அல்சர் தெரியும்... பெருங்குடல் புற்றுநோய் தெரியுமா..?



உலகை ஆட்டிப் படைக்கும் இந்தப் பெருங்குடல் புற்றுநோய் இப்பொழுது இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது...

இன்றைய நவீன வாழ்க்கைமுறையால் குடல் சம்பந்தப்பட்ட பல நோய்கள் வருகின்றன. இதில் எல்லோருக்கும் அல்சர் எனப்படும் குடல்புண் பற்றி மட்டுமே பொதுவாகத் தெரியும். இவை உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலில் ஏற்படும் புண்கள். ஆனால், பெருங்குடல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. 
குறிப்பாக இன்று பெருங்குடல் புற்றுநோய் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளிலேயே அதிகளவில் வந்த இந்தப் பெருங்குடல் புற்றுநோய் இன்று இந்தியாவில் அதிகரித்து வருவதாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள். இதனாேலயே உலக இரைப்பை குடலியல் அமைப்பு 2022 - 23ம் ஆண்டினை பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு ஆண்டாக அறிவித்தது.

 தமிழ்நாட்டில் இந்த விழிப்புணர்வை உலக இரைப்பை குடலியல் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு இரைப்பை குடலியல் நிபுணர் அறக்கட்டளையும், அப்பல்லோ மருத்துவமனையும் மேற்கொண்டன. இந்நிலையில் பெருங்குடல் புற்றுநோய் ஏன் அதிகரிக்கிறது... அதன் அறிகுறிகள் என்ன... என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் தமிழ்நாடு இரைப்பை குடலியல் நிபுணர் அமைப்பின் தலைவரும், அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை குடலியல் நிபுணருமான டாக்டர் கே.ஆர்.பழனிசாமியிடம் பேசினோம்.

அதிகரிக்கக் காரணம்...

முன்னாடி நம்ம ஊர்கள்ல பெருங்குடல் புற்றுநோய் அதிகம் கிடையாது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலேயே அதிகம் இருக்கும்.
காரணம், வெளிநாடுகளில் அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவாங்க. அதனால், கழிவுகள் சரியாகப் போகாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தும். அவங்க இரண்டு நாட்களுக்கு ஒரு
முறைதான் மலம் கழிப்பாங்க. இதனால, அவங்களுக்கு பெருங்குடல் சம்பந்தமான பிரச்னைகள் அதிகம் வரும்.

பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் அங்கே அதிகம். ஆனா, நம்ம ஊரில் அந்தமாதிரி கிடையாது. சத்தான காய்கறிகள் சாப்பிடுவோம். நிறைய தண்ணீர் குடிப்போம். ரொம்ப ஆக்டிவ்வாக இருப்போம். அதனால், பெருங்குடல் சம்பந்தமான நோய்கள் அவ்வளவாக இருக்கல. ஆனா, இப்போ அதிகமாகியிருக்கு.

இதுக்குக் காரணம், நாமும் மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றத் தொடங்கியிருப்பதுதான். அவங்களைப் போல நாமும் அதிகளவில் அசைவ உணவுகள் எடுத்துக்கிறோம். தண்ணீரும் சரியாகக் குடிக்கிறதில்ல. நம் உடல் செயல்பாடுகளும் குறைஞ்சு போச்சு. அதனால், நாமும் மலச்சிக்கல், மலக்குடல் பிரச்னைக்கு ஆளாகியிருக்கோம். தினமும் மலம் போகாமல் உள்ளேயே தங்கும்போது மலக்குடல் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகுது.

இப்போ இன்னொரு முக்கிய பிரச்னையை நாங்க பார்க்கிறோம். அதாவது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் காலையில் மலம் கழிக்க வைக்காமல் அவசர அவசரமாகப் பள்ளிக்கு அனுப்புறாங்க. அந்தக் காலத்துல குழந்தைகள் எழுந்ததும் உடனே வெளியே கொண்டுபோய் விடுவாங்க. காலைக் கடனை கட்டாயம் முடிக்கணும்னு செய்தாங்க. தினசரி வாழ்ககையில் குழந்தைகளுக்கு இதைப் பழக்கத்தில் கொண்டு வந்தாங்க.

ஆனா, இப்ப அவசர அவசரமாக சட்டையை மாட்டி பள்ளிக்கு அனுப்புவதிலேயே பெற்றோர் குறியாக இருக்காங்க. அதனால, காலையில் மலம் கழிப்பதையே குழந்தைகள் மறந்துடுறாங்க. மலம் சேர்ந்து ஒரு உணர்வு வந்தால்தான் மலம்கழிக்கணும்னு நினைக்கிறாங்க. இது நாளடைவில் மலச்சிக்கலை கொண்டு வந்துடுது.

சின்ன வயதிலேயே மலம் கழிக்கணும் என்கிற பயிற்சி இல்லாததும், மேற்கத்திய வாழ்க்கை முறையாக மாறிப்போனதும், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்னு நிறைய சாப்பிடுறதும், போதுமான உடற்பயிற்சி இல்லாததும், தண்ணீர் சரியாகக் குடிக்காததும் நாளடைவில் பெருங்குடல் பிரச்னைகளைக் கொண்டு வந்துவிடும்.மலக்குடலில் புண்கள் வரலாம். அல்லது வீக் ஸ்பாட் டைவர்டிகுலம் என்று சொல்வோம், அது வரலாம். பிந்நாளில் பெருங்குடலில் புற்றுநோயும் வரலாம்.

அறிகுறிகள்...

 சாதாரணமாக போகும் மலத்தில் திடீரென மாற்றம் வந்தால் உடனே நாம் மருத்துவரை அணுகணும். நாங்க இதை change in bowel habits - அதாவது குடல் இயக்கத்தில் மாற்றம்னு சொல்வோம். திடீரென மலம் தண்ணீராகப் போகும். அல்லது மலச்சிக்கல் ஏற்படும். இந்த அறிகுறி தெரிஞ்சால் உடனே நாம் கவனிக்கணும். 

இதைப் பற்றிப் பேச வெட்கப்படக்கூடாது. அடுத்ததாக மலத்தில் ரத்தம் போகும். நிறைய பேர் மலத்தில் ரத்தம் வருவதைக் கண்டு மூலநோய்னு நினைச்சிடுவாங்க. சில மருத்துவர்கள் கூட மூலநோய் காரணமாக இருக்கும்னு நினைத்து ஆயின்ட்மென்ட் கொடுத்து அனுப்பிடுவாங்க. ஆனா, புற்றுநோயினாலும் மலத்தில் ரத்தம் வரும்.

அதனால, நாம் மூலநோய்னு நினைத்து அப்படியே விட்டால் அது பரவிடும். கட்டி வெளியே பரவிடுச்சுனா சிகிச்சை அளிக்கிறதும், குணப்படுத்துறதும் சிரமம். குடலைவிட்டு வெளியே பரவிட்டால் கீமோதெரபி எல்லாம் தரவேண்டியது வரும். அந்த நிலைக்குப் போகாதபடி பார்த்துக்கணும். பொதுவாக மலத்தில் ரத்தம் என்பது குடலில் புண்கள் இருந்தால் வரலாம். கட்டி இருந்தாலும் வரலாம். அதனால, இந்த அறிகுறி தெரிஞ்சால் தவிர்க்காமல் உடனடியாக மருத்துவரை அணுகணும்.

குணப்படுத்தலாம்...  

அந்தக் காலத்தில் கேன்சர் வந்தால் வாழ்க்கை அவ்வளவுதான்னு நினைச்சாங்க. இன்னைக்கு அப்படியில்லை. நிறைய புற்றுநோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும். அதனால், பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கலாம். குணப்படுத்தலாம். இதுபற்றி இங்க விழிப்புணர்வு இல்லை. அவ்வளவுதான்.அமெரிக்காவில் 50 வயதுக்கு மேல் கொலோனோஸ்கோப்பி என்கிற மலக்குடல் உள்நோக்கிய பரிசோதனையை கட்டாயமாக செய்யணும். காரணம், அங்கே பெருங்குடல் புற்றுநோய் அதிகம்.

அதை ஸ்கிரீனிங் கொலோனோஸ்கோப்பினு சொல்வாங்க. இந்த ஸ்கிரீனிங் பண்ணும்போது சின்ன கட்டிகள் தெரிந்தால் அதனை கொலோனோஸ்கோப்பி வழியாகவே எடுத்திடலாம். இந்தச் சிறுகட்டிகள் பல ஆண்டுகள் கழித்து புற்றுநோயாக மாறும் வாய்ப்பு இருக்கு. அதனால, இந்தச் சிறுகட்டிகளை எடுத்து புற்றுநோயைத் தடுக்கலாம். 

அதேபோல, ஸ்கிரீனிங் கொலோனோஸ்கோப்பி பண்ணும்போது புற்றுநோய் இருந்து, அதைத் தொடக்க நிலையிலேயே வெளியே பரவாத நிலையில் கண்டறிந்துவிட்டால் ஆபரேசன் செய்து குணப்படுத்திடலாம். நம் ஊரில் இந்த ஸ்கிரீனிங் கொலோனோஸ்கோப்பி என்கிற கான்செப்ட்டே இல்ல.

ஒவ்வொரு ஆண்டும் மே 29ம் தேதியை உலக செரிமான நல தினமாக உலக இரைப்பை குடலியல் அமைப்பு கடைப்பிடிக்கிறாங்க. அப்போ, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முன்வைப்பாங்க. கடந்த 2022 - 23 ஆண்டினை பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு ஆண்டாக அறிவிச்சாங்க. காரணம், பெருங்குடல் புற்றுநோய் பற்றி நிறைய விழிப்புணர்வு
வரணும்னுதான்.

இதையொட்டி நாங்களும் கடந்த மே 29ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து பெருங்குடல் புற்றுநோய் சம்பந்தமான கையேடு ஒன்றை வெளியிட்டோம். இதுதவிர, எங்க அறக்கட்டளையின் வழியாக இலவச முகாம்கள் நடத்துறோம். நிறைய விழிப்புணர்வு வரணும்னு இப்படியான முகாம்களை முன்னெடுக்கிறோம்.

வராமல் தடுக்க...

இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். முன்னாடி வயதானால்தான் புற்றுநோய் வரும்னு நினைச்சோம். இப்போ, அப்படியில்ல. இளம் வயதில்கூட வருது. அதனாேலயே அமெரிக்காவில் இப்போ ஸ்கிரீனிங் கொலோனோஸ்கோப்பி பண்ணுகிறவர்களின் வயதை 50ல் இருந்து 45 ஆக குறைச்சிருக்காங்க. ஆனா, இங்க தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இந்நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவுதான்.  

இதை வராமல் தடுக்க வாழ்க்கை முறை ரொம்ப முக்கியம். உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கணும். நிறைய தண்ணீர் குடிக்கணும். இதனால, மலச்சிக்கல் வராது தடுக்கலாம். பிறகு, தினமும் உடற்பயிற்சி செய்யணும். உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கணும். உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். அடுத்து, நன்றாக தூங்கணும். மது, புகைபிடிக்கும் பழக்கம் அறவே கூடாது.

அப்புறம், ஸ்கிரீனிங் கொலோனோஸ்கோப்பி கான்செப்ட்டை எல்லோருக்கும் புரிய வைக்கணும். குறைஞ்சது ஹெல்த் ஸ்கிரீனிங் புரோகிராம்ஸ், வரும்முன் தடுக்கும் உடல் பரிசோதனைகள் உள்ளிட்டவற்றிலாவது விழிப்புணர்வு தரணும். இதுல மோஷன் டெஸ்ட்னு இருக்கு. அதாவது மலத்தை எடுத்து பரிசோதனை செய்வோம். பொதுவாக, ஏதாவது கிருமி இருக்கிறதானு பரிசோதிப்போம். ஆனா, மலத்துல ரத்தம் கண்ணுக்குத் தெரிந்து வரலாம். கண்ணுக்குத் தெரியாமலும் வரலாம்.

இப்படி கண்ணுக்குத் தெரியாமல் வருவதை ஆங்கிலத்தில் occult blood in stoolனு சொல்வோம். இதுக்கு தனியாக ஒரு பரிசோதனை இருக்கு. இதைப் பண்ணிப் பார்த்து, அதில் பாசிட்டிவ்னு வந்தால் நிச்சயம் கொலோனோஸ்கோப்பி செய்து பார்க்கணும்.  சமீபத்தில் என்னிடம் ஒரு நோயாளி வந்தார். அவரின் மகனுக்கு 45 வயது. சிங்கப்பூரில் இருக்கார். 

அவர் வழக்கம்போல் உடல் பரிசோதனைக்குச் சென்றிருக்கார். அங்கே occult blood டெஸ்ட்டில் பாசிட்டிவ்னு வந்திருக்கு. கொலோனோஸ்கோப்பி பண்ணிப் பார்த்தால் பெருங்குடல் புற்றுநோய் இருந்தது. அதனால, வரும்முன் தடுக்கும் உடற்பரிசோதனையில் occult blood டெஸ்ட்டை கட்டாயமாக்கணும். இதன்வழியாக பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கலாம்.          

பேராச்சி கண்ணன்