ஏன் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்கிறது..?



பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை அனுசரித்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய வற்றின் விலை நிர்ணயமாகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை தினசரியும்; சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோல் விலை 86.51 ரூபாயாக இருந்தது. இக்கட்டுரை எழுதப்படும் இந்த நேரத்தில் 100.49 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் இவ்வருடத் தொடக்கத்தில் 79.21 ரூபாயாக இருந்தது. இது தற்போது ரூ. 95.93 என்பதாக உயர்ந்துள்ளது.

மாதந்தோறும் நிர்ணயிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்தது. அடுத்த மாதமே ரூ. 710 என்பதாக அதிரடியாக உயர்ந்தது. பிறகு மீண்டும் இவ்வருட பிப்ரவரியில் 785 ரூபாய்க்கு எகிறியது.
மார்ச் மாதம் மேலும் ஐம்பது ரூபாய் உயர்ந்து 835 ரூபாய்க்குப் போனது. ஜூலையில் ரூ. 850.50 என்பதாக உயர்ந்தது. ஆகஸ்ட்டில் ரூ. 875.50 என்பதாக உயர்ந்த இது, கடந்த மாதம் மேலும் இருபத்தைந்து ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 900.50 என்பதாக ஆனது. தற்போது அக்டோபர் மாதம் மேலும் பதினைந்து ரூபாய் இதுவரை உயர்ந்துள்ளது. இனியும் என்னாகுமோ என்று திருவாளர் பொதுஜனம் கதிகலங்கி நிற்கிறார்.

தமிழக அரசு சமீபத்தில் மக்களின் சுமையைக் கருதி பெட்ரோல் மீது மூன்று ரூபாய் வரியைக் குறைத்தது. ஆனால், அது யானைப் பசிக்கு சோளப் பொரி போல் ஆகிவிட்டது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தால் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு அவல சாதனை படைத்திருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு மட்டும் - அதாவது ஒரு வருடத்தில் மட்டும் பதினைந்து ரூபாய் வரை பெட்ரோல் விலை உயர்ந்தது. இந்த ஆண்டு இதற்குள்ளாகவே பதினைந்து ரூபாய் கூடிவிட்டது. மொத்தமாக ஏற்றினால் மக்கள் கொதிப்படைவார்கள் என தினமும் கால் பைசா, அரை பைசா என ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வென்பது ஒரு காரணம் மட்டுமே. நமது அரசுகள் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கும் கட்டுப்படியாகாத பெரும் வரியை ஏன் குறைக்கக் கூடாது அல்லது தள்ளுபடி செய்யக் கூடாது என்பதே மக்களின் கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தங்கள் விற்பனை விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற உரிமையை இந்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது. ஆனால், இந்த பெட்ரோல் மீதான வரியை அரசுக்கு மக்கள் செலுத்தியே ஆக வேண்டியதாக உள்ளது. இந்த சுமையை மக்களால் தாங்கவே இயலவில்லை என்பதே உண்மை.

கடந்த 2020ம் வருடம் கொரோனாவால் பெட்ரோல் விலை கடுமையான வீழ்ச்சியடைந்தது. உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்ததால் பெட்ரோல் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இந்த சரிவு நிகழ்ந்தது. கடந்த 2020 ஏப்ரலில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 19 டாலர் வரை குறைந்திருந்தது. இந்தியாவில் சராசரியாக ஆறு ரூபாய் வரை இந்திய சில்லறை வர்த்தகத்தில் குறைந்தது. அப்போது மத்திய அரசு தனக்குச் சேர வேண்டிய பெட்ரோல் மீதான சுங்கவரியை மார்ச் மற்றும் மே என இரண்டு தவணைகளாகக் கட்டலாம் என்றும் சொன்னது.

உதாரணமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். 2020ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியன்று தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 89.29 ரூபாயாக இருந்தது. இதில் 53.51 ரூபாய் வாட் வரியாக மட்டுமே அரசுகளின் பாக்கெட்டுக்குச் செல்கிறது என்கிறது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளம்.இதன் பொருள், தினசரி நாம் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கும் தொகையில் அறுபது சதவீதத்தை அரசுகளே அபகரித்துக்கொள்கின்றன என்பதேயாகும்.  

டீசலும் அப்படி ஒன்றும் இதற்கு சளைத்ததல்ல. கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து சதவீதத் தொகை டீசலுக்கு அல்ல; அதற்கான வரியாக அரசுக்குத்தான் செல்கிறது.பெட்ரோல் விலை ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது என்பது அடிக்கடி எல்லோரும் கேட்கும் கேள்வி. இதற்கான பதில் எளிது.

மாநில அரசுகளின் வரிவிதிப்பு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொன்றாக இருப்பதால்தான் பெட்ரோல் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுகிறது. உதாரணமாக, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 89 ரூபாயாக இருந்தபோது, ஒருசில மாநிலங்களில் இது நூறு ரூபாயைத் தொட்டுவிட்டது. மத்தியப்பிரதேசமும் ராஜஸ்தானும் இப்படி பெட்ரோலுக்கு அதிக  வரி விதிக்கும் மாநிலங்களில் குறிப்பிடத்தக்கவை.

பெட்ரோலுக்கு இப்படி அதிக வரி விதிப்பதன் மூலம் மக்கள் தலையில்தானே அதன் பாரம் ஏறுகிறது என்கிற கேள்விக்கு, பெட்ரோல் வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு இந்தியாவுக்கான அடிப்படைக் கட்டுமானங்களை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது... எனவே, பெட்ரோல் மீதான வரி விதிப்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர் ஆளும் தரப்பினர்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்கூட இதையே வலியுறுத்துகிறார். சில வலது பொருளாதார அறிவுஜீவிகள், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிவிதிப்பை சாதகமான அம்சமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பெட்ரோல் விலை உயர்வு மத்திய தர வர்க்கத்தினரின் பாக்கெட்டைக் கடித்தாலும் அது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காது என்கிறார்கள். ஆனால், அது எவ்வளவு பொய்யான வாதம் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துவிடும்.

பெட்ரோலியப் பொருட்கள் என்பவை ஒரு நாட்டின் போக்கு வரத்து எனும் ரத்த நாளங்களோடு நேரடித் தொடர்பில் இருப்பவை. பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, போக்கு
வரத்துச் செலவுகள் உயர்வதால் விவசாயத்துக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் முதலான விவசாயப் பொருட்களின் அடக்க விலை உயர்கிறது.

நாட்டின் பெரும்பகுதி மக்களை விவசாயம் சார்ந்த தொழில்களில் வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு இது எப்படி நன்மை பயப்பதாக இருக்க முடியும்? மேலும், காய்கறிகள் சந்தைகளுக்கு வந்து சேர்வதற்கான வண்டிச்சத்தமும் அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வை நகரங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரும்தான் சுமக்க வேண்டி இருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏன் ஜி.எஸ்.டி இல்லை என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே கொள்கை என்பதை ஒரு மந்திரம் போல் உச்சரித்துக்கொண்டிருக்கும் மோடி அரசு ஏன் ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு வருவதில்லை? ஏன் அவற்றுக்கு மட்டும் இன்னமும் பழைய முறைப்படி இறக்குமதி வரி, சுங்கவரி, விற்பனை வரி, சேவைவரி எனத் தனித்தனியாக வரிகள்? இவை அனைத்தையும் மக்கள்தானே சுமக்கிறார்கள்?

பதில் மிகவும் எளிது. பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்தால், வரி விகிதம் குறைந்துவிடும். இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படும். இந்த அச்சத்தில்தான் அதனை மட்டும் இன்னமும் பழைய மாடலிலேயே விட்டு வைத்திருக்கிறார்கள்.நம் நாட்டைவிடவும் மிக ஏழ்மையான நாடுகளில்கூட பெட்ரோலியப் பொருட்களின் விலை நம் நாட்டின் அளவுக்கு கடுமையாக இல்லை. ஆனால், இங்கு மட்டும் வளர்ச்சியின் பெயரால் நம்மிடம் வரிச் சுமையை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

கொரோனாவால் ஏற்கெனவே வாழ்வாதாரம் இழந்து உடல் நலம் கெட்டுத் தவிக்கும் இந்தியக் குடிமக்கள் இந்த அதிகரிக்கும் விலையேற்றத்தால் மேலும் பரிதவிக்கிறார்கள். எல்லாம் கடைசியில் மக்களின் தலையில்தான் விடிகிறது.

இளங்கோ கிருஷ்ணன்