டார்க்நெட்



11. செய்யாத கொலைக்கு விலை ரூ.25 கோடி!

Operation Vegetable - ஆபரேஷன் காய்கறிகள் - இதுதான் கிறிஸ் மற்றும் அவரின் நண்பர் யூடி ஆகியோர் ‘பெசோ மாஃபியா’ வலைதளத்திற்கு எதிராக நடத்திய ஆபரேஷனின் பெயர்.

உண்மையில் ஹேக் செய்யப்பட்ட தகவல்களிலிருந்து அவர்களுக்கு பல உண்மைகள் புரிய வந்தது. முதலில் ‘பெசோ மாஃபியா’ யாரையுமே கொல்லவில்லை. 
ஆனால், கொன்றது போன்று நாடகமாடி இருக்கிறார்கள்.இந்தத் தொடரின் ஆரம்பப் பகுதியில் நாம் பார்த்தோமே... கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரைக் கொன்றது போன்று யூரா ஒரு நபருக்கு புகைப்படங்கள், செய்திக் கட்டுரை இணைப்பை அனுப்பி நிறைய பணம் வாங்கியதைப்பற்றி... அது நாடகம்.

உண்மையில் கலிபோர்னியா பகுதியில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவர் டார்க்நெட்டில் ‘பெசோ மாஃபியா’ வலைதளத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். தனக்கு பணம் வேண்டும். அதற்கு என்ன வேலை வேண்டுமானாலும் செய்வதாகக் கூறியிருந்தார்.  அவரைத்தான் யூரா பயன்படுத்திக் கொண்டார். கலிபோர்னியாவில் ஒரு ராணுவ வீரரைக் கொல்ல வேண்டும் என்று யாரோ கேட்க, அவரிடம் நிறைய பணம் வாங்கிக் கொண்ட யூரா, ஒரு செட்டப் நாடகத்தை நடத்தினார். உதவி கேட்டவரைத்தான் அந்த செட்டப்பை
செய்யச் சொன்னார்.

யாரோ ஒரு நடிகரைப் பிடித்து முகமெல்லாம் சிவப்பு சாயம் பூசி, கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் போல படம் எடுத்தார். டார்க்நெட்டில்  இன்னும் சிலரைப் பிடித்து ஒரு செட்டப் செய்தி வலைதளத்தை உருவாக்கி அதில் அந்த ராணுவ வீரர் இறந்துவிட்டதாக கட்டுரையையும் இவர்களே போட்டுவிட்டார்கள்.அந்த செட்டப் புகைப்படத்தையும், செய்திக் கட்டுரையையும் அனுப்பி  ஏமாற்றி விட்டார்கள். ‘பெசோ மாஃபியா’வில் நடந்ததாக சொல்லப்பட்ட ஓரிரு கொலைகளும் இப்படி செட்டப் செய்யப்பட்டவைதான்.

ஏன், நம் கிறிஸ்ஸுக்கு அனுப்பப்பட்ட கார் எரிக்கும் வீடியோ... அது கூட தகர டப்பா காரை சல்லிசாக வாங்கி வந்து எரித்த செட்டப் நாடகம்தான்.  ஆனால், இந்தக் கொலைப் பட்டியலை போலீசிடம் கொடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை உஷார்படுத்த நினைத்த போதுதான் கிறிஸ்ஸுக்கு அந்த அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்தது.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஆமி ஆல்வின் எனும் பெண்ணை மிகக் கொடூரமாகக் கொலை செய்ய வேண்டும் என யாரோ ஒரு நபர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அமெரிக்க எஃப்பிஐ ரகசியமாக ஆமி ஆல்வின் மற்றும் அவர் கணவர் ஆல்வினிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்து எச்சரித்தது.

இது நடந்த சில நாட்களில் ஆமி ஆல்வினின் கணவர் அவசர சேவையை அழைத்து ஆமி தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறினார்.  விசாரணை நடத்திய போலீஸ்காரர்கள், ஆமி தற்கொலை செய்துகொள்ளவில்லை... மாறாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தங்கள் விசாரணையைத் தொடர்ந்தார்கள்.  சில நாட்களில் ஆமியின் கணவர்தான் அந்தக் கொலையைச் செய்தார் என கண்டுபிடித்து விட்டார்கள். ஆல்வினை கைது செய்தார்கள்.

ஆமி கொலை செய்யப்பட்ட தகவல் கிறிஸ்ஸுக்கு கிடைத்தது. யூடியும் கிறிஸ் ஸும் உறைந்து போய்விட்டார்கள். தாங்கள் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தும் ஒரு நபர் இறந்துவிட்டார்... அப்படி என்றால் அவரைக் கொல்லச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியது யார்? அதுவும் அவர் கணவர் ஆல்வின்தான். அவர் கணவரின் திட்டம் எளிமையானது. ஆமி யாருடனோ கள்ளத்தொடர்பில் இருப்பதாக அவர்  சந்தேகப்பட்டார். அதனால் ஆமியைக் கொலை செய்ய முடிவு எடுத்தார். ஆமி ஒருவேளை விபத்தில் இறந்தால் அவருக்கு எழுபதாயிரம் டாலர் வரை இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்.  

அதனால்தான் ‘பெசோ மாஃபியா’ வலைதளத்தை தொடர்பு  கொண்டு, ஆமியை விபத்தின் மூலம் கொல்ல கேட்டுக்கொண்டார்.  இவரிடம் இருந்து நிறைய பணம் கேட்ட யூராவிற்கு இவர் பணம் கொடுத்துக் கொண்டே இருந்தார். எப்படியும் இன்சூரன்ஸ் பணத்தில் இதையெல்லாம் சரிக் கட்டி விடலாம் என நினைத்திருக்கிறார். 

ஆனால், இறுதியில் ஜெயில்தான் கிடைத்தது.இன்னொரு பக்கம் ‘பெசோ மாஃபியா’ வலைதளத்தை தற்காலிகமாக மூடிவிட்டு யூரா தப்பித்து விட்டார். டார்க்நெட்டில் மிக ரகசியமாக இயங்கியதால் யூராவை போலீசாரால் நெருங்க முடியவில்லை. கொலை செய்வதாக நாடகம் நடத்தி உலகம் முழுவதிலிருந்தும் பலரிடம் இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடி ரூபாய் வரை சம்பாதித்து விட்டார் யூரா.

எல்லாம் கிரிப்டோகரன்ஸி வேறு.  சில நாட்கள் கழித்து டார்க்நெட்டில் இயங்கும் எஃப்பிஐ போலீசார் ஒரு தகவலை கிறிஸ் ஸிடம் கூறினார்கள். அதாவது யூரா எங்கும் செல்லவில்லை. டார்க்நெட்டில் ருசி கண்ட அவர் ‘பெசோமாஃபியா’ வலைதளத்தைப் போலேவே வெவ்வேறு பெயர்களில் வலைதளங்களை உருவாக்குவதும், அந்த வலைதளங்களை போலீசார் முடக்கினால் மற்றொரு வலைதளத்தை உருவாக்குவதுமாக இன்னும் ‘செட்டப் கொலை’ மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்... இதுதான் எஃப்பிஐ சொன்ன தகவல்.

ஒரு நாள் மாலை கிறிஸ் வழக்கமாக தன் பணிகளை செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் பசியாக இருந்ததால் சூப் வைத்து குடித்துக்கொண்டு  புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.  
வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. யாரோ கதவைத் தட்டினார்கள். எழுந்து கதவைத் திறந்தால், போலீஸ்.  கிறிஸ்ஸை சுவரில் அழுத்தி பின் கையில் விலங்கு மாட்டி கைது செய்து விட்டார்கள். குற்றம்: டார்க்நெட்டில் ‘பெசோ மாஃபியா’ எனும் வலைதளத்தை நடத்தி மோசடி செய்தது.

கிறிஸ்ஸுக்கு ஒன்றுமே புரியவில்லை. போலீசாரிடம் விளக்கியும் பயனில்லை. இங்கிலாந்தின் ரகசிய புலனாய்வுத் துறையுடனும், அமெரிக்காவின் எஃப்பிஐ உடனும் கிறிஸ் வேலை செய்திருந்தார். குறிப்பாக இந்த ‘பெசோமாஃபியா’ வலைதளத்தை அவர்களிடம் அம்பலப்படுத்தியிருந்தார். அதைச் சொன்னாலும் போலீசார் கேட்பதாக இல்லை. கிறிஸ், தான் பணிபுரிந்த புலனாய்வு அதிகாரிகளின் பெயர்களை மறந்துவிட்டார். அதனால் அவரால் குறிப்பிட்ட பெயர்களைச் சொல்ல முடியவில்லை.

போலீசார் கிறிஸ்ஸை நம்ப மறுத்தனர். உலகின் மறுபக்கம் கிறிஸ்ஸின் கைதை செய்தியில் படித்து யூரா சிரித்துக்கொண்டிருந்தார். இதுவும் யூராவின் லீலைதான்.தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கிறிஸ்ஸுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழம்பிப்போயிருந்தார். அவருக்கு அப்போதிருந்த ஒரே குறிக்கோள்... இந்த போலீசாரிடமிருந்து நாம் தப்பிக்க வேண்டும். எப்படி..?

(தொடரும்)

வினோத் ஆறுமுகம்