மீண்டும் நாயகன் கொடுக்க நானும் மணியும் ரஹ்மானும் எதற்கு?



கேட்கிறார் கமல்ஹாசன்

பக்குவமும் அனுபவமும் ஒருசேர மலர்ந்த முகத்துடன் பேசத் துவங்கினார் உலகநாயகன் கமல்ஹாசன். சினிமா, அரசியல் என இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்தபடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர், தற்போது ‘தக் லைஃப்’ வெளியீட்டை நோக்கி ‘மய்யம்’ கொண்டிருக்கிறார்.1987ம் ஆண்டு மணிரத்தினம் - கமல்ஹாசன் கூட்டணியில் அபார வெற்றி பெற்று பொன்விழா, வைரவிழா வரை கண்ட திரைப்படம் ‘நாயகன்’. மீண்டும் 38 வருடங்கள் கழித்து தற்போது இந்தக் கூட்டணி ‘தக் லைஃப்’ கொடுக்கத் தயாராக உள்ளது.

‘‘கதையின் நாயகன் கேரக்டர்தான். எதையும் வேறு கோணத்தில் பார்க்கக்கூடிய பவரான மனுஷன். அந்தக் கதாபாத்திரத்துக்கு நிகரா இன்னொரு பவர் நிற்கும்போது அந்த தக் வாழ்க்கை என்னவா மாறுது என்பதைத்தான் இந்தக் கதை காட்டும்...’’ புன்னகைக்கிறார் கமல்.‘விண்வெளி நாயகா’..!அது ஏ.ஆர்.ரஹ்மான் - மணி கூட்டணியின்போது. 
நானே கேட்டேன் ‘அதென்ன விண்வெளி நாயகன்...’னு. அதற்கு ரஹ்மான் பதில் இன்னும் தக்  மாதிரி!‘இது சீக்வெல் வந்தா உதவியா இருக்கும்னு யோசிச்சேன்’னு சொன்னார். அது எதை யோசிச்சு சொன்னார்னு தெரியலை!ஏன் இந்த 38 வருடங்கள் இடைவேளை ?

நானும் மணியும் எல்டாம்ஸ் ரோட்ல மோட்டார் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திட்டு, அதன்மேல் ஏறி உட்கார்ந்துதான் பேசிக்கிட்டு இருப்போம். நாங்க பேசின வார்த்தைகளில் 25%தான் ‘நாயகன்’ படமும் இப்போ ‘தக் லைஃப்’ படமும். இன்னும் 75% வார்த்தைகளுக்கு உருவம் கொடுக்காமதான் இருக்கோம். 

ஒரு விஷயம் சேர்ந்து செய்தோம்... அது வெற்றி அடைந்தது. திரும்பத் திரும்ப அதே மாதிரியான வெற்றியைக் கொடுக்க நினைத்து அது தவறா முடிஞ்சிடக் கூடாதில்லையா? அந்தத் தயக்கம்தான் இந்த இடைவேளை.

உண்மையைச் சொன்னா அப்ப நாங்க சேர்ந்ததற்கும் இப்ப நாங்க சேர்ந்ததுக்கும் காரணம் நீங்கதான். எங்களுடைய கூட்டணிக்கு நீங்க கொடுத்த இடத்தை நாங்களே மதிச்சு ஒரு இடைவேளை எடுத்துக்கிட்டு திரும்பவும் அது மாறாம கொடுக்கணும்னு நினைக்கிறோம்.

‘நாயகனு’க்கும் ‘தக் லைஃப்’க்கும் இடையே எது மாறி இருக்கு?

நிறைய மாறி இருக்கு. மணி பெரிய இயக்குநராகிட்டார். அவருடைய டைரக்‌ஷன் ஸ்டைல் மாறி இருக்கு. நான் அனுபவமான நடிகனாகியிருப்பதா நினைக்கறேன். சினிமாவும் வேறு ஒரு களத்தில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மாறி இருக்கு. ஆனா, ஒன்று மட்டும் இன்னமும் மாறவே இல்ல. எனக்கும் மணிக்குமான நட்பு அப்படியேதான் இருக்கு. நாங்க தொழில் அளவில்தான் மாறி இருக்கோம். குணத்தால் மாறலை.

முன்பு வருஷத்துக்கு பத்து படங்கள் செய்ய முடிஞ்சுது... ஏன் இப்ப ஒரு படம் கூட கொடுக்க முடியலை?

ஒரு காலத்துல படத்தை எடுத்துட்டு வாங்க ஆளில்லாம அலைஞ்சிருக்கேன். எம்ஜிஆர் ஐயாவும், சிவாஜி ஐயாவும் இருந்த காலத்தில் ‘16 வயதினிலே’ படத்தை கையிலே வெச்சுட்டு அலைஞ்சிருக்கேன். அப்பவே அப்படியான நிலை. இப்ப மார்க்கெட் பெரிது. பொறுப்பும் பெரிது. ‘நாயகன்’ படப்பிடிப்பில் எனக்கு நானே மேக்கப் போட்டுகிட்டு என் சக ஆர்ட்டிஸ்ட்டுக்கும் மேக்கப் போடுவேன்.

நான்கு நாட்கள்ல மும்பை படப்பிடிப்பை முடிச்சிட்டு திரும்பினோம். இன்னைக்கு அதையெல்லாம் செய்ய முடியாது. அவ்வளவு பெரிய பணத்தை நம்பி போட வைக்க, நாங்க முதல்ல 100% நம்பிக்கை காட்டணும். நானும் மணியும் ஒண்ணா வர்றோம்னா உங்களுடைய பார்வையும் கணக்குப் போட ஆரம்பிச்சுடும். 

எங்க சக்திக்கு மேலான ஒரு படைப்பை எதிர்பார்க்கும். சும்மா எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியாதே... பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள் என அத்தனை பேரின் எதிர்பார்ப்பும் பூர்த்தியாக ஒரு படம் செய்யணும்.

அன்னைக்கே அது அவ்வளவு பெரிய சவாலாதான் இருந்தது. இன்னைக்கு இன்னும் பெரிய சவாலா இருக்கு.

வீடுகளில் திரைப்படங்கள் வெளியாகும் என்பதை அன்றே கணித்தீர்கள்... இப்ப AI படிப்பு வரை சென்று திரும்பி இருக்கிறீர்கள்... இதுவும் உங்கள் அடுத்த கணிப்பா ?

படிக்கணும்னு நினைச்சுதான் போனேன். ஆனா, அது கடல். என்னால என் நிலைக்கு எவ்வளவு தெரிஞ்சுக்க முடியுமோ அவ்வளவு தெரிஞ்சுக்கிட்டேன்.

AIதான் எதிர்காலம். நான் மட்டுமில்ல... நீங்களும் உங்க துறைக்கு எந்த அளவுக்கு AI தேவையோ அதைத் தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லது. ஆனா, அதைப் பார்த்து பயப்பட வேண்டாம். இன்னொரு அபரிமிதமான டெக்னாலஜி நம்மை ஆட்கொள்ளப் போகுது. அதற்கு நம்மை தயார் படுத்திக்கணும்.

இசை, மீடியா, கலை எல்லாத்திலும் AI வரும். ஆனா, எந்த அளவுக்கு என்பதைனு என்னால கணிக்க முடியலை.மாஃபியா படங்கள் அதிகமா இந்தியாவில் வருவதும், வெற்றிபெறுவதும் தொடர்ந்து நடக்குது. இந்தக் கான்செப்ட்டை ஏன் மக்கள் விரும்பறாங்க?

ஒரு காலத்திலே கௌபாய் படங்கள் நிறைய வரும். ஆனா, மிகச் சில வருடங்கள்ல அந்த டிரெண்ட் நிற்கல. காரணம் நம்மூரில் கௌபாய் என்கிற கலாசாரமே கிடையாது. அதனாலயே அந்த கான்செப்ட் நமக்கு அந்நியமாகத் தெரிந்தது. 

மாஃபியா கேங்ஸ்டர்... இதுவும் நம்ம கலாசாரமானு கேட்டா அதற்கு என்னிடம் பதில் கிடையாது. ஆனா, அந்த கேரக்டர்களில் ஒருவித பவர், ஆளுமை இருப்பதை மக்கள் விரும்பறாங்க. அதனால்தான் அப்படியான கதைகள் தொடர்ந்து இங்க ஜெயிச்சுகிட்டே இருக்கு.

ஆளுமை மிக்க கதாபாத்திரங்கள் மாஃபியாவா அல்லது கேங்ஸ்டர் ஆகதான் இருக்கணும்னு கிடையாது. தலைவனா கூட இருக்கலாம். அந்தத் தலைவன் எந்த வடிவில் இருந்தாலும் மக்கள் ரசிப்பாங்க. நாம கடந்து வந்த எல்லாதலைவர்களும் கூட இப்படியான ஏதோ ஒரு தக்லைஃப் காட்டியவர்கள்தான்.உங்க சீனியர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் நீங்க வேலை செய்ததற்கும் இப்ப உங்கள் ஜூனியர்களுடன் வேலை செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

எதுவும் மாறலை. அந்த அன்பும் மரியாதையும் அப்படியே இருக்கு. ஆனா, தொழில்நுட்ப ரீதியா நாங்க எல்லாரும் எங்களுடைய சீனியர்களை வாத்தியார்களாகப் பார்த்தோம். ஆனா, நான் என் அடுத்த தலைமுறையை எனக்கு வாத்தியாரா பார்க்கறேன். அவங்க கிட்ட கத்துக்க அவ்வளவு இருக்கு.

சிம்பு, அசோக் செல்வன்...

இவங்க எல்லாரும் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சி சொன்னதும் அவங்க நடிக்கிறத பார்க்கும்போது... ‘அட இதையெல்லாம் அன்னைக்கு நாம செய்திருக்கலாமே, இவ்வளவு திறமையா இருந்திருந்தா எனக்கான இடம் இன்னமும் பெரிதா கிடைத்திருக்குமோ...’ என்கிற எண்ணம்தான் வருது.

‘நாயகனு’க்கும் ‘தக் லைஃப்’க்கும் சம்பந்தம் உண்டா?

நீங்க ‘தக் லைஃப்’ பார்த்து முடித்ததும் ‘நாயகன்’ படத்தை மறக்கணும் என்பதுதான் எங்க நோக்கம். அந்த மைல்கல்லை உடைத்து இன்னொரு மைல் கல்லை நட்டுவைக்கத்தான் ரெண்டு பேரும் 38 வருடங்கள் இடைவேளை கொடுத்திருக்கோம். இத்தனை வருடங்கள் கழித்து மறுபடியும் அதே பழைய ‘நாயகனை’க் கொடுக்க எதற்கு நாங்கள் இவ்வளவு அனுபவத்தை வளர்த்துக்கணும்!

மணிரத்தினமும் அவருடைய மேக்கிங்கில் எவ்வளவோ வளர்ந்திட்டார்... நானும் ஒரு அனுபவசாலியான நடிகராக மாறி இருக்கேன்னு நம்புறேன். இசையில் ரஹ்மான் இன்னொரு உச்சம் தொட்டுவிட்டார். எங்ககூட இத்தனை அடுத்த தலைமுறை நடிகர்கள் இருக்காங்க.

இவங்களை எல்லாம் வைச்சுக்கிட்டு மீண்டும் 38 வருட பழைய கதையை கொடுத்தா நீங்க முதலில் ஏற்றுக்கொள்வீர்களா?! நிச்சயம் இது ‘நாயகன்’ படத்தின் தொடர்ச்சி கிடையாது.
ஒன்பது வருடங்களுக்கு முன்னாடி நான் ‘அமர் ஹை’ என்கிற கதையை எழுதி வைச்சிருந்தேன். அந்தக் கதையைத்தான் மணிரத்தினத்திடம் கொடுத்தேன். அதற்கு அவர், தன் சாயலில் ஒரு திரைக்கதை எழுதினார்.

எங்க இரண்டு பேரின் எழுத்தும் ஒன்று சேர்ந்துதான் இந்த ‘தக் லைஃப்’. நானும், சைப் அலிகானும் சேர்ந்து நடிக்க இருந்த கதை, ஒரு சில காரணங்களால அந்தப் படம் நடக்கல. ஒருவேளை இந்த ‘தக் லைஃப்’ படத்திற்காகத்தான் அன்னைக்கு அது நடக்கலை போல.

சக்திவேல் / வேலு நாயக்கர், ரங்கராய சக்திவேல் நாயக்கர்... தேவர் மகன்..?

உங்க கேள்வி புரிஞ்சிடுச்சு... இங்க எந்த சாதி அரசியலும் கிடையாது. இன்னும் சொல்லப்போனா இதில் அரசியலே கிடையாது. நமக்குள் இருக்க வேண்டிய அமைதியும், நாம் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டவும்தான் இந்த ‘தக் லைஃப்’. இதைத்தான் முந்தைய படங்களும் செய்தன. எந்த சாதியையும் மேல தூக்கி வைத்தோ கீழே இறக்கியோ பேசுவது நோக்கம் கிடையாது. அமைதியும், அன்பும் தேவை ... அதை எந்தக் குப்பன், சுப்பன் சொன்னாலும் சரிதானே!

இப்போதாவது சொல்லுங்கள்... கதை என்ன..? அப்பா - மகன் உறவா..?

ஹாஹா... உங்ககிட்ட மணி, ‘அப்பா - மகன் கதை’னு சொன்னாரா? ஒருவேளை நான் பார்த்த கதை அதுதானா என்கிற சந்தேகத்தில் கேட்கறேன். ஒவ்வொரு பார்வையாளனுக்கும் ஒவ்வொரு கதையாகத் தெரியும். உங்களுக்கு என்ன கதை தெரிகிறதோ அதை எடுத்துக்குங்க. இன்னும் ஒரு வாரம்தானே... பொறுத்துக்குங்க.

எதையோ நோக்கி ஓடிக்கிட்டே இருக்கீங்க... அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுட்டு போகணும்னு நினைக்கிறீங்க?

நான் எப்படிப்பட்ட வீடு கட்டினேன், என்ன கார் வச்சிருக்கேன்... இதெல்லாம் என் வாழ்க்கை கிடையாது. இன்னைக்கு என் கூட நடிக்கிற சிம்புவோ அல்லது அசோக்செல்வனோ... ஏன் நீங்கள் என்னைப் பற்றி என்ன பேசுறீங்க, என்னவாக என்னை பார்க்கறீங்க... என்பதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கை. என்னால மரணத்தையும், வாழ்க்கையையும் பிரிச்சிப் பார்க்க முடியாது. எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி தேவை. புள்ளியே வைக்காம ஓடிக்கிட்டே இருந்தாலும் வழவழ வாழ்க்கையா மாறிடும். அதனால் மரணம் அவசியம். ஆனா, அதற்கு முன்பு என்னால என்ன அனுபவப் பாடத்தைக் கொடுத்துவிட்டுப் போக முடியுமோ அதை நோக்கி ஓடறேன்.

உங்க வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லணும்னா என்ன சொல்வீங்க..?

ஒரு வார்த்தையில் சொல்கிறேன்... ‘தக் லைஃப்’.  

ஷாலினி நியூட்டன்