ஆயிரம் கிலோ வெங்காயம் அனுப்பிய காதலி!.



சீனாவில் தன் காதலனைப் பழிவாங்குவதற்காக ஜாவோ என்ற இளம்பெண் செய்த செயல்தான் கொரோனாவுக்கு மத்தியில் செம வைரல்.
சில நாட்களுக்கு முன் காதலனைவிட்டு பிரிந்துவிட்டார் ஜாவோ. பிரிவின் துக்கம் காரணமாக மூன்று நாட்களுக்கு கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
அந்தப் பிரிவு காதலனைப் பெரிதாக பாதிக்கவில்லை என்ற விஷயம் ஜாவோவிற்குத் தெரிய வர இன்னமும் உடைந்து போய்விட்டார்.

தான், அழுத மாதிரியே காதலனும் அழவேண்டும் என்று நினைத்தார். உடனே ஆயிரம் கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து காதலன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்!மலையிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு வெங்காயத்தை டெலிவரி செய்திருக்கிறார் கூரியர் பாய். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய காதலன் வெங்காய மூட்டையைப் பார்த்து அழாமல் வியப்படைந்துள்ளார்.

மூட்டையின் மேல் ஒரு கடிதம் இருந்திருக்கிறது. அதில் ஜாவோ, ‘‘நான் மூன்று நாள் அழுதேன். இது உன்னுடைய முறை...’’ என்று எழுதியிருந்தார்.‘‘பிரிவுக்குப் பின் அழவேண்டுமா..?’’ என்று காதலன் எழுப்பிய கேள்வியும் வைரலாகிவிட்டது.

த.சக்திவேல்