காம்ப்ரமைஸ் செய்த நயன்தாரா!



தென்னிந்தியாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் நயன்தாரா, இங்கே மார்க்கெட் தடுமாறும் நிலையில்தான் பாலிவுட் பக்கம் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இவரது முதல் பாலிவுட் படத்தில், ஜோடி ஷாரூக்கான். 
இதற்கு ஒரே காரணம் இயக்குநர் அட்லீ. நயன்தாராவுக்கு இந்தியில் எந்தவிதமான மார்க்கெட்டும் இல்லாத போதும் கூட அட்லீயின் பரிந்துரையால் ஷாரூக்கானும் நயன்தாராவுக்கு ஓகே சொல்லியிருந்தார்.‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. செப்டம்பர் 7ம் தேதி ‘ஜவான்’ வெளியாக இருக்கிறது.

இதனால் படத்தின் ப்ரமோஷன் வேலைகளை படக்குழு நடத்தி வருகிறது. ஷாரூக்கான் பேட்டிகள் கொடுக்க தயாராகிவிட்டார். இங்கேதான் பிரச்னை. பொதுவாகவே பாலிவுட் படங்கள் என்றால் அப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் என நட்சத்திரங்கள் எல்லோருமே ஒரு குழுவாக உட்கார்ந்து அரட்டை அடித்தபடியே பேட்டி கொடுப்பார்கள். இங்கே தமிழ் சினிமாவில் இருப்பது போல், ஊடகங்கள் மீது அவர்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை. நம்பர் ஒன் டிவி சேனலில் இருந்து லோக்கல் யூடியூப் வரை பேட்டிகள் கொடுப்பார்கள்.இதனால் ப்ரமோஷனுக்கான திட்டமிடல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக, தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் முடிந்துவிட்டால் அதன் பிறகு அந்த யூனிட் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்து வருபவர் நயன்தாரா.
இங்கே அவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் படங்களில் நடித்தாலும் கூட ப்ரமோஷனுக்கு எட்டிப் பார்க்க மாட்டார்.இதுநாள் வரையில் தன்னுடைய பிடிவாதத்தை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத நயனுக்கு இப்போது சிக்கல்.

பெரும் மார்க்கெட்டான பாலிவுட்டில் முதல் படம்... ஷாரூக்கான் ஹீரோ... இதனால் என்ன செய்வது என்று யோசித்தவர், வேறு வழியில்லாமல் ப்ரமோஷனில் கலந்து கொள்கிறேன் என்று காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறாராம்.‘ஜவான்’ தமிழிலும் வெளியாக இருப்பதால், நயன்தாராவின் பேட்டி இங்கேயும் ஒரு ரவுண்ட் அடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

காம்ஸ் பாப்பா