ஊழலில் மிதக்கிறது பாஜக அரசு!



சொல்கிறார் பிஜேபி எம்எல்ஏ!

ஆம். உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜக அரசில்தான் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை பகிரங்கமாக அறிவித்திருப்பவர் அதே பிஜேபி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்தான் என்பது ஹைலைட். அதாவது “இதுவரை இல்லாத ஊழல் மாநிலமாக உத்திரப் பிரதேசம் மாறியுள்ளது...” என்கிறார் பாஜக சட்டமன்ற உறுப்பினரான கிசோர் குர்ஜாரே.

என்ன விஷயம்?

‘சயீல் சோலர் பி6 பிரைவேட் லிமிடட்’ (Sael Solar P6 Private Limited) என்கிற தனியார் நிறுவனம் புதிய சூரிய மின்நிலையத்தை உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்க அனுமதி கோரி இணையத்திலும் நேரிலும் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. மதிப்பீட்டுக் குழுவும் சயீல் நிறுவனத்தின் திட்டத்திற்கு தொடக்கத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் பணியாளர் பிஸ்வாஜித் டட்டாவிடம் (Biswajit Dutta) மூத்த அதிகாரி ஒருவர் இடைத்தரகர் நிகந் ஜெயினிடம் (Nikant Jain) தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கையை விரைவுபடுத்தவும் அமைச்சரவையில் அனுமதி பெறுவதற்கும் ஜெயின்  உதவுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் பிறகு, பிஸ்வாஜித் டட்டா ஜெயினிடம் தொடர்பு கொள்கிறார். அவர் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீட்டிலிருந்து 5 சதவீதம் கமிசன் வேண்டும் எனக் கோருகிறார். அதற்கு முன்தொகையும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

ஆனால், பிஸ்வாஜித் மறுத்துவிட்டார். இதன்பிறகு எந்தவித முறையான காரணமும் தெரிவிக்காமல் திட்டம் மறுபரிசீலனைக்குச் சென்றுள்ளது.

மேலும், டட்டா ‘‘இத்திட்டம் குறித்து எங்களது முதலாளி, யோகி ஆதித்யநாத்திடம் ஏற்கெனவே பேசிவிட்டார்...” என்று ஜெயினிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயின் இது பெரிய விஷயமே இல்லை எனவும் திட்டத்திற்கான அனுமதி தன் மூலம் மட்டும் தான் கிடைக்கும் எனவும் தெரிவித்ததாக சொல்கிறார்கள். இதன்மூலம், இடைத்தரகர்களின் அதிகாரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன.

இதில் ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் பிரகாஷுக்கும் முக்கிய பங்குண்டு என்கிறார்கள்.இந்த ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் பிரகாஷ், லக்னோவில் டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட்டாக அக்டோபர் 2019 முதல் 2022ம் ஆண்டு வரை இருந்துள்ளார். 

இதன்பிறகு, உத்திரப் பிரதேச தொழில் வளர்ச்சி கழகத் துறையின் செயலாளராகவும், இன்வெஸ்ட் உத்திரப் பிரதேசத்தின் (முதலீட்டை ஊக்குவிக்கும் மற்றும் வசதிகளை ஏற்படுத்தும் முகமை) தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

பிஸ்வாஜித் டட்டா புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் பிரகாஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

கவனிக்க... இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரும்வரை இவர் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இடைத்தரகராக இருந்த நிகந் ஜெயினும் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச அரசு விசாரணை நடத்தியதில், கடைசி நிமிடத்தில் சயீல் நிறுவனத்தின் திட்டம் மறுபரிசீலனைக்குச் சென்றதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் இது பிரகாஷின் தீங்கிழைக்கும் நோக்கம், சட்டவிரோதமாக பணமீட்டுதல் அடிப்படையில் நடந்துள்ளது எனவும் தெரிவித்தது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலத்தின் மதிப்பீட்டைக் குறைக்கும் எனவும் கூறியுள்ளது.

நிலைமை இப்படியிருக்க ஊழலுக்கு எதிரான வசனங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார் உத்திரப்பிரதேச மாநில முதல்வரான பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்.
சூரிய மின்நிலைய லஞ்ச ஊழல் பூதாகரமாக வெளியில் வந்த அதேநாளில் கோண்டா பகுதியில் அரசு நிகழ்ச்சியில் தொழில்முனைவோர், இளைஞர்கள் முன்பு பேசிய யோகி ஆதித்யநாத், ‘ஊழலுக்கு எதிராக தங்கள் அரசு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக’க் கூறினார்.

‘‘கறையான்கள் (ஊழல்வாதிகள்) கட்டமைப்பைத் துளையிடுகின்றனர். நீங்கள் ஊழலால் பாதிக்கப்பட்டால் ஒரேயொரு புகார் மட்டும் எழுதுங்கள்... உரிய நடவடிக்கை எடுத்து மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்...” எனக் கூறினார்.மட்டுமல்ல... “லோனிற்கு அனுமதி வழங்குவதற்காக யாராவது உங்களிடம் பணம் கேட்டால், அவர்களை நம்ப வேண்டாம். அரசிடம் தெரிவியுங்கள். நான் விசாரணை நடத்தி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறேன்...” என ஆதித்யநாத் தெரிவித்தார்.

ஆனால், அப்போதுகூட சூரிய மின்நிலைய ஊழல் வழக்கு குறித்து அவர் வாயைத் திறக்கவில்லை.“இதனைக் குறித்துக் கொள்ளுங்கள். நேர்மையற்ற முறையில் யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால், அவர்தான் அவரது குடும்பத்தில் அரசு வேலைக்கு வருவதில் கடைசி மனிதராக இருப்பார். ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப் போகிறோம். அது தேசத்துக்கே உதாரணமாக திகழப் போகிறது. அதிகாரிகளே எச்சரிக்கையாக இருங்கள்...’’ என்றார்.

ஏற்ற இறக்கத்துடன் நன்றாக வசனம் பேசி நடிக்கிறார் என எதிர்க்கட்சிகள் இக்கூற்றை கிண்டலடிக்கின்றன.இது ஒருபக்கம் இருக்க... யோகி மேற்கண்டவாறு வீர வசனம் பேசிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அவரது கட்சி உறுப்பினரே யோகி ஆதித்யநாத அரசு மீது கரியை அள்ளிப் பூசியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காசியாபாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நந்த் கிசோர் குர்ஜார் (Nand Kishor Gurjar), ‘‘தற்போதுள்ள அரசானது இதுவரையில்லாத மிகவும் ஊழலில் ஊறிப்போன அரசு” எனவும் ‘‘உத்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் மிகப்பெரிய ஊழல்வாதி” எனவும் ‘‘அயோத்தி இடங்களை அதிகாரிகள் கைப்பற்றுகிறார்கள்” எனவும் குற்றம் சாட்டினார்.

அத்துடன் மாநிலத்தில் போலி என்கவுண்டர்கள், ‘பசுவதை’ வன்முறைகள் நடைபெறுவதாகவும்; அதிகாரிகள் யோகி ஆதித்யநாத்தை தவறாக வழிநடத்துவதாகவும் படபடவென்று பொறிந்தார்.“உத்திரப்பிரதேசத்தில் நடைபெறும் ஊழலைப் போன்று அகண்ட பாரதத்தில் வேறு எங்கும் நடைபெறவில்லை. 

ஆனால், ஊடகம் இங்கு ராம ராஜ்ஜியம் இருப்பதாக பொய்யாக ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது...” என குர்ஜார் கூறினார். இவர் முன்னெடுத்த ‘கலாஷ் யாத்திரையை’ போலீஸ் தடுத்திருந்ததை இந்த இடத்தில் நினைவில் கொள்வது நல்லது.

“பிஜேபி ஆட்சியின் கீழ், அவர்களது கட்சி உறுப்பினர்களே ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர். அநீதியும் ஊழலும் எப்படி நீக்கமற பரவியுள்ளது என வெளிப்படுகிறது. தற்போது அவர்கள் அறிக்கையை மாற்றிவிடுவார்கள்” என எக்ஸ் தளத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.

உத்திரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் ஊழல் அம்பலப்பட்டுப் போனதும், பாஜக சட்டமன்ற உறுப்பினரின் அரசு குறித்த குற்றச்சாட்டுகளும் யோகி ஆதித்யநாத் ‘ஊழலற்ற மாநிலமாக மாற்றுவேன்’ என்று 2017 முதல் கூறிவருவது வெற்று சவடால்தான் என்பதை நிரூபித்துள்ளது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். என்னவோ போடா மாதவா!

கபிலன்