கூவம் இல்லாவிட்டால் சென்னைக்கு குடிநீர் இல்லை! மெட்ராஸ் டே ஸ்பெஷல்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் முகத்தில் மரு வைத்தமாதிரி கரும்புள்ளியாக, செம்புள்ளியாக இருப்பது கூவம்.
ஆகஸ்டு 22 முதல் ஒருமாத காலத்துக்கு தனது 384வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடும் சென்னைக்கு கூவம் ஒரு திருஷ்டி பூசணிக்காய் என்றால் அது மிகையாகாது.
கூவத்தை லண்டனின் தேம்ஸ் நதியாக கற்பனை செய்யும் சென்னை வாசிகளின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடுவதுடன் சென்னைவாசிகள் குடிக்கும் மூன்றில் ஒரு கிளாஸ் நீர் இன்றும் கூவத்தில் இருந்தே கிடைப்பதாக ஆச்சரியம் கிளப்புகிறார் சென்னை வரலாற்று ஆய்வாளரான வெங்கடேஷ் இராமகிருஷ்ணன்.

‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி கடற்கரையில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம் வரைக்குமான சுமார் 72 கிலோ மீட்டர் தூரத்துக்கு கூவம் ஆறு இருக்கிறது. திருவள்ளூரில் இருக்கும் திருவேற்கோலம் எனும் சிவன் கோயில் இருக்கும் இடம்தான் கூவத்தின் பிறப்பிடம். திருவேற்கோலத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயரே கூவம் கிராமம்.  உண்மையில் கூவம் என்ற பெயரே அண்மைக் காலத்ததுதான். ஆங்கிலேயர் காலத்தில் இந்தக் கூவம் ஆற்றை சிந்தாதரிப்பேட்டை ஆறு, பூந்தமல்லி ஆறு, திருவல்லிக்கேணி ஆறு என அந்தந்த இடத்தில் ஓடும் ஆற்றை வைத்தே ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள்.  சென்னைப் புதுப்பேட்டை பக்கத்தில் கோமளீஸ்வரம் என்ற ஒரு சிவன் கோயில் உண்டு. இந்தப் பெயரை வைத்துக்கூட கூவம் என்ற பெயர் பிற்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆங்கிலேயருக்கு தமிழ்ப் பெயர்களை உச்சரிப்பதில் பெரிய குறைபாடு இருந்தது. உதாரணமாக சென்னை மாம்பலம் ஏரியாவை மார்மலம் என்று உச்சரித்து இருந்தார்கள்...’’ என்று சொல்லும் வெங்கடேஷ், கூவம் ஆறு இன்று நேற்று அல்ல... ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இப்படி கலீஜாகிவிட்டது என்று ஷாக் கொடுத்தார்.
‘‘கூவம் ஆற்றின் நீர் எங்கிருந்து வருகிறது என்றால் பாலாறு பிரிந்து கொசஸ்தலையாக மாறும் புள்ளியில் இருந்து. ஆம். இந்த கொசஸ்தலை ஆறு பிரிந்து கூவம் ஆறாக மாறும் இடம்தான் திருவேற்கோலம் அல்லது இன்றைய கூவம் கிராமம்.
1879ல் ஆங்கிலேயர்கள் இந்த கூவம் ஆற்றில் ஒரு தடுப்பணையைக் கட்டி கூவம் நீரை செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருப்பி விட்டார்கள். அதுமாதிரி 1942ல் திருவள்ளூர் மாவட்டத்தில் கேசவரம் எனும் இடத்தில் ஒரு தடுப்பணையைக் கட்டி கூவம் நீரை பூண்டி ஏரிக்கு திருப்பி விட்டார்கள். இந்த இரண்டு தடுப்பணைகளால்தான் கூவம் ஆறு நூறாண்டுகளுக்கு முன்பே கழிசடையாக மாறியது...’’ என்று சொல்லும் வெங்கடேஷ் அதற்கான காரணங்களையும் அடுக்கினார். ‘‘ஆங்கிலேயர் காலத்தில் கூவம் ஆற்றின் கரையை ஒட்டிதான் பல கட்டுமானங்கள் வந்தன. உதாரணமாக தலைமைச் செயலகம், சிவன் கோயில்கள், கல்லூரிகள், எழும்பூர் மியூசியம், ஜூ... இப்படி எல்லாமே கரையை ஒட்டித்தான் கட்டப்பட்டன.
ஆறு இருப்பதால் கட்டுமானப் பொருட்களை படகுகளில் ஏற்றி அதைத் தள்ளி கொண்டுவருவது இலகுவாக இருந்தது. படகு ஓட்ட முடியாததற்குக் காரணம் கூவம் ஆழம் இல்லாமல் இருப்பது. அத்தோடு கழிவு நீர் அகற்றம், பாதுகாப்பு கருதி கரையோரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், தடுப்பணைகள் கட்டப்பட்டதால் ஆற்றுக் கழிவுகள் இயற்கையான பாதையில் கடலில் போய்ச் சேராமல் இரண்டு அணைகளுக்கு திருப்பி விடப்பட்டதால் கழிவுகளும் கசடுகளும் குவிந்து கூவத்தை குப்பைகள் நிரம்பிய குட்டையாக மாற்றிவிட்டது...’’ என்று சொல்லும் வெங்கடேஷ் கூவத்தின் அன்றைய சிறப்புகளையும் பட்டியலிட்டார்.
‘‘திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டு இரண்டு முறை அவர்களை வென்றது... பல்லவர்கள் - சாளுக்கிய மன்னரான இரண்டாம் புலிகேசியோடு சண்டை... பிற்காலச் சோழர்கள் - சாளுக்கியர் போர்... இப்படி எல்லாமே இந்த கூவத்தின் கரைகளில்தான் நடந்தன.
நுங்கம்பாகத்தில் இருக்கும் காலேஜ் ரோடு ஆங்கிலேயர் கூவத்தை ஒட்டி கட்டிய முதல் காலேஜ். சென்னைப் பல்கலைக் கழகம், ஆற்காடு நவாப்புகள் கட்டிய திருவல்லிக்கேணி கலாஸ் மகால், திரையரங்குகள், மாட மாளிகைகள்... எல்லாமே கூவத்தின் கரையை ஒட்டியே ஆங்கிலேயர்கள் கட்டினார்கள்.
இன்றைய நிலையில் சென்னைக்குக் குடிநீர் கிருஷ்ணா நதி, வீராணம் ஏரி, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் கிடைத்தாலும் அதுவும் போதாத நிலையில்தான் சென்னை இருக்கிறது.
சென்னைவாசிகள் இன்று குடிக்கும் குடிநீரில் மூன்றில் ஒரு பகுதி செம்பரம்பாக்கத்தில் இருந்தும், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்தும்தான் கிடைக்கிறது. மொத்தத்தில் சென்னையின் வளர்ச்சிக்கு கூவம்தான் கைகொடுத்தது.
அதுவும் கூவத்தை பலிகொடுத்து. கசடான கூவத்தால் கொசு, நோய்கள், நாற்றம் என்று இருந்தாலும் அதை ஓரளவு சமாளிக்க கூவத்தின் முகத்துவாரமான சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதிகளை சுத்தப்படுத்துவதன் மூலம் கடல் தண்ணீரை கூவத்தில் பாய்ச்சி கொஞ்சமாவது கூவத்தை சுத்தப்படுத்தும் முயற்சிகளுக்கு தமிழக அரசு உதவப் போவதாக சொல்லியிருக்கிறது. கூவம், தேம்ஸ் நதியாக ஒருபோதுமே இல்லை என்றாலும் அதையும் ஓரளவுக்கு சுத்தமாக வைத்திருப்பது நம் எல்லோரது கடமையும்தான்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் வெங்கடேஷ்.
டி.ரஞ்சித்
|