வில்லனாகும் ‘மைனா’ ஒளிப்பதிவாளர்!



‘ஓம் காளி ஜெய் காளி’ வெப் சீரிஸுக்குப் பிறகு விமல் நாயகனாக நடித்திருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதன் டீசருக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளன. சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ படத்துக்குப் பிறகு இசக்கி கார்வண்ணன் இயக்கியிருக்கும் படம் இது. விரைவில் வெளியாக உள்ள இந்தப் படம் குறித்து இயக்குநரிடம் பேசினோம்.  

யார் இந்த ‘பரமசிவன் பாத்திமா’?

விமல், சாயாதேவி இருவரும்தான் பரமசிவன், பாத்திமா. ஆனால், நிஜத்தில் நிறைய பரமசிவன், பாத்திமா இருக்கிறாங்க. அந்த பரமசிவன், பாத்திமாவை மக்கள் சாமியா கும்பிடுறாங்க.
ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு அடையாளம் இருக்கும். அந்த அடையாளங்களை தொலைத்து, மக்கள் அதை தேடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் படத்தோட களம்.கதை என்று பார்த்தால் யோக்கோபுரம், சுப்ரமணியபுரம், சுல்தான்பேட்டை என மூன்று ஊர்கள் அடுத்தடுத்து உள்ளன.

அங்கு ஒரு கல்யாணம் நடக்கிறது. விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் மாப்பிள்ளை கொல்லப்படுகிறார். கொலையாளி யார் என்ற கேள்வி வரும்போது மூன்று ஊர் மக்களிடையே கொலையை செய்தது யார் என்ற கேள்வி வருகிறது. கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை சஸ்பென்ஸ், காதல், ஆக்‌ஷன், ஹாரர் கலந்து சொல்லியுள்ளோம்.

பரமசிவன் கதாபாத்திரத்துக்கு விமல் எந்தளவுக்குப் பொருந்துகிறார்?

‘தமிழ்க்குடிமகன்’ படம் எடுக்கும்போது அந்தக் கதைக்கு விமல் ஹீரோவாக நடித்திருக்கலாம் என்று சில சினிமா நண்பர்கள் கருத்து சொன்னார்கள். இந்த கதையை எழுதி முடிச்சதும் பரமசிவன் கதாபாத்திரத்துக்கு விமல் கச்சிதமாக இருந்தார். விமலுக்கான டெய்லர் மேட் ரோல் என்பதால் அவரிடம் கதை சொன்னேன். விமல், அற்புதமான நடிகர். அவருடைய நடிப்பு ‘களவாணி’ தொடங்கி சமீபத்துல வெளியான ‘ஓம் காளி ஜெய் காளி’ வரை மிகவும்  யதார்த்தமாக இருக்கும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை பரமசிவன் கேரக்டருக்கு என்ன நியாயம் செய்யணுமோ அதை செய்தார். ஆரம்பத்தில் இந்த கேரக்டர் செய்வதில் அவருக்கு தயக்கம் இருந்துச்சு.
நிஜத்தில் நடந்த கதையை படமாக எடுப்பதால் எதிர்ப்புகள் வரும் என்று யோசித்தார். ஆனாலும் என் மீது நம்பிக்கை வெச்சு நடித்தார். இந்த கதைக்கான தலைப்பும் அவர் செலக்ட் பண்ணியதுதான்.

ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்காங்களே?

நாய கியாக சாயாதேவி. அவருடைய முதல் படமான ‘கன்னிமாடம்’ எனக்குப் பிடிக்கும். ‘தமிழ்க் குடிமகன்’ படத்தில் அவர்தான் நாயகியாக நடித்திருக்க வேண்டும். அட்வான்ஸ் கொடுத்த நிலையில் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். எந்த ஆக்டிங் ஸ்கூலிலும்படிக்கவில்லை. ஆனால், பிச்சு உதறிட்டார். ஆக்‌ஷன் சீக்வென்ஸ் காட்சியில் அவருடைய ஆக்ரோஷமான நடிப்பு மிரட்டலாக வந்திருக்கு.

இது திண்டுக்கல் பக்கத்தில் உள்ள சிறுமலை என்ற பகுதியில் நடக்கும் கதை. பொதுவாக மலைக் கிராமங்களில் அவ்வூரைச் சேர்ந்த பூர்வகுடிகள்தான் வசிப்பார்கள். ஆனால், சிறுமலைப் பகுதியில் பல்வேறு மக்கள் வசித்து வருகிறார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, மலையாளிகளும் அங்கு உள்ளார்கள். அந்த வகையில் நிறைய உறவுகள் கலந்த கதை என்பதால் நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்தோம்.

எம்.எஸ்.பாஸ்கர் சார் சர்ச் ஃபாதர் கேரக்டர்ல வர்றார். படத்தோட முதுகெலும்பு எனுமளவுக்கு முக்கியமான கேரக்டர். அவருடைய அனுபவ நடிப்பு கேரக்டருக்கு பெருமை சேர்க்கும்படி வந்திருக்கு.விக்ரம், சமந்தா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் கேமராமேனாக இருந்த ‘மைனா’ சுகுமார் இதுல வில்லனாக அறிமுகமாகிறார்.

இவங்களோடு கூல் சுரேஷ், அருள்தாஸ், காதல் சுகுமார், ஆதிரா, ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆர்ட் டைரக்டர் வீரசமர்னு நிறைய நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க. போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர்ல நானும் நடிச்சிருக்கேன்.

பாடல்கள் எப்படி வந்திருக்கு?

தீபன் சக்கரவர்த்தி மியூசிக் செய்துள்ளார். ‘ஒரு குப்பைக் கதை’, ‘வீராயி மக்கள்’ போன்ற படங்களில் அவருடைய ஒர்க் கவனிக்கப்பட்டுச்சு. பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக வந்திருக்கு. ‘நா மல்லி...’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.ஒளிப்பதிவு சுகுமார் செய்துள்ளார். அவர் ஒரு படத்துல இருந்தார்னா இயக்குநருக்கு பாதி வேலை குறைஞ்ச மாதிரின்னு சொல்லலாம். அவ்வளவு ஈடுபாடுடன் வேலை செய்வார். சிலருக்கு மரத்துல தாவப் பிடிக்கும்னா என்னுடைய கேமராமேனுக்கு மலையில் ஏறப்பிடிக்கும்.

சிறுமலை என்ற மலை கிராமத்தில் மொத்தப் படத்தையும் எடுத்தோம். அந்த கிராமத்துல ஷூட் நடத்தலாம்னு அவர்தான் ஃபிக்ஸ் பண்ணிக்கொடுத்தார். தயாரிப்பு லட்சுமி கிரியேஷன்ஸ். மலையில் படப்பிடிப்பு நடத்துவது என்றால் அதிக பட்ஜெட் பிடிக்கும். அதையெல்லாம் தயாரிப்பு சைட்ல இருந்து நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள்.

எஸ்.ராஜா