பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் டிப்ரஷன் வரும்!
இப்படி கொளுத்திப் போட்டிருப்பது ‘த கார்டியன்’ பத்திரிகை. சற்று விரிவாகவே பார்த்தால்தான் புரியும்.பதப்படுத்தப்பட்ட - சீல்ட் ஃபுட்ஸ் - உணவுகளில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் மன அழுத்தத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.மறுக்கவில்லை.  அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் இது. என்றாலும் விரிவாக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி என்பதால் உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  இத்தகைய உணவுகள் - அதாவது சீல்ட் ஃபுட்ஸ் - பக்கவாதம், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் புதிய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வார்டு மருத்துவப் பள்ளி ஆய்வாளர்கள் இதற்காக பெண்களின் உணவு முறை மற்றும் மன நலம் பற்றிய நீண்ட கால தரவுகளை ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வுகள் 2003ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்தன. ஆய்விற்கு முன்னால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாத நடுத்தர வயதைச் சேர்ந்த முப்பதாயிரத்திற்கும் கூடுதலான, பெரும்பாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்கேற்றனர்.  இவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மொத்த அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், இனிப்பு தின்பன்டங்கள், உடனடியாக சாப்பிடக்கூடிய சாப்பாடு, கொழுப்புள்ள பொருட்கள், சாஸ் வகைகள் (sauces), பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள், சுவையான தின்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பானங்கள் மற்றும் செயற்கை இனிப்புகள் போன்ற பல வகை உணவுகள் ஆராயப்பட்டன.
ஆய்வில் பங்கேற்றவர்கள் இவ்வகை உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு பொதுவாக மன அழுத்தம் ஏற்பட காரணங்களாகக் கூறப்படும் மற்ற ஆரோக்கியப் பிரச்னைகள், வாழ்க்கை முறை, சமூகப் பொருளாதார நிலை போன்றவற்றின் தாக்கம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும் எத்தனை பேருக்கு செயற்கை உணவுகளால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று ஆராயப்பட்டது. பிறகு இந்த ஆய்வுக் கட்டுரை ‘ஜாமா நெட் வொர்க் ஓப்பன்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
உண்ணும் உணவில் நாள் ஒன்றுக்கு நான்கு மடங்கிற்கும் குறைவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களைக் காட்டிலும் ஒன்பது மடங்கு அல்லது அதற்கும் அதிகமாக இத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட 49% அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒரு நாளைக்கு மூன்று முறைக்கும் குறைவாக இந்த வகை உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு அவற்றை நிரந்தரமாக சாப்பிடுபவர்களைக் காட்டிலும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
ஒருவரின் மனநிலைக்கு (mood), மூளையில் இருக்கும் குறிப்பிட்ட சில சமிக்ஞை மூலக்கூறுகளைத் தூண்டும் பரிமாற்ற நிகழ்வுகள் பொறுப்பாக உள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் இந்த சமிக்ஞை மூலக்கூறுகளை குறிவைத்து பாதிப்படைய வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
“மன அழுத்தத்திற்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை இந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. செயற்கை இனிப்பூட்டிகளால் இதயத்தின் வளர்சிதை செயல்பாடுகள் பாதிக்கப்படுவது பற்றிய புதிய கவலை இதனால் விஞ்ஞானிகளிடையில் ஏற்பட்டுள்ளது. இத்தகையவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய வேண்டும்...” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மனித வளர்சிதை மாற்றம் பற்றிய பிரிவில் ஆய்வுகளைத் தொடரும் ஓய்வு பெற்ற பேராசிரியர் கீத் ப்ரெயின் கூறுகிறார்.“பிற வகை பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் ஆராயப்பட வேண்டும்...” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மரபணுவியல் கழக கௌரவப் பேராசிரியர் டேவிட் கர்ட்டஸ் சொல்கிறார்.
“ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதனால் ஆய்வு முடிவுகள் நம்பகமானது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் அவர்களிடம் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாயின என்று இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது...” என்று மாசசூசெட்ஸ் மருத்துவமனை க்ளினிக்கல் மற்றும் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் மற்றும் ஆய்வுக்குழுவின் இணை ஆசிரியர் பேராசிரியர் ஆண்ட்ரூ டீச் சேன் கூறுகிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உடல் நலம் மட்டுமே பாதிக்கப்படுகிறது என்று இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில் இப்போது அவை மனநலத்தையும் பாதிக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சீல்ட் ஃபுட்ஸை சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நம் உடல், மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
ஜான்சி
|