மர்மத் தவளை!



தவளை இனங்கள் அதிவேகமாக அழிந்துவருகின்றன. 1950களுக்குப் பிறகு மூன்றில் ஒரு பகுதி தவளை இனங்கள் அழிந்துவிட்டன. காடுகளை அழித்ததே இதற்கு முக்கிய காரணம்.அவ்வப்போது ஆய்வாளர்கள் புதிய தவளை இனத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பார்கள். அதே நேரத்தில் கண்டுபிடிக்காமல் இருக்கும் தவளை இனங்களும் ஏராளம்.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு புதிய தவளை இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து வரும் மாணவி சோனாலி, வன உயிர்கள் மற்றும் இயற்கை சார்ந்து ஆய்வு செய்து வருகிறார். அவரின் ஆய்வு வழிகாட்டி பிஜு.

இருவரும் இணைந்து வயநாட்டில் நடத்திய ஆய்வில்தான் இந்தத் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குட்டையில் இந்த தவளையைக் கண்டிருக்கிறார் சோனாலி. இந்தத் தவளை இனத்துக்கு மிஸ்டிசெலஸ் (Mysticellus) என்று பெயர் சூட்டியுள்ளனர். Mysticellus என்னும் லத்தீன் வார்த்தைக்கு மர்மம் மற்றும் மிகச் சிறியது என்று பொருள்.