28 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக் கட்டடம்!



பொதுவாக இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டைக் கட்டி முடிக்கவே சில மாதங்களாகும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ‘பிராட் குரூப்’ எனும் கட்டுமான நிறுவனம், 28 மணி நேரம், 45 நிமிடங்களில் 10 மாடிக் கட்டடத்தைக் கட்டி, ‘குறைந்த நேரத்தில் பெரிய கட்டடத்தைக் கட்டிய நிறுவனம்’ என்ற உலக சாதனையைப் படைத்துள்ளது. இதை கட்டுமானத் துறையில் நிகழ்ந்த ஓர் அதிசய நிகழ்வாகவே எல்லோரும் பார்க்கின்றனர்.

மட்டுமல்ல, ‘பிராட்’ நிறுவனத்தின் வியக்க வைக்கும்  தொழில்நுட்பம்தான் எதிர்காலத்தில் கட்டுமானத் தொழிலை ஆட்டி வைக்கப்போகிறது என்கின்றனர். செங்கல், சிமெண்ட், கான்கிரீட் என்று வழக்கமான கட்டுமான முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இந்தக் கட்டடம். ஒரு கார் தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டிருக்கும் காரின் பாகங்களை ஒன்று சேர்த்து எப்படி ஒரு காரைத் தயாரிக்கிறார்களோ, அது போலவே உருவாக்கப்பட்டது இந்த நவீன கட்டடம்.

இதனை துருப்பிடிக்காத ஸ்டீலைக் கொண்டு  கட்டியிருக்கின்றனர். வழக்கமான கட்டடத்துடன் ஒப்பிடும்போது, இதன் எடை பத்து மடங்கு குறைவானது. ஆனால், வலிமையில் 100 மடங்கு அதிகம். அதனால் 9 ரிக்டர் நிலநடுக்கம் வந்தால் கூட இக்கட்டடத்தை அசைக்க முடியாது. பொதுவாக மற்ற கட்டடங்கள் தீ விபத்தில் சேதமடையும். 
இந்த ஸ்டீல் பில்டிங்கை நெருப்பு கூட தீண்டாது. மட்டுமல்ல, சூறாவளி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் எதுவும் செய்ய முடியாது. வழக்கமான கட்டடங்கலில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளை எல்லாம் கவனித்து இதில் சரி செய்திருக்கின்றனர். அதனால் இந்தக் கட்டடத்தை மிகவும் பாதுகாப்பான கட்டுமானம் என்று புகழ்கின்றனர்.

கட்டுமானத் தொழிலில் புரட்சியை உண்டாக்கியிருக்கும் இந்தக் கட்டடத்தை எப்படிக் கட்டினார்கள்?

முதலில் சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் 10 மாடிக் கட்டடம் கட்டப்படுவதற்கான நிலத்தை தேர்வு செய்தனர். ஆம்; இந்த ஸ்டீல் கட்டடத்துக்கான நிலத் தேர்வு மிகவும் முக்கியமானது.

அதற்குப் பிறகு கட்டடம் எப்படியான தோற்றத்தில் இருக்கப் போகிறது , அதனுடைய பாகங்கள் எப்படியிருக்க வேண்டும், கட்டடத்துக்குள்ளே என்ன மாதிரியான வசதிகள் செய்யப்போகிறோம் என கட்டடத்தை வரைந்து திட்டமிட்டனர்.கட்டடத்துக்குத் தேவையான சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், படிக்கட்டுகள் என அனைத்துப் பாகங்களையும் துருப்பிடிக்காத ஸ்டீலில் தயாரித்தனர்.

இவற்றையெல்லாம் ஒரே தொழிற்சாலையில் தயாரித்தனர். ஒவ்வொரு மாடியையும் ஒரு கண்டெய்னர் அளவில் வடிவமைத்தனர். கண்டெய்னர் அளவில் இருக்கும்போது சுலபமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். 

கட்டட பாகங்கள் தயாரானதும் அவற்றைக் கட்டுமானம் நடக்கும் இடத்துக்குக் கொண்டு வந்தனர். இந்தப் பாகங்கள் வருவதற்கு முன்பே இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்தனர். கூடவே பாகங்களைத் தூக்கி சரியான இடத்தில் பொருத்துவதற்காக மூன்று கிரேன்களும் வந்தன.

ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளிக்கும் கட்டடத்தின் தோற்றம் குறித்தும், பாகங்களை எவ்வளவு விரைவாக, எங்கே, எப்படி பொருத்த வேண்டும் என்பது குறித்தும் 360 டிகிரி கோணத்தில் தெரியும்.  இது வழக்கமான கட்டுமான வேலையில்லை என்பதால் அந்தத் தொழிலாளர்களுக்கு முன்பே பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்பதால்  மாற்றுத் தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஏதாவது ஒரு தொழிலாளிக்கு ஓய்வு தேவைப்படும்போதோ அல்லது உணவு இடைவேளையின் போதோ அல்லது இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போதோ வேலை நின்றுவிடக்கூடாது என்பதற்காக மாற்றுத் தொழிலாளிகள் களத்தில் இறங்கி, பணியைத் தொடர்ந்தனர்.

ஒரே நேரத்தில் நிறைய பணியாளர்களை இடைவெளி இல்லாமல் வேலை செய்ய வைத்ததுதான் குறுகிய நேரத்தில் இக்கட்டடத்தைக் கட்டி முடிக்க மூல காரணம். எல்லாமே துல்லியமாக திட்டமிடப்பட்டு, ஓர் அதிகாலையில் கட்டுமானப் பணிகள் மின்னல் வேகத்தில் ஆரம்பித்தன. 

போல்ட் மற்றும் நட்டுகளைக் கொண்டு மிக வேகமாக கட்டடத்தின் பகுதிகளைச் சரியான இடத்தில் பொருத்தினார்கள். கட்டுமானப் பணிகளின்போதே பிளம்பிங் வேலைகளும், எலெக்ட்ரிக் வேலைகளும் துரிதமாக நடந்தன. 28 மணி நேரத்தில் கட்டடத்தைக் கட்டி முடிக்கும்போது, தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளும் செய்யப்பட்டுவிட்டன.

இக்கட்டத்தை எப்போது வேண்டுமானாலும் துளி சேதமின்றி பிரிக்க முடியும்; பிரித்து எடுத்த பாகங்களை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டுபோய் பழையபடி பொருத்திக்கொள்ள முடியும். அதனால் இக்கட்டடத்தை ‘Living Building System’ என்கின்றனர்.இதே அளவு ஒரு கட்டடத்தை வழக்கமான கட்டுமான முறையில் கட்டியிருந்தால் ஆகும் செலவைவிட, இக்கட்டடத்துக்கான கட்டுமானச் செலவும் மிகவும் குறைவு.

மட்டுமல்ல, இந்தத் துருப்பிடிக்காத ஸ்டீல் கட்டடத்தைக் கட்டும்போது தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை. வழக்கமான கட்டுமானப் பணியின்போது ஏற்படும் காற்று மாசுபாடும் இல்லை.குறிப்பாக குறைந்த அளவிலான குப்பைகளே உருவாகின்றன. அதனால் சூழலுக்கு உகந்த கட்டுமானமாகவும் இக்கட்டடம் மிளிர்கிறது.

த.சக்திவேல்