2024ம் ஆண்டு... 50 நாடுகளில் தேர்தல்... ஜனநாயகத்துக்கு ஆப்பு அடிக்க காத்திருக்கும் Ai



அடுத்த ஆண்டு பிறக்க இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் 2024ம் ஆண்டை ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என கணித்துள்ளனர் அரசியல் நோக்கர்கள்.
குறிப்பாக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலம் என்கின்றனர். இதற்குக் காரணம், சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் மாநில மற்றும் தேசிய தேர்தல்கள் நடக்க இருப்பதுதான்.
இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, எகிப்து, வெனிசூலா, உருகுவே, இலங்கை, தைவான், இந்தோனேஷியா, பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் அடங்கும்.

இதனால், உலகளவில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் என்கின்றனர்.இதுமட்டுமல்ல. சுமார் 200 கோடி மக்களுக்கும் மேல் நேரடியாக இந்தத் தேர்தலினால் பாதிக்கப்
படுவார்கள் என்றும் கூறுகின்றனர். ஏனெனில், சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல்போய் அது மிகப்பெரிய ஆபத்துகளைக் கொண்டுவரும் என எச்சரிக்கின்றனர்.
இதற்குக் காரணம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் வரவுதான்.

இந்தத் தொழில்நுட்பம் வாக்காளர்களை ஏமாற்றி தேர்தலை திசை திருப்பிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர். அந்தளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் வழியே தத்ரூபமாக போலி படங்களையும், வீடியோக்களையும் ஆடியோக்களையும் உருவாக்குவதன் மூலம் அது தேர்தல் முடிவுகளை மாற்றலாம் என அச்சப்படுகின்றனர். இப்போது அதிநவீன ஜெனரேட்டிவ் AI கருவிகளால், க்ளோன் செய்யப்பட்ட மனித குரல்கள், ஹைப்பர் - ரியலிஸ்டிக் படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை சில நொடிகளிலேயே அதுவும் குறைந்த செலவில் உருவாக்க முடியும்.

இப்படி AIயை பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிகளை deep fake என்கின்றனர். இந்தப் போலியான மற்றும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் வேகமாக குறிப்பிட்ட பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு பரவி வாக்காளர்களைத் தவறாக வழிநடத்திவிடும். இதனால், தேர்தல் குறித்தான மதிப்பீடும் போய்விடலாம். இப்போது உலகம் முழுவதுமே இதுகுறித்தான கவலையில்தான் ஆழ்ந்துள்ளது.  எப்படி AI தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அதாவது, தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட நடிகர் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்பதாக AIயில் deep fake செய்யப்பட்டால், அவரின் ரசிகர்கள் அந்த வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், வாக்குகள் சிதறலாம். நல்ல வேட்பாளரைஅடையாளம் காணமுடியாமல் போகலாம். இதேபோல பல்வேறு துறைகளில் மக்களிடம் செல்வாக்குள்ள பிரபலங்களின் AI போலிகளால் ஓட்டுகள் பிரியலாம்.

இதுமட்டுமல்ல; கடந்த மே மாதம் அமெரிக்காவின் பென்டகனில் குண்டுவெடிப்பு நடந்ததுபோல AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியதுடன் அமெரிக்க பங்குச் சந்தையின் விற்பனையையும் சரிய வைத்தது. AI மூலம் உருவாக்கப்படும் போலி படங்கள், வீடியோக்கள் எப்படி தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ‘கார்டியன்’ பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில், 2022ம் ஆண்டு நடந்த கென்யா தேர்தலில் எப்படி டுவிட்டர் தவறவான தகவலைத் தந்தது என்பதைக் கூறியுள்ளது. இதுமட்டுமல்ல; அங்கே தேர்தலுக்கு முன்னதாக டிக் டாக் எப்படி வெறுக்கத்தக்க மற்றும் எரிச்சலூட்டும் பிரச்சார வீடியோக்களைத் தந்தன என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

கென்யாவிலும், உகாண்டாவிலும் சிறுபான்மையினர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான வெறுப்பு நிறைந்த பரப்புரைகளின் உருவாக்கத்தில் டிக்டாக்கும், டுவிட்டரும் எப்படி பங்காற்றின என்பது பற்றியும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் AI எவ்வளவு ஆபத்தானதாக இருக்கும் என்பதைக் கோடிட்டு காட்டுகிறது.

முன்னாள் கூகுள் சிஇஓவான எரிக் ஷ்மிட் ஒரு பேட்டியில், ‘‘பேச்சு சுதந்திரம் மனிதர்களுக்கானது; கணினிகளுக்கானதல்ல...’’ என AIயின் தாக்கம் பற்றி எச்சரித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல; இதை உருவாக்கியவர்களில் ஒருவரான OpenAI நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் கூட, AI தேர்தல்களை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அதற்கு ஒரு ஒழுங்குமுறை தேவைதான் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இந்த deep fakes குறித்தும், 2024ல் இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தலில் இதனை பயன்படுத்துவது குறித்தும் ராஜ்ய சபாவில் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி ஜவகர் சிர்கார் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன் நிற்காமல், இத்தகைய தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்றும், போலியாக ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கவோ, தண்டிக்கவோ அரசு 2024 தேர்தலுக்குமுன் போதுமான நடவடிக்கைகளை எடுக்குமா என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.  ஒருவேளை AI தொழில்நுட்ப சவாலை திறம்பட எதிர்கொள்ள இந்தியா தவறினால், அது ஜனநாயகத்திற்கே ஆபத்தானதாக முடியும் என எச்சரிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பேராச்சி கண்ணன்