தமிழ்ப் பற்றாளரான நீங்கள் மலையாளியை இயக்கியது எப்படி..? பதில் சொல்கிறார் தங்கர் பச்சான்



காட்சி ஊடகம் பலருக்கு பணப் பெட்டகம்; சிலருக்கு அது சமூக மாற்றத்துக்கான பேராயுதம். அந்த வகையில் சமூக அவலங்களையும், விட்டுப்போன சொந்த பந்தங்களையும், வெள்ளந்தி மனிதர்களின் வெள்ளை மனதையும் ஒளிவு மறைவு இல்லாமல் தன்னுடைய படைப்புகள் வழியே சொல்லும் ஆகச்சிறந்த  படைப்பாளி தங்கர் பச்சான். 
நூறு படங்கள் சேர்ந்து செய்யவேண்டிய சமுதாயக் கடமையை இவருடைய சில படங்கள் செய்துள்ளன என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை. ‘அழகி’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ உட்பட இவருடைய பல படங்கள் காலம் கடந்து இன்றளவும் பேசப்படுகின்றன.

வெற்றி, தோல்வி என்ற சினிமா பந்தயத்துக்கு அப்பாற்பட்டவரான இவர் எப்போது படம் இயக்கினாலும் மக்கள் மனதை துல்லியமாய் படித்து, சமூக மாற்றத்துக்கான படங்களைக் கொடுக்கத் தவறியதில்லை. அந்த வரிசையில் வெளிவரவுள்ளது ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கெளதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வைரமுத்து - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் பாடல்கள் ஏற்கனவே வைரலாகிய நிலையில் சமீபத்தில் மேனாள் நீதியரசர் சந்துரு  வெளியிட்ட திரை முன்னோட்டமும் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது.    

ஏன் இந்த இடைவெளி?

நல்ல சினிமாவை எடுக்க இடைவெளி அவசியம். மோசமான படங்கள் எடுக்க இடைவெளி தேவைப்படாது. ஒரு படைப்பாளி தொடர்ந்து இயங்குவதற்கு கதைகள் மட்டும் போதாது. அதற்கான சூழலும் முக்கியம். மக்கள் நல்ல படங்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருந்தால் நான் மட்டும் அல்ல, பல இயக்குநர்கள் தொடர்ந்து படம் செய்திருப்பார்கள்.
 நல்ல சினிமா எது என்பதை மக்கள் அடையாளம் காண முன் வரவேண்டும். வீடு தேடித் தர முடியாது. அன்றாடத் தேவையான உணவுப் பொருட்கள் எங்கு தரமாக கிடைக்கும் என்று தேடிப்பிடித்து வாங்கும் மக்களுக்கு நல்ல சினிமா எது என்று தெரியாதா? படங்களை எடுப்பது படைப்பாளியின் வேலை என்றால் அதற்கு ஆதரவையும், வரவேற்பையும் கொடுக்க வேண்டியது  மக்கள் வேலை.

திரை முன்னோட்டத்தில் அப்பா - மகன் முரண்பட்டு நிற்கிறார்களே... இது அப்பா - மகன் உறவு பற்றிய படமா?

இது அப்பா, மகன் கதை மட்டுமல்ல. இது கணினிமயமான உலகம். எல்லோரும் அந்தரத்தில் மிதக்கும் நிலையில் இருப்பதுபோல் வாழ்கிறார்கள். சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் கருவிகளுடன்தான் உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். 
சக மனிதர்களை சந்திப்பது, பேசுவது, உறவாடுவது என உணர்வில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.கருவியிடம்தான் காதலையும், அன்பையும் கொட்டுகிறார்கள். அந்த வகையில் இது அன்பைத் தேடுகிறவர்களைப் பற்றிய கதை. இங்கு அன்புக்காக ஏங்கும் மக்கள் அதிகம். அது சிலருக்கு கிடைக்கிறது; பலருக்கு அது கிடைப்பதில்லை.

அன்பு தொலைந்தது எப்படி... உறவுகளுக்கு இடையே இடைவெளி வீழ்ந்தது எப்படி... என்பதைத்தான் படம் பேசுகிறது. இதில் குடும்ப உறவுகளையும், சமூகம் எப்படி மக்களை வழிநடத்துகிறது என்பதையும் அழுத்தமாகப் பேசியிருக்கிறேன்.

இயக்குநர் பாரதிராஜா எப்படி கதைக்குள் வந்தார்?

பாரதிராஜா அண்ணன் ஓய்வு பெற்ற நீதிபதி வேடத்துல வர்றார். அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கும்.
பாரதிராஜா அண்ணனுடன் வேலை செய்த அனுபவம் வாழ்க்கை முழுவதுக்குமானது. என்னைப் போன்ற படைப்பாளிகள் சினிமாவுக்கு வருவதற்கு அவரும், அவருடைய படைப்புகளும் முக்கிய காரணம்.

நான் பிரமித்த படைப்பாளியுடன் வேலை செய்ததை மறக்க முடியாது. அவர் என்னிடம் நடந்துகொண்டவிதம் அவரை கலைஞனாகப் பார்க்கத் தோன்றவில்லை. குடும்பத்தில் நமக்கு ஒரு மூத்த அண்ணன் இருந்தால் எப்படியிருக்குமோ அந்த உணர்வைத்தான் கொடுத்தார். அவரிடம் கோபம், அன்பு என எல்லா உணர்வுகளையும் ஒளித்து வைக்காமல் வெளிப்படையாகக் காண்பித்திருக்கிறேன்.

அவரும் என்னை ஒரு தம்பியாகப் பாவித்து நடந்துகொண்டார். ஒரு படைப்பை உருவாக்க இந்த புரிதலைத் தவிர வேறு என்ன தேவை இருக்கமுடியும்? 84 வயதுக்காரர். அமைதி காத்து, மிக அற்புதமான ஒத்துழைப்பு கொடுத்தார். சினிமாவில் அவர் தொடாத உயரம் இல்லை. அவர் பார்க்காத கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால், அவர் ஏற்றுள்ள ராமநாதன் வேடம்  காலங்கள் கடந்து வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

நீங்கள் தமிழ்ப்பற்றாளர். கெளதம் வாசுதேவ் மேனன் மலையாளம். இருவருடைய படைப்பு உலகமும் மாறுபட்ட நிலையில் எப்படி உருவானது இந்தக் கூட்டணி?
கெளதம் வாசுதேவ் மேனன் அம்மா தமிழர். நான் மொழியை வைத்து நடிகர்களைப் பிரித்துப்  பார்ப்பதில்லை. கெளதம் சிறந்த படைப்பாளி. புகழ் பெற்ற ‘சினிமா பாரடைசோ’ படத்தை இயக்கிய ஜிசிப்போ டோர்னாட்டோர் ‘ஃப்யூர் ஃபார்மாலிட்டி’ என்ற இத்தாலிய படத்தை இயக்கியிருந்தார். அதுல  புகழ் பெற்ற இயக்குநர் ரோமன் போலான்ஸ்கி  நடித்தார். அதே படத்தில் உலக மகா நடிகர் என்று பேர் வாங்கிய பிரெஞ்சு நடிகர் ஜெர்ராட் டிப்பார்டியோ நடித்தார்.

அது மாதிரி இதுல பல இயக்குநர்கள் நடிக்கிறார்கள். இயக்குநர்கள் ஒரு படைப்புக்கு மட்டுமே இயக்குநர்கள். மற்றபடி அவர்களும் கதாபாத்திரங்களாகத்தான் இருக்கிறார்கள். அண்ணன் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டதும் நடிக்கிறேன் தங்கர்னு வந்தார். இயக்குநர் உதயகுமாரும் அப்படித்தான் வந்தார். நடிப்பை தொழிலாகக் கொண்டவர்களைவிட இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு கலையின் அனைத்துக் கூறுகளும் அத்துப்படி என்பதால் அவர்கள் எப்போதும் நடிக்க முன்வருவார்கள். அவர்கள் இதில் இருப்பது இந்தப் படத்தின் பலம்.

எல்லோரும் இப்போதுதான் கெளதமை நடிகராகப் பார்க்கிறார்கள். ‘பள்ளிக்கூடம்’ படத்திலேயே அவர் நடிக்க ஒப்பந்தமானார். சில காரணங்களால் நடிக்கமுடியவில்லை.  மிஷ்கின் அப்படித்தான். நடிப்பதாகச் சொல்லி கடைசி நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனார். சேரன் நடிகராக முடியுமா என்ற கேள்விக்கு மத்தியில் சேரனை ‘சொல்ல மறந்த கதை’யில் நடிக்க வைத்தேன். 

ஒரு படைப்புக்கு நடிகர் என்ற பிம்பம் தேவையில்லை. கெளதம் நடித்த ஒருசில படங்களில் கண்களை உருட்டி வில்லன் பாத்திரங்களில் பேசுகிறதைப் பார்த்தேன். அந்தக் கதைக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். இந்தப் படம் பார்த்துவிட்டு வரும்போது உங்களை அழவைப்பது கெளதம் ஆக மட்டுமே  இருக்கும்.

அதிதி பாலனை தென் இந்தியாவின் நந்திதாதாஸ் என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே..?

கடைசி இருபது நிமிடம் திரையரங்கம் நிசப்தத்துல உறைந்து நிற்கும். திரையைவிட்டு கண் எங்கும் அசையாது. அதிதி, கெளதம் இருவரும் அந்த மாயத்தை செய்திருக்கிறார்கள். அதிதி சிறந்த நடிகை. தேர்ந்த இயக்குநர்கள் கையாளுவதற்கான சிறந்த தேர்வாக இருப்பார். முக்கியமான வேடத்தில் வரும் யோகிபாபு, டெல்லி கணேஷ், பிரமிட் நடராஜன், சாரல் ஆகியோரும் கவனிக்க வைப்பார்கள்.

இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

எல்லா இசையமைப்பாளர்களையும் கவனிக்கிறேன். சி.ஆர்.சுப்பராமன், எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன்ல ஆரம்பித்து இப்போதுள்ள ஐம்பது இசையமைப்பாளர்களின் பெயரை என்னால் சொல்ல முடியும். எனக்குத் தெரியாத பாடல்கள் இல்லை. 

எனக்கு இசை உருவாக்கம் தெரியாது. கேள்வி ஞானத்தால் இசையின் தரத்தை எடைபோடத் தெரியும்.மலர்களில் வாசமுள்ள, வாசமில்லாத மலர்கள் உண்டு. அது மாதிரி இசைத்துறையிலும் பலர் இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் தாழம்பூ மாதிரி இயல்பிலேயே வாசம் கொண்டவர். கதையை உள்வாங்கி சிச்சுவேஷனைத் தேடிப்பிடித்து பாடல்கள் கொடுப்பதில் கெட்டிக்காரர்.

இந்தப் படத்துல பாடலுக்கான சிச்சுவேஷன் மிகச் சிக்கலானது! ஆனால், அதற்கு மெட்டு அமைத்து பிரமாதமான இசையைக் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை அமைக்க இங்கு ஆட்கள் குறைவு. அதையும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் தம்பி பிரகாஷ்.வைரமுத்து இல்லாமல் உணர்வுபூர்வமான நல்ல சினிமாவை எடுக்க முடியாது. 

படத்தில் ஐந்து பாடல்கள். ஐம்பது ஆண்டு கால சினிமா பயணத்தில் அவர் எழுதாத பாடல்கள் இல்லை. இதில் கதையை உள்வாங்கி அவர் எழுதிய விதம் அவ்வளவு எளிதில்லை. வாழ்க்கை அனுபவம், இலக்கிய ஆளுமை உள்ள அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்.

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் திரைப்படக் கல்லூரி மாணவர். நீண்ட நாள் என்னுடன் பணியாற்ற விருப்பம் கொண்டிருந்தார். தேர்ந்த இயக்குநர்களுடன் வேலை செய்கிறவர். அதுதான் ஒளிப்பதிவாளருக்கு முக்கியம். கதையைக் கேட்டு புரிந்துகொள்ளக் கூடியவர். 

எடிட்டர் லெனின் அண்ணன் இல்லாமல் இந்தப் படத்தை என்னால் செய்திருக்க முடியாது. சில சமயம் ஒரு நிமிடம் காத்திருப்போம். அது அரை மணி நேரம் மாதிரி இருக்கும். அரை மணி நேரம் காத்திருக்கும்போது ஒரு நிமிடம் மாதிரி இருக்கும். அப்படி ஒரு நிமிடக் காட்சியை அரை மணி நேரம் நடந்திருப்பதுபோல் காட்டக்கூடியவர்தான் லெனின்.

உங்கள் மகன் விஜித் பச்சான் நடிக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ எந்தளவில் உள்ளது?

அப்போது என்னிடம் கற்றுக் கொள்பவராக இருந்தார். இப்போது அவர் பக்குவப்பட்ட நடிகராக மாறியுள்ளார். ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ வெளியிட்டு தேதி அறிவித்து, விளம்பரங்களும் செய்ய ஆரம்பித்தோம். அப்போது கொரோனாவால் தடைப்பட்டது. விரைவில் வெளிவரும்.விஜித் அடுத்து ஒரு படம் பண்ணியிருக்கிறார். அந்தப் படத்துக்காக  உடலை வருத்தி இரண்டு வருடமாக உழைத்து வருகிறார். அந்தப் படம் பல அதிர்வுகளை உண்டாக்கும். இரண்டுமே விரைவில் வெளியாகும்.

எஸ்.ராஜா