இனியும் லவ்வர் பாயா நடிச்சா நல்லாவா இருக்கும் ..? கேட்கிறார் துல்கர் சல்மான்
‘‘கூடிய சீக்கிரம் 40 வயது தொடப் போறேன்... இனிமேலும் சாக்லேட் பாய், லவ்வர் பாய், இந்த டெம்ப்ளேட்டுக்குள் எல்லாம் படம் செய்யக் கூடாதுன்னு தோணுது...’’ பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஸ்டேட்மெண்ட் உடன் பேசத் துவங்கினார் துல்கர் சல்மான். அவர் கொடுத்த ஸ்டேட்மெண்ட்டுக்கு ஏற்பவே வெளியாகி இருக்கிறது ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தின் டிரெய்லர்.
 எதனால் இந்தப் பெயர்?
‘கொத்தா’ என்பது ஒரு ஃபிக்ஷனல் பகுதி. அங்கே தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கும் இளைஞன்... அவனைச் சுற்றி நடக்கும் கதை என்பதால் இந்தப் பெயர்.
ஒவ்வொரு மொழிக்கும் இந்தப் பெயர் வேறு வேறு அர்த்தம் கொடுத்தது. தமிழில் ‘கோதா’ என்றால் மல்யுத்தக் களம் அல்லது சண்டை போடுகிற களம், இப்படி பொருள் கிடைத்தது. தெலுங்கில் புதுசு அப்படின்னு ஒரு பொருள் கிடைச்சது. அதனால் ஒவ்வொரு மொழிக்குமே படத்துக்கு ஏத்த மாதிரி இந்தப் பெயர் பொருத்தமாகவும் அமைந்தது.
 ‘துல்கர் என்றால் காதல்’ என்கையில் திடீரென ‘குருப்’, ‘சுப்’, இந்தியில் ‘கன்ஸ் & குலாப்’, இப்போ ‘கிங் ஆப் கொத்தா’... ஏன் இந்த மாற்றம்?
2012ல் நடிக்க வந்தப்ப அந்த வயசுக்கு லவ்வர் பாய், சாக்லேட் பாய், ரொமான்ஸ் இதெல்லாம் செட் ஆச்சு. தொடர்ந்து 10 வருடங்கள் அப்படியான படங்களும் நடிச்சு காண்பிச்சாச்சு. கூடிய சீக்கிரம் 40ஐ நெருங்கப் போகிறேன். இன்னமும் லவ் பண்ணிக்கிட்டு டூயட் பாடிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்..? இந்த மாதிரி கேரக்டர்களும் செய்வேன்னு ஆடியன்ஸுக்கு மாற்றங்கள் கொடுக்கணும். இல்லேன்னா அவங்களுக்கும் போர் அடிச்சிடும்.
அதுமட்டுமில்லாம பெண்களே இப்போ ‘ஐ லைக் ரக்கெட் பாய்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களே!
‘ஓகே கண்மணி’, ‘சீதாராமம்’ உட்பட நிறைய காதல் படங்கள் நடிச்சாச்சு. ‘சீதாராமம்’ தாண்டி இனிமே காதல் கதை என்ன நடிக்க இருக்கு என்கிற கேள்வியும் எனக்குள்ள வந்துடுச்சு. அதனால்தான் என்னுடைய பாதையை மாத்திட்டேன். மக்களையும் இனிமேல் சர்ப்ரைஸ் பண்ணணும்... எங்கேயும் போர் அடிச்சிடக் கூடாது... அதனால்தான் இந்த மாற்றம்.
இயக்குநர் அபிலாஷ் ஜோஷிய் பற்றி சொல்லுங்க..?
என்னுடைய நீண்ட நாள் நண்பர். ரொம்ப வருஷமா வேலை நிமித்தமா நிறைய டிராவல் செய்திருக்கோம். ஆரம்பத்தில் விளம்பர இயக்குநராதான் அவருடைய கரியரை ஆரம்பித்தார். என் கூடவும் அப்பா கூடவும் நிறைய ப்ராஜெக்ட்களில் கூட இருந்திருக்கார். இந்தக் கதை முழுக்க முழுக்கவே ஒரு கற்பனைக் கதை.
எனக்குத் தெரிந்து காரைக்குடிக்குப் போய் செட் போட்ட ஒரே டீம் நாங்களாகத்தான் இருப்போம்! அந்த அளவுக்கு பட்ஜெட் பெருசு. படம் முழுக்கவே நிறைய ஆழமான காட்சிகளும், கேரக்டர்களும் இருந்துச்சு. ஆக்ஷன், வன்முறை, காதல், எமோஷன், நட்பு இப்படி எல்லாமும் கலந்த கதையா எனக்கு சொன்னார். முக்கியமான விஷயம் - நான் நடிச்ச படங்களிலேயே பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுதான். மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனாக இருந்தும் கூட சினிமாவில் கால் பதிக்கத் தயங்கினீர்கள்... பத்து வருட பயணத்திற்குப் பிறகு இப்போது திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு?
சினிமாவில் ஆர்வம் இருந்துச்சு. ஆனா, அப்பா அளவுக்கு வொர்க் அவுட் ஆகுமானு என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லாத நிலை. அதனால்தான் ஆரம்பத்தில் தயங்கினேன். ஒரே ஒரு சந்தோஷம்... தயங்கி அங்கேயே நிக்காம குறைந்தபட்சம் ஒரு முயற்சியாவது செய்துட்டேன்னு இப்ப திரும்பிப் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.
சில படங்கள் ஒர்க் அவுட் ஆகியிருக்கு... சில படங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கல... இருந்தாலும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சீதாராமம்’ மாதிரியான படங்கள் நம்ம இந்தியா தாண்டி உலகம் முழுக்கவே கொண்டு போய் சேர்த்திருக்கு. இதெல்லாம் பார்க்கும் பொழுது நல்லவேளை இதை எல்லாம் மிஸ் செய்யலைன்னு தோணுது. ஆனா அப்பா அளவுக்கு ஜெயிக்கறதெல்லாம் பெரிய டாஸ்க்.
உங்க கேரக்டர்..?
இதுவரைக்கும் நான் நடிச்ச கதைகளிலேயே இந்த ராஜு கேரக்டர்தான் ரொம்ப ஆழமான, கேரக்டர் ஸ்கெட்ச்னு நினைக்கிறேன். லவ் பண்ணணும், ஆக்ஷன் அதிரடியில் மாஸ் காட்டணும், டான்ஸ் ஆடணும், ஆக்ரோஷமான எமோஷனை வெளிப்படுத்தவும், இப்படி இந்த கேரக்டருக்கு நிறைய வேலை இருந்துச்சு.
எனக்கு மட்டுமில்ல... இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேருக்குமே நடிக்கிறதுக்கு நிறைய ஸ்கோப் இருக்கிற கேரக்டர்களா அமைந்தது. படமும் மலையாளத்தைத் தாண்டி மத்த மொழிக்கும் சொந்தமானதா மாறினதுக்கு இதில் இருக்கும் கேரக்டர்களும் நடிகர்களும் கூட காரணம். டான்சிங் ரோஸ் சபீர் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி அத்தனை பேருக்குமே ஆழமான கேரக்டரா இருக்கும். உங்களுடைய அடுத்தடுத்த படங்கள்..?
இந்தியில் ‘கன்ஸ் & குளாப்’ வெளியாகிடுச்சு. சவுபின் ஷாகிர் உடன் ‘ஒதிரம் கடக்கம்’, வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’, தமிழ், தெலுங்கு இரண்டு மொழியில் ராணா டகுபதி தயாரிப்பில் ‘காந்தா’ படம். இந்தப் படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ‘த ஹன்ட் ஃபார் வீரப்பன்’ ஆவணப் படம் ஓடிடில வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இன்னும் சில ப்ராஜக்ட்டுகள் பேசிக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொண்ணா அறிவிப்புகள் வரும். சூர்யா சார் + சுதா கோங்ரா மேம் புராஜெக்ட்ல என் பெயர் அடிபடுது. ஆனா, இப்ப வரைக்கும் அது உண்மையில்ல. ஆனா, அவங்க காம்போ கொடுத்த ஹிட்தான் தென்னிந்திய படங்களைத் திரும்பிப் பார்க்க வைச்சிருக்கு.
‘கிங் ஆப் கொத்தா’ எப்படிப்பட்ட அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு கொடுக்கும்?
2:30 மணி நேரம் ஏதோ ஒரு கற்பனை உலகத்துல பயணிக்கலாம். லவ், ஆக்ஷன், கமர்ஷியல் எல்லாம் கலந்த அதிரடி எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும். எனக்கும் ரொம்ப புதுசு. படம் ரொம்பப் பெருசு. உங்க கூடவே நானும் காத்திருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|