மணமகள் சினிமா...மணமகன் அரசியல்!



பிரபல இந்தி நடிகையான பரினீதி சோப்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ராவின் உறவினர்.
இதுவரை தமிழில் நடித்ததில்லை. ஆனால், கோலிவுட்டில் நடிக்க பலமுறை அவரைத் தேடி வாய்ப்புகள் சென்றிருக்கின்றன. பரினீதியும் ஆர்வம் காண்பித்து சம்மதம் தெரிவித்திருக்கிறார்.என்றாலும் வெவ்வேறு காரணங்களால் அது கைகூடாமல் போயிருக்கிறது.

இந்தத் தகவல் எல்லாம் இப்பொழுது எதற்கு என்கிறீர்களா..?

காரணமாகத்தான். நடிகையான இவர் பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினரைக் காதலித்து வந்தார் என்பதுதான் நேற்று வரையிலான பரபரப்பு தகவல்.அந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். பெயர் ராகவ் சத்தா. இருவரும் பல விழாக்களுக்கு புன்னகை ததும்பும் முகத்துடன் இணைந்தே சென்றார்கள். எனவே கிசுகிசுவும் அணையாமல் புகைந்தபடியும் எரிந்தபடியுமே இருந்தது.

ஆனால், இதுகுறித்து இருவரிடமும் செய்தியாளர்கள் கேட்டபோது இருவருமே பேச்சை மாற்றினார்களே தவிர மறுக்கவுமில்லை; ஆமோதிக்கவுமில்லை. இந்தச் சூழலில்தான் சென்ற வாரம் இருவருமே இணைந்து இந்தியாவை பரபரப்பாக்கி இருக்கிறார்கள்.யெஸ். இவர்களது நிச்சயதார்த்தம் சென்ற வாரம் நடந்து முடிந்துள்ளது. பரினீதி சோப்ராவுக்கு நடிப்பதில் விருப்பமில்லை. அவரது கனவே முதலீட்டு வங்கியில் பணிபுரிய வேண்டும் என்பதுதான். இதற்காகவே, லண்டன் சென்று படித்துவிட்டுத் திரும்பினார்.

ஆனால், அவர் படித்துவிட்டு இந்தியா திரும்பிய போது சூழல் சரியாக இல்லை. இந்திய வங்கிகள் அனைத்தும் பொருளாதாரத் தேக்கத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. இதனால் முதலீட்டு வங்கிகள் நடத்த இந்தியா தடுமாறத் தொடங்கியிருந்தது. வேலையில் இருந்த பலரும் தங்களுக்கு வேலை இருக்குமா என்ற தவிப்பில் இருந்தனர்.

இதையெல்லாம் பார்த்த பரினீதி, பாலிவுட்டின் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பொதுத் தொடர்பு ஆலோசகராக இணைந்தார்.
அவர் பணிபுரிய ஆரம்பித்த நேரம் ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், எந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பொதுத் தொடர்பு ஆலோசகராக சேர்ந்தாரோ அதே யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்தான் பரினீதியையும் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது!போதாதா... நடிப்பதில் விருப்பமே இல்லாமல் இருந்தவர், ‘லேடீஸ் vs ரிக்கி பாஹ்ல்’ என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவின் நாயகியாக அறிமுகமானார்.

முதல் படமே ஹிட். தொடர்ந்து ‘இஷ்க்ஸாதே’, ‘ஹஸி டோ ஃபஸி’, ‘தாவத்-இ-இஷ்க்’, ‘கில் தில்’... உள்ளிட்ட பல படங்களில்அடுத்தடுத்து பரினீதி ஹீரோயின் ஆக நடிக்கத் தொடங்கினார்.
இப்போது ‘த கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ’, ‘சம்கிலா’ உள்ளிட்ட அவர் படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன.

இந்நிலையில்தான் பரினீதியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண நிச்சயதார்த்தம், தில்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே, தில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முத்து நிற வெண்மை உடையில் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. மேலும் நிச்சயதார்த்தத்தில் மணமக்கள்-குறிப்பாக பரினீதி பேசிய வீடியோவும், அதற்கு அவரது சோப்ரா குடும்பத்தார் ஆர்ப்பரிக்கும் வீடியோவும் டிரெண்டிங்கில் உள்ளன. ‘எங்கே போனாலும் நீங்க எப்ப கல்யாணம் பண்றீங்க... ஒரு பையனைக் கண்டுபிடிங்க... இப்படி பல வருஷங்களா என்னிடம் சொன்னாங்க...’ என்ற பரினீதி, ராகவை சுட்டிக் காட்டி, ‘இதோ இப்ப நல்லா இருக்கேனா...’ என அவர் கேட்கும் வீடியோ ஹாட் டிரெண்டாகி வருகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையிலும் இருவரின் திருமணம் எப்போது என்பது குறித்து ரகசியம் காத்து வருகிறார்கள் சோப்ரா குடும்பத்தார். பாலிவுட்டும் அரசியலும் இணையும் திருமணம் இது என்பதால் கல்யாணத்துக்கு இந்திய சினிமா, அரசியல் பிரமுகர்கள் பலரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாலினி நியூட்டன்