வெளிநாடுகளில் படிக்கவேண்டுமா? இதோ புது ரூட்!
நீண்ட காலமாக வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் இந்திய மாணவர்களின் கனவு நாடுகளாக இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா தேசங்களே இருந்து வந்தன. ஆனால், இன்று எல்லாம் தலைகீழ். காரணம் இந்த நாடுகள் பல குடிபெயர்வோர் பிரச்னையைக் காட்டி, மாணவர்களின் படிப்புக்கும் வேட்டு வைத்து வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தேதியில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், இங்கிலாந்தை தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவே ஆர்வம் காட்டுவதாக கல்வியாளர்கள் சொல்கிறார்கள். ஆஸ்திரியா, மால்டா, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள்தான் அந்த ஐரோப்பிய நாடுகள்.
இந்த நாடுகளில் இருக்கும் பிரபல பல்கலைக்கழகங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போலவே ஆங்கில மொழி வழியாக பல உயர்கல்விப் பாடங்களைப் போதிப்பதால் இந்த நாடுகளுக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு கூடியிருக்கிறது.
இத்தோடு படிப்புச் செலவும் சில லட்சங்களில் முடிந்துவிடுகிறதாம். போலவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்றில்லாமல், தங்குவதற்கான செலவும் இந்த நாடுகளில் மிகச்சொற்பமாம்.
அனைத்துக்கும் சிகரமாக படிக்கும்போதே வாரத்துக்கு 20 மணிநேரம் தத்தம் நாடுகளில் வேலையும் செய்யலாம் என ஆஸ்திரியா, மால்டா, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் அனுமதிக்கின்றன.
எனவே படிக்கச் செல்லும் மாணவர்களின் குடும்பத்துக்கும் பணக் கஷ்டம் ஏற்படுவதில்லை. இத்தோடு படிப்புக்குப்பின் வேலைக்காக சுலபமான விசா கொடுக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் இந்த நாடுகளில் படிக்கச் செல்ல முன் எப்போதையும் விட அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக வெளிநாடுகளில் தங்குவதற்கான செலவுதான், கல்விச் செலவிலேயே அதிகமானது. இதுதான் பல பெற்றோர்களின் தூக்கத்தைக் கலைக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை ஆஸ்திரியா, மால்டா, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் வைத்திருக்கின்றன.
டி.ரஞ்சித்
|