கவிதை வனம்



பெருமாள்

நெரிசலில் தெரிகிறார் பெருமாள்
ஸ்டிக்கர் பிரிக்காத
கூலிங்கிளாஸ் அணிந்த
அப்பாவின் தோளில் இருந்த
அந்தக் குழந்தை கேட்கிறது
யாருப்பா இது?
உலகளந்தோன்; நம்பெருமான்
எம்பெருமான் முடிப்பதற்குள்
வாவ் எனச் சொல்லி
கன்னத்தில் போட்டுக்கொள்கிறது
ஆழ்வார்களும் விளிக்காத
வாவ் வார்த்தையால்
பாடல் பெறுகிறார் கடவுள்

- ரா.பிரசன்னா

மெட்டு

இரவுகளில் ஓயாமல்
பாக்கு இடித்துக்
கொண்டேயிருக்கும்
பாட்டி
எந்த நினைவுகளுக்கு
மெட்டிசைக்கிறாளோ

- சீதா