மஷ்ரூம் குயீன்
இந்தியாவின் பிரபலமான நூறு விவசாயிகளைப் பட்டியலிட்டால், அதிகபட்சமாக பத்து பெண் விவசாயிகளாவது இடம் பிடிப்பார்கள். அந்தளவுக்கு ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையாக இருக்கிறது, விவசாயம். அந்தப் பத்து விவசாயிகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கக்கூடிய திறன் வாய்ந்தவர், பீனா தேவி.
 பீகாரில் காளான் மற்றும் காய்கறிகள் விவசாயத்தில் கொடிகட்டிப் பறக்கும் பெண் விவசாயி இவர்.காளான் விவசாயத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் பிசினஸ்வுமனாக மாறுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவரே. மட்டுமல்ல;பீனா தேவியின் முயற்சியால் பீகாரின் குக்கிராமத்தில் வாழ்ந்து வந்த பத்தாயிரத்துக்கும் மேலான பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டுமளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.
 பீனாவின் கதை பலருக்கும் உந்துதல் அளிக்கக்கூடியது.பீகாரில் உள்ள தில்கரி எனும் குக்கிராமத்தில் 1977ம் வருடம் பிறந்தார் பீனா தேவி. வறுமை வாட்டியதால் பெரிதாக அவரால் படிக்க முடியவில்லை. முங்கர் மாவட்டத்திலுள்ள தௌரி கிராமத்தில் வசித்து வந்த ஒரு கூலித் தொழிலாளிக்கு பீனாவைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பிறகு தௌரி கிராமத்திலேயே இருக்க வேண்டிய நிலை.
 திருமணம் முடிந்தபிறகு பெரும்பாலான இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் அனுபவமே பீனாவுக்கும் கிடைத்தது. ஆம்; வீட்டைச் சுத்தம் செய்வது, சமைப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது என அவரது அன்றாட வாழ்க்கை ஒரே மாதிரி நகர்ந்தது. வேலைகளை முடித்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கூட வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார்.
 வீட்டுக்கு வெளியே இருக்கும் எந்த வேலையையும் செய்வதற்குத் திறனற்றவர்கள் பெண்கள் என்ற மூட நம்பிக்கை பீனாவுக்கும், அவரது கிராமத்துப் பெண்களுக்கும் கற்பிக்கப்பட்டிருந்தது. வீட்டைவிட்டு வெளியே வந்து ஒரு வேலையைச் செய்வது என்பது பீனா மாதிரியான பெண்களுக்கு ஒரு சாகசம். இந்த சாகசத்தைச் செய்ய மற்ற பெண்கள் விரும்பவில்லை. ஆனால், பீனா விரும்பினார்.
ஆம்; குடும்பத்தினரிடம், விவசாயம் செய்யப்போகிறேன் என்று பீனா சொன்னார். யாருமே அவரை உற்சாகப்படுத்த வில்லை. அத்துடன் குடும்பத்தினரும், சுற்றியிருந்தவர்களும் பீனாவை ஏளனப்படுத்தினர். சிலர் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுகூடக் கேட்டனர். இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது போன்ற அறிவுரைகளும் அள்ளி வீசப்பட்டன. எதையுமே பீனா கண்டு கொள்ளவில்லை.
பீனாவின் கிராமத்துக்கு அருகில் விவசாய அறிவியல் மையம் காளான் வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாய நுட்பங்கள் குறித்த பயிற்சி அளித்தது. அதில் சேர்ந்து காளான் வளர்ப்பு குறித்து படித்தார். காளான் வளர்ப்பதற்கு குறைவான இடம் இருந்தாலே போதும் என்ற தகவல் பீனாவை ரொம்பவே கவர்ந்தது.
யாருடைய உதவியும் இல்லாமல் காளான் விவசாயத்தை தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே களத்தில் இறங்கினார். வீட்டிலிருந்த பழைய கட்டிலுக்குக் கீழே இருந்த இடத்தில் காளான் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். நான்கு சுவர்களுக்குள்ளே காளான் வளர்க்கும் முறையைக் கற்றிருந்தார் பீனா. ஒரு கிலோ காளானை உற்பத்தி செய்து காட்டியபிறகே பீனாவின் மீது குடும்பத்தினருக்கு நம்பிக்கை வந்தது. சுற்றியிருந்தவர்களும் வியப்புடன் பீனாவை அணுக ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு வீட்டுக்கு வெளியே பரந்த இடத்தில் காளானை உற்பத்தி செய்யத் தொடங்கினார் பீனா. வெறுமனே காளான் விவசாயம் மட்டுமே செய்யவில்லை. விளைந்த காளானை சந்தைக்கு எடுத்துச்சென்று விற்பனையும் செய்தார் பீனா.
காளான் மட்டுமல்லாமல் அந்தந்த காலங்களில் விளையும் காய்கறிகளையும் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். பசுவின் கோமியம், சாணம், வேப்பிலைச் சாறு போன்றவற்றைப் பயன்
படுத்தி இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்தார். கோமியம் மற்றும் சாணத்தைப் பயன்படுத்தியதால் மீண்டும் ஏளனத்துக்கும், கேலிக்கும் உள்ளானார்.
அவருடைய தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் அந்த ஏளனத்துக்கும், கேலிக்கும் பதில் தந்தன. தான் மட்டுமே முன்னேறினால் போதும் என்று நின்றுவிடாமல் தன்னைச் சுற்றியிருந்த பல குடும்பப் பெண்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறார் பீனா. இன்று தௌரி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவியாகிவிட்டார் பீனா தேவி. அவர் உள்ள கிராமத்தைச் சுற்றியிருக்கும் 105 கிராமங்களிலும் பீனாவின் பெயர் பிரபலம். இதுவரை காளான் வளர்ப்பு குறித்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். இதில் 1,500க்கும் அதிகமான பெண்கள் காளான் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டுமல்ல; 750 பெண்களுக்கு ஸ்மார்ட்போனை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொடுத்து, டாடா டிரஸ்ட் வழங்கிய விருதை தன்வசமாக்கியிருக்கிறார். இப்போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். காளான் வளர்ப்பில் மாதம் 40 ஆயிரமும், மற்ற காய்கறிகள் மூலம் மாதம் 60 ஆயிரமும் கிடைக்கிறது.
மொத்த குடும்பத்தையும் தனி ஒரு மனுஷியாகவே பார்த்துக்கொள்கிறார். பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு வருடந்தோறும் ‘நரி சக்தி புரஸ்கார் ‘என்ற விருதை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. 2020ம் வருடமே நரி சக்தி புரஸ்காரைத் தன்வசமாக்கியவர் பீனா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|