நான்... பழநிபாரதி



பத்திரிகையாளனாகவே முதன்முதலில் என் எழுத்துப் பயணம் தொடங்கியது. நல்ல பத்திரிகையாளனாக பெயர் எடுக்கவே நானும் ஆசைப்பட்டேன். ஆனால், வாழ்க்கை எனக்கு வேறு ஏதோ திட்டம் வைத்திருந்தது போல.சொந்த ஊர் காரைக்குடி செக்காலை… படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை. அப்பா சாமி பழனியப்பன், அம்மா கமலா.
அப்பா தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் உதவியாளராக இருந்தார். பாரதிதாசன் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கவிஞரும் கூட. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களோடும் தமிழறிஞர்களோடும் நிறைய பழகியவர்.

‘தமிழகம்’ என்னும் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்தியவர். இந்தித் திணிப்பை எதிர்த்தும் அப்போதைய தேசிய பிரச்னைகள் குறித்தும் அவர் எழுதிய தலையங்கங்களை பெரியாரின் ‘குடியரசு’, அண்ணாவின் ‘திராவிட நாடு’ பத்திரிகைகள் மறு பிரசுரம் செய்து பாராட்டி உள்ளன.

இப்படியான ஒரு சூழலில் வேலை தேடி சென்னைக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ பத்திரிகையில் அப்பாவுக்கு வேலை கிடைத்தது.

ஆகவே எனது படிப்பு, வளர்ச்சி எல்லாம் சென்னையை மையம் கொண்டதாகவே இருந்தது. என்னுடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், நான்கு சகோதரிகள். வீட்டுக்குப்  பின்னாலிருந்த மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி. பிறகு கோடம்பக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் கணபதி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்.

அதன்பிறகு திரைத் துறையில் ‘எடிட்டிங்’ பணியில் ஆர்வம் வர தமிழ்நாடு அரசின் திரைப்படக் கல்லூரியில் சேர முயற்சித்தேன். ஆனால், முயற்சி வெற்றியடையவில்லை. அப்போது கல்லூரியின் இயக்குனராக திரைப்பட இயக்குநர் நீலகண்டன் இருந்தார்.சரி,அடுத்தது என்ன என்று யோசிக்கையில்தான் சின்னச் சின்ன பத்திரிகைகளில் வேலை கிடைக்க ஆரம்பித்தது. ‘நீரோட்டம்’, ‘போர்வாள்’ போன்ற நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் பிழை திருத்தும் பணியில் இருந்தேன்.

பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் ஒரு வேலை. புத்தகக் கிடங்கிலிருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் புத்தகக்கட்டுகளின் கணக்கைச் சரிபார்த்துப் பதிய வேண்டும். அது நிரந்தர வேலை அல்ல. ஒரு நாளைக்குப் பத்து ரூபாய் சம்பளம். ஆனால், அந்த வேலையில் எனக்கு பெரிதாக நாட்டம் இல்லை. ஒரு மாதத்திற்கு மேல்  தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இப்படியான சூழலில்தான் வலம்புரிஜானின் ‘தாய்’ பத்திரிகையில் ஒரு வேலை கிடைத்தது. எப்படிக் கிடைத்தது என்பது ஒரு சுவையான சம்பவம். என்னுடைய ‘நெருப்புப் பார்வைகள்’ என்கிற முதல் கவிதைத் தொகுதியை வலம்புரிஜானிடம் ஏற்கனவே கொடுத்திருந்தேன்.

அதில் ‘சூரியனையும் அடுப்பையும் தவிர எந்தத் தீயும் வெப்பமும் என் தேசத்தை வருத்தப்படுத்தக் கூடாது என்ற புறநானூற்றுக் கவிதையின் பாதையில் என் புதுக் கவிதைகள் ஊர்வலம் புறப்பட்டிருக்கின்றன’ என்ற வரிகளை வாசித்துப் பாராட்டிவிட்டு, அடுத்த வாரமே ‘தாய்’ வார இதழின் தலையங்கத்தில் புகழ்ந்து எழுதி இருந்தார். அப்போது எனக்கு இருபது வயதிருக்கும்.  

அப்பாவும் வலம்புரிஜானும் ஓர் இலக்கியக் கூட்டத்தில் சந்தித்திருக்கிறார்கள். உங்கள் மகன் என்ன செய்கிறார் என்று வலம்புரி ஜான் கேட்க, அவன் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் கணக்கெழுதும் வேலை செய்கிறான் என்று அப்பா சொல்லவும், “கவிதை எழுதும் ஒரு கவிஞனை கணக்கெழுத அனுப்பலாமா? என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள், என் பத்திரிகையில் பணி தருகிறேன்...” என்று சொல்லி இருக்கார். அப்படித்தான் கிடைத்தது அந்த வேலை.

வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாள்களிலேயே என்னை அழைத்து, “பிழைதிருத்தும் வேலையிலேயே இருந்துவிடாதே, இலக்கிய கூட்டங்களுக்குச் செல்; எழுத்தாளர்களைப் பார்; பேட்டிகள் எடுத்து வந்து எழுது...” என்று உற்சாகப்படுத்தினார். பிறகு அத்தகைய செய்தி சேகரிப்பும், கட்டுரைகளும், பேட்டிகளும் என்னுடைய இலக்கியப் பரப்பை விரிவடையச் செய்தன. நிறைய ஆளுமைகளைச் சந்தித்தேன். என் பேட்டி என்றாலே நிச்சயம் அது அதிர்வு அலைகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த இள வயதுக்கே உரிய துடிப்போடு சுடச்சுட பரபரப்பான பேட்டிகள். எனக்கென ஒரு தனி அடையாளம் கிடைத்தது.

பணி செய்துகொண்டே படிக்கலாம் என்று பி.லிட் தமிழ் இலக்கியம் பயில, சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்தேன். முதல் தேர்வு. அன்று ஞாயிற்றுக்கிழமை. சிறு மழைத் தூறல். அரங்கத்தில் தேர்வு எழுதத் தொடங்கினேன். வெளியில் பெருமழை. எதிரில் மெரினா கடற்கரை என்னை அழைக்க, என்னுடைய எண்ணம் எங்கேயோ பயணிக்க, பரீட்சை எழுதாமல் தவிர்த்துவிட்டு மெரினா கடற்கரைக்குச் சென்று அப்படியே நின்று நனைந்துவிட்டேன்.

அவ்வளவுதான். நாம்தான் வேலையில் சேர்ந்து விட்டோமே இனிமேல் எதற்குப் படிப்பு என்ற எண்ணமும் வர படிப்பும் முடிந்துவிட்டது.

சில ஆண்டுகளில் ‘தாய்’ வார இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வலம்புரி ஜான் விலக நேர்ந்தது. நானும் விலகி விட்டேன். பிறகு வேறு வேறு பத்திரிகைகளிலும், அச்சகங்களிலும் எனது பணி விட்டுவிட்டுத் தொடர்ந்தது.

இதற்கிடையில்தான் இயக்குநர் விக்ரமனின் அறிமுகம் கிடைத்தது. அவரது முதல் படம் ‘புது வசந்தம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘பெரும்புள்ளி’ என்கிற படத்தின் கதை ஆலோசனையில் இருந்தார். அப்போது எனது நண்பன் பேரமனூர் சந்தானம் ஒரு பிரபல வார இதழில் ஃப்ரீலான்சர் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தான். ஒரு புதுமைக்காக அந்த வார இதழை சில வாரங்கள் சில பிரபலங்கள் தயாரித்தார்கள். அதில் ஒரு வாரம் விக்ரமன். அந்த இதழின் எழுத்துப் பணிகளுக்கு நான் சந்தானத்திற்கு உதவினேன்.

இந்த நாட்களில் நண்பன் சந்தானம் விக்ரமனிடம், “என் நண்பன் பழநிபாரதி நல்லா கவிதை எழுதுவான் சார்... உங்க படத்துல ஒரு வாய்ப்பு கொடுங்க...” என்று எனக்காக அவனாகவே கேட்டான். நான் எழுதியிருந்த புத்தகத்தை (‘நெருப்புப் பார்வைகள்’) எடுத்துச் சென்று விக்ரமனிடம் காண்பித்தான்.

விக்கிரமனுடைய பதில் இப்படி இருந்தது: “ஒரு சிலர் நல்லா கவிதை எழுதுவாங்க; ஆனா, மெட்டுக்குப் பாட்டு எழுதச் சொன்னால் சிரமப்படுவாங்க, அந்த மாதிரி ஆகிடக்கூடாது...”கவிதைப் புத்தகத்தைப் பார்த்தவர் அடுத்த நாளே என்னை அழைத்து வரச் சொல்லியிருந்தார். போனவுடன் எனக்கு ஒரு மெட்டைக் கொடுத்து, ‘‘நம்பிக்கையோடு எழுதுங்க. நல்லா இருந்தா நிச்சயம் படத்தில் பயன்படுத்துவேன்...’’ என்று சொல்லி அனுப்பினார்.

அவரது இரண்டாவது படமான ‘பெரும்புள்ளி’யில்தான் முதல் பாடல் வாய்ப்பு.மரபுக் கவிதைகளில் பயிற்சி இருந்தபோதும் திரை மெட்டுக்கு எழுதுவது சவாலாக இருந்தது. அதில் என் கவித்துவத்தை நிரூபிக்க திரும்பத் திரும்ப எழுதினேன். மெட்டுக்கு எழுதுவது மெதுவாக வசப்பட்டது.

‘இளமையின் விழிகளில் வளர்பிறைக் கனவுகள்பௌர்ணமி ஆகிறதேமரங்களின் கிளைகளில் குயில்களின் சுரங்களில்சூரியன் மலர்கிறதே...’எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் பாடல் நன்றாகவே வந்திருந்தது. விக்ரமன் பாராட்டினார். படத்தின் நாயகன் ‘என்னுயிர்த் தோழன்’ பாபு விபத்தில் சிக்கியதால் எனது பாடலைப் படம்பிடிக்க முடியவில்லை. படத்தின் டைட்டிலில் பெயர் வந்தது; பாடல் வரவில்லை.

திரும்பவும் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பிழைதிருத்தும் பணி தொடர்ந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரமனின் அடுத்த படம் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, பொன்வண்ணனின் ‘அன்னை வயல்’ இரண்டு படங்களிலும் பாடல்கள்  எழுதிக் கொண்டிருந்தேன். ‘அன்னை வய’லின் ‘மல்லிகைப் பூவழகில்...’ என்கிற பாடலை ஒரு பூங்காவில் உட்கார்ந்து ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தேன்.

அங்கிருந்து பொன்வண்ணன் அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் காட்டினேன். அப்படியே இசையமைப்பாளர் சிற்பியிடம் கொடுத்துப் பாடச் சொல்லிக் கேட்டார். ஒரு சொல்லைக்கூட மாற்றச் சொல்லவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்து பாட என் சொற்களுக்குச் சிறகுகள் முளைத்தன. பாடல் எழுதுவதில் மிகுந்த நம்பிக்கை பிறந்தது. ஆனால், படம் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை.

தாமதமாக வெளியானாலும் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ படமும் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. எல்லாராலும் பேசப்பட்டன. பிறகு என் மீது நம்பிக்கை வைத்து விக்ரமன் ‘கோகுலம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதச் சொன்னார். சிற்பியின் இசையில் பாடல்கள் மெகா ஹிட்.

‘புதிய மன்னர்கள்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை வரை என்னைக்  கொண்டுபோய்ச் சேர்த்தவர் விக்ரமன்தான். அந்தப் படத்தில் ‘நீ கட்டும் சேல மடிப்பில நான் கசங்கிப் போனேன்டி...’ என்கிற பாடல் மிகவும் பிரபலமாகி, பள்ளி, கல்லூரிகளின் ஆண்டு விழாக்களில் ஆடிப் பாடத் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அந்த நாட்களில் நான் பணிபுரிந்த ‘அரங்கேற்றம்’ பத்திரிகையின் அச்சகம் தியாகராயர் நகர் ஹபிபுல்லா சாலையில் இருந்தது. அதே சாலையில் அண்ணன் அறிவுமதி இயக்கவிருந்த, ‘உள்ளேன் அய்யா’ படத்தின் அலுவலகமும் அமைந்தது. அந்த அலுவலகம், திரைப்பட வாய்ப்பு தேடி சென்னை வந்த இளைஞர்களுக்கு ஒரு வேடந்தாங்கல்.

நானும் என் பெரும்பாலான பொழுதுகளை அங்கே கழித்திருக்கிறேன். இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த சுந்தர்.சி, நண்பர் செல்வ பாரதியைச் சந்திக்க அங்கு வருவார். அந்நேரம் ‘முறை மாமன்’ படத்தை அவர் இயக்குவதாக இருந்தார். ‘புதிய மன்னர்கள்’ படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்த நேரம் அது. பாடல்கள் சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது படத்திலும் வாய்ப்பு தருவதாகச் சொன்னார்.

சொன்னபடி ‘முறை மாமன்’ படத்தில் இரண்டு பாடல்களையும் அடுத்த படமான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் அள்ளித் தந்தார்.

1995ம் ஆண்டு இறுதியில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ வெளிவந்தது.வாலி, வைரமுத்து என்ற இரு ஆளுமைகளுக்கு இடையில் அந்தப் படத்தின் பாடல்கள் எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தின. அடுத்து 1996 ஆரம்பத்தில் விக்ரமனின் ‘பூவே உனக்காக’. இந்த இரண்டு படத்தின் பாடல்கள்தான் அந்தக் காலகட்டத்தில் எல்லா திசைகளிலும் ஒலித்தன. பத்திரிகையாளரா, பாடலாசிரியரா எனப் பரிதவித்த நான் முழுநேரப் பாடலாசிரியரானேன்.

1996, 97ம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ நாற்பது படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளி வந்த ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் பாடல்கள் தனி மரியாதையை ஏற்படுத்தின. அந்தப் பாடல்களுக்குத் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை அன்றைய முதல்வர் கலைஞர் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டேன். கலைமாமணி விருது, கலைவித்தகர் கண்ணதாசன் விருது என அது தொடர்ந்தது.

இசைஞானி இளையராஜா ஒரு தந்தையின் அன்போடு, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘மனசெல்லாம்’, ‘ரமணா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களில் எனக்கு அளித்த வாய்ப்புகள் எனது புகழ் பெற்ற பாடல்களாக அமைந்துவிட்டன.

1991ல் ‘பெரும்புள்ளி’ படத்தில் தொடங்கிய எனது பாட்டுப் பயணம் ஆயிரம் பாடல்களுக்கு மேலாக நீண்டு கொண்டிருக்கிறது. எத்தனை இயக்குநர்கள், எத்தனை இசையமைப்பாளர்கள், எத்தனை பாடகர்கள், எத்தனை ரசிகர்கள்.... பாடல்கள் நிரம்பிய வாழ்க்கையை யாரால் நிராகரிக்க
முடியும்!  

செய்தி:  ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்