.
ஆனால், அதை உணரக்கூட முடியாத வேகத்தில் புயல் ஒன்று தன்னை தாக்கிச் சென்றது போல அதே நொடியில் உணரவும் செய்தான் பார்த்திபன்.ஆம். கண நேரத்தில் இந்திரனை ஒத்த வீரனைப் போல சீறிப் பாய்ந்தான். இனி தானும் தாமதித்து பயனில்லை என்றெண்ணி பார்த்திபனும் தன் சாம்பல் நிறப் புரவியில் பாய்ந்தான்.
உடன் துணைக்கு வர புரவி வீரர்கள் எத்தனித்தபோது முன்னோக்கிச் சென்ற ஆதித்தன் தன் வேலை நிலை தாழ்த்தி ‘யாரும் உடன் வரவேண்டாம்’ என்று சமிக்ஞையால் எச்சரித்துக் கொண்டே புயலென பாய்ந்தார்.செய்வதறியாது உடன் சென்ற பார்த்திபனிடம் ‘‘நான் சென்ற சிறிது நேரம் கழித்து ஐந்து புரவி வீரர்களுடன் பின்தொடர்...’’ என கட்டளை இட்டுக் கொண்டே பறந்தார்.
தூரத்தில் தெரிந்த யானை மலை நெருங்க நெருங்க விஸ்வரூபம் எடுத்தது ஆதித்தனின் கோபத்தைப் போல. புரவியில் பறந்தபடியே மலையை நோக்கினார் வீரத்தின் விளை நிலமான ஆதித்தன்.
அங்கே இருபது கரங்கள் சூழ மலையின் உச்சியில் தமிழ் வளர்த்த நிலத்தின் மன்னவன் வீரபாண்டியன் மனதில் சொல்லொணா வலியுடன் நின்று கொண்டிருந்தார் ஆம். தமிழின் இருப்பிடம்; வீரத்திற்கும் பஞ்சமில்லை. காலத்தின் கோலம். ஒரு கணம், தான் வளர்ந்த மண்ணைப் பார்த்தார். பாய்ந்து கிடக்கும் கதிரவனின் செங்கதிர்களைப் போல எங்கும் செங்குருதி பரவிக் கிடந்தது.
தூரத்தில் அன்னை மீனாட்சி அம்மனின் கொடி மரத்தின் மீன்கொடியானது படர்ந்தாடுவதைக் கண்டார். இனி நம் வம்சத்தின் நிலையும் இதுதானோ... நிலைகொள்ளாமல் ஆடிக் கொண்டிருக்குமோ... என்றெண்ணியவர் விழிகளைக்குவித்து அகக் கண்ணில் அம்மனைக் கண்டார்.‘தாயே நீயே துணை. எம் வம்சத்தை எப்படியாவது காப்பாற்று. கேட்கக் கூடாதவர்களின் பேச்சைக் கேட்டு இன்று கேடிழைத்துக் கொண்டேன். அதோ வருகிறான் சோழ இளஞ்சூரியன் எனை அஸ்தமனம் செய்ய. என் தலை வீழ்வது நிஜம்.
ஆனால், என்றாவது ஒரு நாள் என் பாண்டிய வம்சம் இந்த சோழப் புலிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்யும். பழிக்குப்பழி வாங்கும். அப்போது இதே இடத்தில் நின்று உன் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் காண்பேன். அந்தக் காலம் வரை எம் வம்சம் ஓயாது போர் தொடுக்கும்...’ என்று எண்ணியபடி ஆதித்தன் வரும் திக்கைப் பார்த்துக்கொண்டே தன் வாளினை உயர்த்தி ‘‘ஜெய் மீனாட்சி...’’ என்று கர்ஜித்தார்.
‘இனி தப்பி ஓடிப் பயனில்லை. வெற்றி என்பது இனி எனக்கு கிடையாது. இந்த வீரபாண்டியனுக்கு வெற்றி என்றால் அது வீர மரணம் மட்டுமே...’ என நினைத்தவர், ‘‘அடக்குங்கள் அவனை...’’ என கர்ஜித்தார். வீரபாண்டியனின் குரல் மலை எங்கும் எதிரொலித்தது.இவ்வளவு நேரம் புயலாய் பாய்ந்து வந்த ஆதித்த கரிகாலனின் புரவி இக்குரலைக் கேட்டதும் தன் எஜமானனின் அனுமானத்தையும்மீறி எதிரே சுழன்று வரும் கார்மேக சூறாவளியான வீரபாண்டியனை நோக்கி விருட்டென பாய்ந்தது.
ஐந்து வீரர்களுடன் சிறிது தொலைவில் பின்தொடர்ந்த பார்த்திபேந்திரனோ நடக்கும் காட்சிகளைக் கண்டு செய்வதறியாது திகைத்தான்.அங்கே பத்து மறவர்கள்... தனியே ஆதித்தர்... தனக்கும் அவருக்கும் உள்ள இடைவெளி... இதையெல்லாம் கணக்கில் கொண்டவன் ஏதாவது தவறாக நடந்தால்..?
நினைத்த அந்த நொடியில் அவனது புரவியும் சீறிப்பாய்ந்தது வீரபாண்டியனின் காவலர்களை நோக்கி.அதே கணம் பாய்ந்து வரும் ஆதித்தனின் வெண் புரவியைத் தடுக்க எத்தனித்த வீரர்கள் இருவரை தன் முன்னங்கால்களைக் கொண்டு புரவி எக்க... இடப்பக்கமும் வலப்பக்கமுமாக இருவரும் வீழ்ந்தனர்.
புரவி எக்கிய அதே க்ஷணத்தில் தன் முதுகிலிருந்த வேலினை எடுத்து தொலைவிலிருந்த ஒருவனை நோக்கி ஆதித்தர் வீச... அது குறி தவறாமல் அவன் நெஞ்சைத் துளைத்து தரையில் குத்தி நின்றது.அது கண்டு சினம் கொண்ட மத யானையாகப் பாய்ந்தார் வீரபாண்டியன்.
தன்னை நோக்கி வரும் வீரபாண்டியனைக் கண்டவாறு தன் வாளினை வலக்கரத்தைக் கொண்டு இடப்பக்கமாக ஆதித்தன் வீச... எதிர்ப்பட்டவன் கழுத்தை தடவிச் சென்றது. வலியில்லாமல் வீழ்ந்தான் நான்காமானவன்.
அதே சமயம் தன் இடக்கரத்தைத் தாழ்த்தி நேர் எதிரே அளவான வேகத்தில் வீச எதிரே வந்தவனின் இருதயத்தை பாதி துளைத்து நின்றது.அக்கணமே சுழன்று தன் வலக்கை வாளினை கீழிருந்து மேலாக அழுத்தி வீச... இரு துண்டானது ஓர் உடல். வீழ்ந்தான் ஆறாவதானவன்.
அப்போது துண்டான உடல், தரையைத் தழுவும் முன்னே நெஞ்சில் பாதி துளைத்த வாளினை இடக்கரத்தைக் கொண்டு வாங்கி எதிர்ப்பட்டவனின் வயிற்றில் பட்டும் படாமலும் வீச... அவன் குடல் வெளியேறுவதைக் கண்டு அவன் விழி மூடினான்.
போனது ஏழு உயிர்கள். முன் நின்று இவனை வெல்ல முடியாது என்றெண்ணி இருவர் பின்வர... தன் கைகளை சக்கராயுதமாக சுழற்றி ஒரு கரத்தை மேலே உயர்த்தியும் இன்னொரு கையை இடைத்தாழ்த்தியும் மின்னல் வேகத்தில் பின்புறமாக வீச... ஒருவன் தலை உயரப் பறந்தது. இன்னொருவனின் மடி கிழிந்து தொங்கியது.
விழுந்தது ஒன்பது உயிர்கள்அந்தக் கணப்பொழுதில் தன்னிரு வாளையும் அர்ஜுனனின் அம்பைப் போல பத்தாமானவனை நோக்கி ஆதித்தன் வீச... அவன் ‘‘ஆ...’’ என்ற அலறலோடு மார்பில் வாள் தாங்கி வீரபாண்டியனின் தாள் பணிந்தான்.
இவையனைத்தையும் கண்டு கொண்டிருந்த பார்த்திபேந்திரன், உடல் சிலிர்த்துப்போய் உணர்வு மேலோங்கியவண்ணம் ‘வீரத்தின் விளைநிலம் அல்லவா நீ... நீ வீசும் ஒவ்வொரு வீச்சும் அளந்து வீசுகிறாய்... இன்னார்க்கு இதுவென்று எதிரியே ஆனாலும் மரணத்தின்போது வலி உணராமல் மரணிக்க வழிவகை செய்யும் இந்த மன்னவனுடைய அனுக்கிரகத்தை என்னவென்று சொல்வது..?
ஆனால், ஒருவன் மட்டும் அலறினானே... அது ஏன்? ஆம். அதுதான் காரணம்... வீரபாண்டியா உன் மரணத்தின் அலறலை நீ கேட்க முடியாது. அடுத்தவன் வாயிலாக அதை நீ உணர்ந்து கொள் என்பதற்காகவே கடைசி வீரனை அலற விட்டாயோ என் மன்னவா... மெய்சிலிர்க்குதய்யா உன் வீரம்...’ என்றெண்ணி ஆதித்தனை நோக்கினான்.
அங்கே செவ்வானம் சிவக்க கோபம் தலைக்கேறிய சேவல் எவ்வாறு படபடக்குமோ அவ்வாறு ஆதித்தனின் தலைக் குழல்கள் அலைபாய... முன் ஒரு காலை மடக்கியும் பின் ஒரு காலை ஆழப் பதித்தும் தன் எதிரே உள்ள வீரபாண்டியனை வலக்கையில் வேல் கொண்டு உடல் குருதி எல்லாம் சூடேற சிவந்த கண்களுடன் வேலன் போல எதிர்க்கத் தயாரானார்.
எதிர்ப்பவனும் சாதாரணமானவன் இல்லை. ஒரு கையில் விஷ்ணுவின் சக்ராயுதத்தை ஒத்த கேடயம்... மறுகையில் மல்லி மலரினும் மென்மையான, ஆனால், தொட்டதையெல்லாம் தும்பைப் பூவைப் போல கொய்யும் அழகிய வாளினைக் கொண்டு வீர கர்ஜனை புரிந்த வண்ணம் ஒரே அடியில் ஆதித்தனை விழுங்குவது போல... ஒரு சூரசம்ஹாரனைப் போல காட்சி அளித்தார் வீரபாண்டியன்.கையில் ஒற்றை வேலுடன் சோழ வேங்கை. எதிர்ப்புறம் இரு கரங்களிலும் ஆயதத்துடன் தமிழ் மறவன். செய்வதறியாது திகைத்தான் பல்லவன். உடனே சுதாரித்துக் கொண்டு தன் வாளினை ஆதித்தனை நோக்கி வீசினான்.
பின்புறம் இருந்து முன்புறம் தன்னை நோக்கி வரும் வாளினை அது எதிரியின் வாளா... இல்லை நண்பனின் வாளா என்று வாள் வேகத்தை காற்றின் துணைகொண்டு அறிந்த ஆதித்தன், உடனடியாக அவ்வாளினைப் பற்றிக் கொண்டான்.
ஆஹா இதுவல்லவா சமய சிரஞ்சீவி நட்பு! அப்போதே கோரயுத்தம் துவங்கியது.கேடயம் கொண்டு தாக்க முற்பட்ட வீரபாண்டியனை வேல் கொண்டு தடுத்து, தன் வாள் கொண்டு திசை மாற்றினான். மாற்றிய வேகத்தில் பாண்டியன் சுழல, தன் வேல் கொண்டு தாக்க முற்பட்ட ஆதித்தனை தன் வலிய கேடயம் கொண்டு தடுத்தான். அதனால் ஏற்பட்ட அதிர்வில் ஆதித்தன் நிலை தடுமாற தன் வலிய கால்களைக் கொண்டு அவன் பரந்த மார்பில் எட்டி உதைக்க... நிலை தடுமாறி கீழே விழுவான் சோழ இளவரசன் என்றெண்ணிய பாண்டியனின் எண்ணம் தவறாய் போனது.சோழப்புலி அல்லவா அவன்..? அவன் வேலின் துணைகொண்டு தன் பாதத்தை மண்ணில் ஆழப் பதித்தான். பாண்டியனின் சிந்தை தவறிய அக்கணத்தில் வாள் கொண்டு அவன் தலை கொய்தான்.
கொய்த தலை பின் நின்ற பல்லவனைத் தாண்டி அவனுக்கு பின்னால் விரைந்து வந்து கொண்டிருந்த சோழப் புரவி வீரர்களின் மேல் விழுந்தது.சில நொடிகள் வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். மறுகணமே மலை முடுகெங்கிலும் ‘‘வெற்றிவேல்... வீரவேல்...’’ என்ற கோஷம் எதிரொலித்தது.கோஷத்தைக் கேட்ட பின்புதான் பார்த்திபன் சுய நினைவுக்கு வந்தான்.
தான் காண்பது கனவா? இல்லை நனவா? சுற்றிச் சுற்றிப் பார்த்தான். எங்கோ இருந்து ஒரு குரல் வந்தது. அது ‘வீரபாண்டியன் தலைகொய்த ராஜகேசரி’ என்றது.மறுகணமே அக்குரல் ஓராயிரம் குரலானது. பின்பு விண்ணை முட்டியது.ஆம்... இவனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை... இனி பிறக்கப் போவதில்லை என்றெண்ணி பிரமை நீங்கியவனாய் ஆதித்த கரிகாலனை நோக்கினான் பார்த்திபன்.அந்தோ பரிதாபம்... ஊழிக் காற்றில் அகப்பட்டது போல அம்மனின் கொடிமரம் சாய்ந்து கிடந்தது.ஆமாம். தமிழின் தலைமகன் அல்லவா தலை கொய்யப்பட்டான் சோழன் என்ற சூறாவளியால்..!இதற்கு இனி காலம்தான் பதில் சொல்லும்.
- ரங்கநாதன் ஞானசேகரன்
|