அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்..?



அடுத்த வருடம் அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது. அந்தத் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
டுவிட்டரை எக்ஸாக மாற்றிய எலன் மஸ்க், விவேக் ராமசாமியின் வீடியோ பேட்டி ஒன்றை பதிவிட்டு ஒரே ஒரு வரிதான் குறிப்பிட்டிருக்கிறார். ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ - எலன் மஸ்க்கின் இந்த ஒரு வரியில் உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தை கவர்ந்திருக்கிறார் விவேக் ராமசாமி.

விவேக் ராமசாமியின் பூர்விகம் தமிழ்நாடு. ஆனால், இவரது பெற்றோரின் பெற்றோர்கள் கேரளாவில் பாலக்காடு பகுதியில் குடியேறியவர்கள்.விவேக்கின் அப்பா வி.ஜி.ராமசாமி கேரளாவில் உள்ள ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வேலைக்காக அமெரிக்காவில் குடியேறியவர். அம்மா கீதா மனநல மருத்துவர்.இப்படி கேரளாவும் தமிழ்நாடும் கலந்து இருப்பதால் விவேக் தமிழரா மலையாளியா என்ற குழப்பம் இருக்கிறது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் விவேக்குக்கு இரண்டு மொழிகளும் தெரியும். புரியும். ஆனால், தமிழ் மட்டும்தான் பேச முடியும்.

1985ம் ஆண்டு பிறந்தவர் விவேக். இப்போது 38 வயதாகிறது. இந்தக் குறுகிய வயதில் பல சாதனைகளைச் செய்து அமெரிக்காவின் பிரபலங்களில் ஒருவராக மாறிவிட்டார்.புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஹார்வார்டிலும் யேல்-லிலும் படித்திருக்கிறார். 29 வயதில் ரோய்வண்ட் சயின்சஸ் (Roivant Sciences) என்ற பயோடெக்னாலஜி நிறுவனத்தை ஆரம்பித்தார். 2017 வரை இந்த நிறுவனம் சக்கைப்போடு போட்டது. ஆனால் 2017ல் நிறுவனத்தில் நடந்த சில குளறுபடிகளால் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. உடனே, ஆரம்பித்த நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.

40 வயதுக்குள் அமெரிக்காவில் பெரும் பணத்தை சம்பாதித்தவர்கள் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடும். இந்தப் பட்டியலில் 2016ம் ஆண்டு இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 31.பிசினஸில் இருந்தாலும் விவேக்குக்கு அரசியல் ஆர்வம் அதிகம். தீவிர வலதுசாரி கருத்துக்களைக் கொண்டவர். அமெரிக்காவில் இரண்டு பெரிய கட்சிகள். வலதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும் ரிபப்ளிகன் கட்சி. மற்றொன்று அதற்கு எதிரான டெமாக்ரடிக் கட்சி. விவேக் ராமசாமி ரிபப்ளிகன் கட்சி உறுப்பினர்.

விவேக்குக்கு ரிசர்வேஷன் என்று சொல்லப்படும் இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சிறப்பு சலுகைகள் போன்றவை பிடிக்காது. அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அதிகம். விவேக் அப்படி பிரித்துப் பார்க்கக் கூடாது. திறமை அடிப்படையில்தான் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று கூறி வருபவர்.
அமெரிக்க அரசில் கல்வித் துறை இருக்கக் கூடாது என்று சொல்லி அதிர்வுகளை ஏற்படுத்தினார். பள்ளிகள் மூலம் அரசியல் ரீதியாக தவறான கருத்து பரப்பப்படுகிறது என்பது விவேக்கின் வாதம்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற குற்ற விசாரணை நிறுவனமான எஃப்.பி.ஐ.யை மூடவேண்டும் என்கிறார் விவேக்! 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக இப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடனே போட்டியிடுவார் என்கிறார்கள். குடியரசுக் கட்சி அதாவது ரிபப்ளிகன் கட்சி, சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் விவேக் ராமசாமி.

முதலில் அவர் கட்சிக்குள் நடத்தப்படும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். இதுதான் அமெரிக்கத் தேர்தலில் முதல் ரவுண்ட். அதில் வென்றால்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். பார்ப்போம் முதல் ரவுண்டில் விவேக் ராமசாமி ஜெயிக்கிறாரா என்று.  

என்.ஆனந்தி