வங்கி நிதி மோசடி... நடப்பது என்ன?



ஒரு தேசிய வங்கி கடன் வழங்கியதில் நிகழ்ந்த முறைகேடுதான் இந்த வார வைரல். வங்கிகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் நிதி  அமைச்சகம் இரண்டுக்குமான உறவில் மறைமுக மோதலை இந்த மோசடி ஏற்படுத்தியுள்ளது. இந்த மோ(ச)டி விவகாரம் வெளிவந்த உடனே பேனா நிறுவனரான  விக்ரம் கோத்தாரி ஏழு வங்கிகளில் பெற்றுள்ள மூன்றாயிரத்து 695 கோடி ரூபாய் வாராக்கடனும் மீடியாக்களின் லைம்லைட்டுக்கு வந்துள்ளது. கடந்த சில  ஆண்டுகளாகத் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள், வட்டியைக் கூட வசூலிக்க முடியாமல் வாராக்கடன் என எழுதி விடுவது குறித்த சர்ச்சை நிலவி  வருகிறது.

இப்படியான இழப்பீட்டை மெல்ல மக்களின் தலையில் கட்டுவது வங்கிகளின் ஓனரான இந்திய அரசின் ஜென்டில்மேன் பணி என்பது மக்களின் முணுமுணுப்பு. வைர வியாபாரி நீரவ் மோடி 11 ஆயிரத்து 300 கோடி ரூபாயையும் திடீரென ஏதோ காக்கா வடையை சுட்டது போல தூக்கிக்கொண்டு போகவில்லை. சிறுகச்  சிறுக ஏழு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் விதிகளைக் காலில் போட்டு மிதித்து வங்கி அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு இதைச் செய்திருக்கிறார். வங்கி விவகாரம் கசிந்ததில் இருந்து கள்ள மௌனம் சாதித்து வந்த ஆர்.பி.ஐ., அண்மையில் தனது இணையதளத்தில் ஆகஸ்ட் 2016லிருந்து நடந்த கடன்  முறைகேடு குறித்து மூன்று முறைக்கு மேலாக வங்கிகளை எச்சரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

வாராக்கடன் விவகாரம் பூதாகரமாகக் கிளம்பும் ஒவ்வொருமுறையும் ஆட்சியிலுள்ள அரசு ஆர்.பி.ஐ., மீது பழியைத் தூக்கிப் போடுவதும், ஆர்.பி.ஐ., நிதி  அமைச்சகத்தை கைகாட்டுவதும் வழக்கமாகிவிட்ட நிலையில் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் எனத் தன் வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள எளிய மக்களின் கதி  என்ன? 1969ம் ஆண்டு ஜூலை 19 அன்று முதன்முதலில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, வங்கிச் சட்டத்தைத் திருத்தி 14 வங்கிகளைத் தேசியமயமாக்கி  அவற்றை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

என்ன காரணம்?
1947 - 1955ம் ஆண்டு வரை இயங்கிய 361 வங்கிகள், ஆண்டுக்கு நாற்பது என திவாலாகி மக்களின் சேமிப்பை ஏப்பம் விட்டு மஞ்சள் நோட்டீஸைக் கொடுத்து  தலைமறைவாகிக் கொண்டிருந்தன. அதோடு வணிகரீதியிலான தொழில்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் விவசாயத்துக்கு சல்லிப்பைசாவைக் கூட தர  மறுத்தன. 1950 - 67 வரை வங்கிகள் கொடுத்த விவசாயக் கடன் அளவு வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே. தேர்தல் வெற்றிக்கு இத்திட்டம் இந்திராகாந்திக்கு  உதவியது போல மக்களுக்கு எதார்த்தத்தில் உதவவில்லை என்பதே நிஜமாக இருந்தது.

2016ம் ஆண்டு வங்கதேசத்தின் மத்திய வங்கியில் 525 கோடி ரூபாய் இணையப் பரிமாற்றமுறையில் நுட்பமாகக் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போதே இந்திய  வங்கிகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளை ஸ்விப்ட் (Swift) எனும் சர்வதேசமுறையில் இணைக்க ரிசர்வ் வங்கி அறிவுரைத்தது. உலகெங்கும் நிகழும்  வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளைக் கண்காணித்து, இணையக் கொள்ளைகளைத் தடுப்பது ஸ்விப்ட் முறைதான். ‘‘பேங்கில் உள்ள  மென்பொருளையும் ஸ்விஃப்ட்டையும் இணைக்காவிடில் முறைகேட்டை கண்டுபிடிப்பது மிகச் சிரமம்...’’ என்கிறார் EY என்ற ஆடிட்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த  அபிஷர் திவான்ஜி.

இப்போது, இந்த வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அதன் முன்னாள் ஊழியர் கோகுல்நாத் ஷெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். 2011 - 17 காலகட்டத்தில் முதல்  தவணையாக நான்காயிரத்து 230 கோடி ரூபாயையும் பின்னர் கடந்தாண்டு மார்ச் - மே மாதம் வரையில் மூன்றாயிரத்து 188 கோடி ரூபாயையும் முறையான  ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் உள்ள மோடியின் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுத்துள்ளார் கோகுல். வங்கிகள் ஏன் தம் கம்ப்யூட்டர்களை, பாதுகாப்பு  மென்பொருட்களை அப்டேட் செய்வதில்லை? காரணம், முதுகை அழுத்தும் நிதிச்சுமைதான்.

பொதுத்துறை வங்கிகள் பல்லாண்டுகளாக எக்கச்சக்க வாராக்கடன்களோடும் மினிமம் முதலீடுகளோடும் அரசின் முறையற்ற நிதிக்கொள்கைகளோடு போராடி  வீழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதே எதார்த்தம். அரசும், ஆர்.பி.ஐ.யும் கரம் கோர்த்து கடன்விதிகளைக் கறாராக உருவாக்கினால் மட்டுமே வாராக்  கடன்களிலிருந்தும், நிதி மோசடிகளிலிருந்தும் பொதுத்துறை வங்கிகள் தப்ப முடியும். மக்களின் நம்பிக்கையையும்
தக்கவைக்க முடியும்.

பணத்துக்குப் பாதுகாப்பு!
1973ம் ஆண்டு 15 நாடுகளில் உள்ள 239 வங்கிகள், நாடுகளைத் தாண்டிய பணப் பரிமாற்றத்துக்குத் தீர்வு காண பெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு  The Society for Worldwide Interbank Financial Telecommunication (Swift) என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். டெலக்ஸ்  தொழில்நுட்பத்துக்கு மாற்றாக ஸ்விஃப்ட், நாடுகளிடையே பணப்பரிமாற்றம் குறித்த தகவல்களை, பரிந்துரைகளை பாதுகாப்பாகவும் வேகமாகவும் வங்கிகளுக்கு  அனுப்புகிறது. இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 11 ஆயிரம் நிதி நிறுவனங்களின் சேவைகளைக் குறைந்த செலவில் ஒருங்கிணைக்கிறது ஸ்விஃப்ட்  நிறுவனம்.

வாராக்கடன் வளர்ச்சி! (கோடிகளில்)

வங்கிகள்                                                      2013        2017

பஞ்சாப் நேஷனல் வங்கி (95.13%)  -   843        12,232

பாரத ஸ்டேட் வங்கி  (25.07%)        -   11,328       27,716

பொதுத்துறை வங்கிகள் (62.92% )  -   9,138       65,641

தனியார் வங்கிகள் (25.67% )              -  5,817        14,508

மொத்த வங்கிகளின் கடன் (45.82% ) - 28,416   1,11,738

- ச.அன்பரசு