காமம்... நாட்டையும் காட்டிக் கொடுக்கும்!
பணம் பத்தும் செய்யும். தெரியும். சொல்லச் சொல்ல மனதில் பதிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்த மில்லினியத்தில் பணத்தைவிட காதல் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய இன்றைய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதிலும் சத்யேந்திர சிவலைப் போன்ற சிலர் காதலுக்காக நாட்டைக்கூட காட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
 யார் இந்த சத்யேந்திர சிவல்?
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் சத்யேந்திர சிவல். ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு துணை அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார் சத்யேந்திர சிவல்.
27 வயதான இவர், கடந்த 2021ம் ஆண்டில் இருந்து மாஸ்கோவில் வசிக்கத் தொடங்கினார்.இந்த நேரத்தில்தான் அவருக்கு காதல் வந்தது. சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். அதாவது தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார். ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது காதலி, சத்யேந்திர சிவலை ஏமாற்றினார். உண்மையில் அவர் காதலித்தது சத்யேந்திராவை அல்ல. அவரது வேலையை. சத்யேந்திர சிவலின் வேலையைப் பயன்படுத்தி, அவர் மூலமாக இந்திய ராணுவ ரகசியங்கள் சிலவற்றைப் பெற்றுள்ளார். அதற்குப் பதில் விலை உயர்ந்த சில பரிசுகளை அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
ஒரு பக்கம் காதல்... இன்னொரு பக்கம் காதலி தரும் பரிசுகள்... என இரண்டும் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட சிவலைத் தூண்டியுள்ளது.இந்த சூழலில்தான் சத்யேந்திர சிவலின் நடவடிக்கைகளில் உத்தரப் பிரதேச மாநில காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது வீட்டை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். பாகிஸ்தானுக்காக சிவல் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், அவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் சுற்றி வளைத்து விசாரணைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். விசாரணையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினருக்கு இந்திய ராணுவம் தொடர்பான சில ஆவணங்களைக் கொடுத்ததை சிவல் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு படை அதிகாரியான மோஹித் அகர்வால் கூறும்போது, “சத்யேந்திர சிவலை பல மாதங்களாக கண்காணித்து வந்தோம். அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும் வகையில் இருந்தன. வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தோம். இதில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. யாரிடமெல்லாம் தகவல் தொடர்பை ஏற்படுத்தினார் எனவும் கவனித்தோம். தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் கைது செய்துள்ளோம்.
இவரை விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவருடைய மொபைல் போனைக் கைப்பற்றியுள்ளோம். இதில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்று விசாரித்து வருகிறோம்...” என்கிறார்.
சிவலுக்கு காதல் வலை விரித்து, அவரை உளவாளியாக மாற்றிய பெண் யார் என்பது பற்றிய விசாரணை இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் இதுபோன்று அழகான பெண்களை வைத்து இந்திய அதிகாரிகளை ஹனி டிராப்பில் விழவைத்து அவர்கள் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களைக் கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காம்ஸ் பாப்பா
|