தேர்தல் வரும் பின்னே... சிஏஜி அறிக்கை வரும் முன்னே!
மத்திய கணக்கு தணிக்கை குழுவான சிஏஜி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் வீசியிருக்கும் இந்த அணுகுண்டு ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. அதாவது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் விதிமீறல்கள் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக ‘பாரத்மாலா’ என்ற நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் மதிப்பீட்டைவிட பல லட்சம் கோடி அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
 ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அதன் சாலைகளின் நிலையைக் கொண்டே அளவிட முடியும். இதனால்தான், நான்கு வழிச் சாலைகள் இன்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும் சாதனையாக குறிப்பிடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த இன்றைய மத்திய அரசு பாரத்மாலா திட்டம் அல்லது பாரத்மாலா பரியோஜனாவை அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளின் நெட்வொர்க்கை உருவாக்குவதே இதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது.
 ‘சாலைகளை மேம்படுத்துவதுடன் சரக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 50 தேசிய வழித்தடங்கள் கட்டப்படும்; இப்போது சுமார் 300 மாவட்டங்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதை மாற்றி நாடு முழுவதும் 550 மாவட்டங்கள் இணைக்கப்படும். இதனால், நாட்டின் லாஜிஸ்டிக் செயல்திறன் அதிகரிக்கும்’ என்றும் சொல்லப்பட்டது.
 இதனடிப்படையில் சென்னை - சேலம் வழித்தடம், தில்லி - வதோதரா எக்ஸ்பிரஸ்வே, பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை உட்பட பல சாலைகள் 8 வழிச் சாலையாக மாற்றப்படும். மும்பை - கொல்கத்தா, ஹைதராபாத் - அவுரங்காபாத், மும்பை - கன்னியாகுமரி ஆகியவை உட்பட பல பொருளாதார வழித்தடங்கள் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல் பங்களாதேஷ் - பூடான் - நேபாளம் - மியான்மர் - தாய்லாந்து - வங்கதேசத்துடனான சாலை வழி போக்குவரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
 2015ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட செலவு ரூ.10.63 லட்சம் கோடி. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்த திட்டத்தில்தான் பல லட்சம் கோடி விதிமீறல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது சிஏஜி.அதாவது ‘பாரத்மாலா திட்டத்தில் துவாரகா விரைவுச் சாலையை மேம்படுத்த, ஒரு கிலோமீட்டருக்கு முதலில் 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பின்னர் அதனை 14 மடங்கு உயர்த்தி 250 கோடியாக நிர்ணயித்துள்ளனர். இதுபோல், இந்தத் திட்டத்தில் மொத்தமாக 34,800 கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்க ரூ.5,35,000 கோடியை அமைச்சரவைக் குழு அங்கீகரித்தது.
 ஆனால், 26,316 கி.மீ. நீள நெடுஞ்சாலைக்கே ரூ.8,46,588 கோடியை அரசு செலவு செய்துள்ளது. ஒரு கி.மீ சாலைக்கு ரூ.15.37 கோடி செலவு செய்ய வேண்டிய இடத்தில், இரு மடங்காக, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.32.17 கோடி செலவு செய்துள்ளார்கள். இனி, மிச்சத்தை முடிக்க இன்னும் கூடுதல் தொகை ஒதுக்க வேண்டிய நிலை’ என்கிறது சிஏஜி அறிக்கை.
இன்னும் 9 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுபோன்ற தகவல்கள் வெளியானால் எதிர்க்கட்சிகள் விடுவார்களா?
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்கள் பிரிவு தலைவி சுப்ரியா னேட் தில்லியில் உடனே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 7 பெரிய ஊழல்களை செய்துள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
‘‘துவாரகா விரைவுச் சாலையின் உயர்த்தப்பட்ட திட்டச் செலவு 14 மடங்கு உயர்ந்துள்ளது. பாரத்மாலா திட்டத்துக்கான டெண்டர் முறைகேடுகள், ஏலதாரர்கள் டெண்டர் நிபந்தனையை பூர்த்தி செய்யாதது, தவறான ஆவணங்களின் அடிப்படையில் ஏலதாரர்கள் தேர்வு செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் அல்லது தவறான டிபிஆர்-கள் இல்லாமல் வழங்கப்பட்ட பணிகள் மற்றும் ரூ.3,598.52 அளவுக்கு நிதியை திருப்பிவிட்டது போன்றவற்றையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.
தமது நேரடி கண்காணிப்பில் நடந்த பாரத்மாலா திட்டங்களின் திறமையின்மைக்கும் ஊழலுக்கும் பிரதமர் பொறுப்பேற்பாரா?
ஆய்வு செய்யப்பட்ட 5 சுங்கச்சாவடிகளும் விதிகளை மீறியதையும் சிஏஜி கண்டறிந்துள்ளது. இந்த தணிக்கை நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாகக் கருவூலத்துக்கும், பயணிகளுக்கும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மீது பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
ஜான்சி
|