ஜிஹாதிகளைத் தடுக்கும் ஒட்டகப்படை!



இராணுவத்திலும், காவல் துறையிலும் குதிரைப்படை பிரிவு இருப்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஒட்டகப்படை பற்றி அவ்வளவாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

நம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில்கூட ஒட்டகப் பிரிவு உள்ளது. 
ராஜஸ்தானிலுள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது இந்தப்
பிரிவுதான்.  இதேபோல் ஒட்டகப் படைப்பிரிவு உள்ள நாடுகள் உலகில்  வெகுசிலவே உள்ளன. அதில் முதன்மையான நாடு மவுரித்தேனியா. வடமேற்கு ஆப்ரிக்காவில் உள்ள இந்த நாடு, ஒட்டகப்படைப் பிரிவின் மூலம் ஜிஹாதிகள் ஊடுருவாமல் தடுத்து வருவதுதான் சமீபத்திய ஹைலைட்!  

குறிப்பாக இந்தப் படையின் மூலம் தீவிரவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது அந்நாடு. அத்துடன் இந்தப் படையின் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களையும் மக்களுக்காக முன்னெடுக்கிறது. ஆப்ரிக்காவின் வடமேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நலிந்த பாலைவனத் தேசமே மவுரித்தேனியா. இதன் 90 சதவீத நிலப்பரப்பும் சஹாரா பாலைவனத்தினுள் இருக்கிறது. இதன் கிழக்குப் பகுதியில் உள்ள அண்டை நாடு மாலி.

இந்த இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை சுமார் 2,262 கிலோ மீட்டர் தூரமாகும். இந்த எல்லையின் வழியாக ஜிஹாதிகள் மவுரித்தேனியா நாட்டிற்குள் ஊடுருவுவதாகச் சொல்லப்படுகிறது. மாலியும், அதன் அண்டை நாடான புர்கினா பாசோ, நைஜரும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள். 

இந்தப் பாதிப்பை மவுரித்தேனியாவும் எதிர்கொண்டது.குறிப்பாக 2005ம் ஆண்டு முதல் ஜிஹாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்தது. இதனைத் தடுக்க அந்தப் பாலைவனப் பகுதியில் கண்காணிப்பு அவசியமானது. ஆனால், இதற்கு வாகனங்களைப் பயன்படுத்த முடியாது. இந்நிலையில்தான் பாலைவனக் கப்பல் என வர்ணிக்கப்படும் ஒட்டகங்களைப் பயன்படுத்த முடிவெடுத்தது மவுரித்தேனியா அரசு.

*மெஹரிஸ்ட்

மவுரித்தேனியா, ஃபிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழிருந்தபோதே அங்கே 1912ம் ஆண்டு ஒட்டகப்படை நிறுவப்பட்டுவிட்டது. இதற்கு ‘மெஹரிஸ்ட்’ என்று பெயர். மெஹரிஸ்ட் என்றால் ஃபிரஞ்சு மொழியில் ஒட்டகப்படை என்று அர்த்தம். இந்நிலையில் எல்லைப் பகுதியைக் கண்காணிக்க பாலைவனப் பகுதியில் வசிக்கும் நாடோடி குழுவைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்தது அரசு.

காரணம், இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் நாடோடி பழங்குடி மக்கள்.இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி ஜிஹாதிகள் தங்கள் முகாமிற்கு ஆட்களைச் சேர்க்கின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தவும், நாடோடி பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகவும், நாடோடி குழுவிலிருந்தே ஆட்களை தேர்வு செய்தது.

குறிப்பாக பெடோயின் மற்றும் துவாரெக்குகள் என்கிற பழங்குடியினரிடம் இருந்து ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். காரணம், இந்தப் பழங்குடிகள் பாலைவன நிலப்பரப்பு பற்றி நன்கு அறிந்தவர்கள். கூடவே ஒட்டகங்களைக் கையாளுவதில்நிபுணத்துவம் கொண்டவர்கள். 

பின்னர் இவர்களுக்குப் பயிற்சி அளித்து தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் நிலைநிறுத்தி கண்காணிப்பைப் பலப்படுத்தியது.இதனால் 2011ம் ஆண்டுக்குப் பிறகு ஜிஹாதிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பியது மவுரித்தேனியா. இன்று தேசிய கண்காணிப்புப் பிரிவில் ஒன்றாக விளங்கும் இந்த நாடோடிக் குழு 150 வீரர்களையும் 400 ஒட்டகங்களையும் கொண்டு செயல்படுகிறது.

பாரம்பரிய உடைகள் அணிந்தபடி தலையில் தலைப் பாகை, கையில் துப்பாக்கி, வாக்கி - டாக்கி சகிதம் உலா வருகிறது இந்த ‘மெஹரிஸ்ட்’ ஒட்டகப்படை. தவிர, இவர்கள் ட்ரோன்களையும் பயன்படுத்துகின்றனர். இதன்வழியாக கால்நடைகளைத் திருடுபவர்களைப் பிடிக்கின்றனர். இந்த கண்காணிப்பு ஒட்டகப்படை அங்குள்ள மற்ற பழங்குடிகள் மற்றும் மக்களிடம் ஒரு நெருக்கமான உறவை உருவாக்குகின்றனர்.

குறிப்பாக கால்நடைகளைப் பராமரிப்பது, கால்நடைத் திருடர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பது, காணாமல் போன விலங்குகளை மீட்டுத்தருவது ஆகியவற்றின் மூலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இதுமட்டுமல்ல. இந்த எல்லைப் பகுதி மவுரித்தேனியாவின் தலைநகரான நவாத்சோட்டிலிருந்து ஆயிரம் கிமீ தொலைவில் உள்ளது. இதனால், இந்த ஒட்டகப்படை மாநில அளவில் நடக்கும் விஷயங்களை மக்களிடம் தகவலாகக் கொண்டு சேர்க்கிறது.

அத்துடன் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கிறது. இதனால், மக்களும் இந்தப் படையினரிடம் மிகுந்த அன்பைக் காட்டுகின்றனர். படையினருக்குத் தேவையான உதவிகளைச் செய்கின்றனர்.இந்த மெஹரிஸ்ட் படையினருக்கு ஐரோப்பிய ஒன்றியம் பல மில்லியன் யூரோக்களை மானியமாக வழங்குகிறது. அப்படியாக அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட வழிவகை செய்கிறது. இதனால், மெஹரிஸ்ட் படையினரும் உற்சாகத்துடன் பணிசெய்கின்றனர்.

தற்போது மவுரித்தேனியாவின் அணுகுமுறையை ஜிஹாதிகளால் பாதிக்கப்பட்ட சஹாரா நிலப்பரப்பிற்குள் வரும் சாட், நைஜர் உள்ளிட்ட மற்ற நாடுகளும் பின்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றன. இது மெஹரிஸ்ட் படையினரின் பணிக்குக் கிடைத்த பாராட்டாகப் பார்க்கப்படுகிறது.

ஹரிகுகன்