கும்ப லக்னம் - சனி - ராகு சேர்க்கை தரும் யோகங்கள்



109 கிரகங்கள் தரும் யோகங்கள்

இயல்பிலேயே சபை அலங்காரப்பேச்சுகளில் வல்லவர்கள் இவர்கள். சில நேரங்களில் இவர்களின் வியூகம் குறிதவறிப் போகும். எதிரி சிரமமில்லாது உங்களால் வளர்க்கப்படுவார். எத்தனை வசதி வந்தாலும் தைத்துப் போட்டிருந்த செருப்பையும், குடையில்லாமல் சந்தித்த மழையையும் நினைவில் வைத்திருப்பார்கள்.

கெட்டவர்களை ஒதுக்காமல் அவர்களையும் நல்லவர்களாக்க முயல்வார்கள். மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி அறிவுரை கூறுவார்கள். நிறைய கனவு காண்பார்கள். எல்லாவற்றையும் நிஜத்தில் நிறுத்த முயற்சியும் செய்வார்கள்.

ராகுவால் ரிசர்ச் எஜுகேஷனை விரும்புவார்கள். பல சூட்சும விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். அதேநேரம், முக்கியமான ஒன்றை இழந்து பெரிய விஷயங்களை சாதிப்பார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதி பதியான சனியும் ராகுவும் சேர்ந்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?

கும்ப லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் ராகுவும் சேர்க்கை பெற்றால் எதைச் செய்தாலும் ரகசியமாகச் செய்வார்கள். செய்து முடித்தபின் தேவைப்பட்டு வற்புறுத்திக் கேட்டாலொழிய எதையும் சொல்ல மாட்டார்கள். ‘ஆள்பாதி ஆடை பாதி’ எனும் பழமொழியின்  மீது நம்பிக்கையில்லாதவர்கள். திடீரென்று எதிர்கால இலக்குகள் இல்லாது காற்றில் அலையும் சருகாக வாழ்க்கை நகரும்.

இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் ராகுவும் சேர்ந்திருந்தால் டீன் ஏஜ் முடியும் முன்பே அனைத்து போகங்களையும் அனுபவித்து விடுவார்கள். இருபது வயதிற்குள்ளேயே வாழ்வின் மோசமான பக்கங்களைப் பார்த்து விடுவார்கள். எத்தனை வயதானாலும் ஒரு இளமைத் துள்ளல் இருக்கும். தேடிப்பிடித்து ஆங்கிலப் பாடல்களைக் கேட்பார்கள். ஒரு மேற்கத்திய பாணி இவர்களிடம் இருக்கும்.  வகுப்பறையில் இவர்கள்போல குறுக்குக் கேள்விகள் கேட்பவர்கள் யாருமில்லை. சிலபஸ் தாண்டி அடுத்த வருட பாடத்திலெல்லாம் கேள்வி கேட்பார்கள்.

மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் ராகுவும் இணைந்திருந்தால் நிறைய ஆடம்பரச் செலவுகளைச் செய்து கையைச் சுட்டுக் கொள்வார்கள். எந்த ஒரு விஷயமும் பெரும் முயற்சிக்குப் பிறகுதான் இவர்களுக்கு கிட்டும். இவர்களுக்கு அவ்வப்போது கல்வி தடைபட்டுக் கொண்டேயிருக்கும். இளைய சகோதரர்களுக்கு இவர்களால் பெரும் நன்மைகள் எதுவும் நடக்காது. நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள்.

நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் ராகுவும் ஒன்றாக இருந்தால் விதவிதமான வாகனங்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து வைத்துக் கொள்வார்கள். இவர்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது கவனத்தோடு செயல்பட வேண்டும்.

மாபெரும் தலைவருக்கு ஆலோசகராகச் செயல்படுவார்கள். தாய்வழி சொந்தங்களோடு ஏதேனும் பிரச்சனைகள் வந்தபடி இருக்கும். இவர்கள் வீடு, மனை, நிலம் வாங்கும்போது மிகவும் கவனமாக தாய்ப்பத்திரம் சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் ராகுவும் சேர்க்கை பெற்றால் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டு பூர்வீகச் சொத்தை காப்பாற்றுவார்கள். இந்த அமைப்பில் உள்ள பெண்களுக்கு காலதாமதமாக குழந்தை பிறக்கும்.

ஆன்மிக இசையில் நாட்டம் செலுத்துவார்கள். ஆளும் பிரமுகர்களின் நிழலாகவும் இருப்பார்கள். கஷ்டப்பட்டு பாதுகாத்து வைத்திருக்கும் சொத்தை பிள்ளைகள் காப்பாற்றத் தெரியாது அழிப்பார்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டி போடாமல் இருப்பதே நல்லது. அடுத்தவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடுவார்கள்.

ஆறாம் இடமான கடகத்தில் சனியும் ராகுவும் சேர்ந்திருந்தால் எப்போதும் பணப் பற்றாக்குறை வந்து நீங்கியபடி இருக்கும். உடம்பில் சோம்பல்போல ஒரு மதமதப்பு இருக்கும். பிறருக்கு ஒரு வேலையை செய்யும் இவர்கள், தனக்கென்று வரும்போது செய்ய முடியாது அல்லாடுவார்கள். அடிக்கடி விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 கொஞ்சம் அடுத்தவர்களை இம்சித்து அதில் சந்தோஷமடையும் குணமுண்டு. இவர்களைப் பொறுத்தவரையில் நல்லவர்களாக இருப்பதுபோல் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மை வேறுவிதமாக இருக்கும்.

ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் ராகுவும் இருந்தால் அவ்வப்போது யார் புத்திசாலி, யார் மிகுந்த திறமைசாலி என்பதில் போட்டி அதிகமிருக்கும். எப்போதும் எல்லாவற்றிற்கும் ஈகோ பார்த்துக் கொண்டிருந்தால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிடும்.திருமணத்திற்காக பார்க்கும்போது குடும்ப சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து சேர்க்க வேண்டும்.

இல்லையெனில் நோயுற்றவர்கள் வாழ்க்கைத் துணையாக வருவார்கள். வியாபாரத்தில் கூட்டுத் தொழிலைத் தவிர்க்க வேண்டும். சிலர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பார்கள். மர்ம ஸ்தானத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. இந்த அமைப்புள்ளவர்கள் மனைவிக்குத் தெரியாமல் எந்தவித பணப்பட்டுவாடாவும் செய்யக்கூடாது.

எட்டாமிடமான கன்னியில் சனியும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் கனவைக் குறித்த ஆராய்ச்சிகளில் அதிகமாக ஈடுபடுவார்கள். எல்லா விஷயங்களைக் குறித்த அறிவும் இருக்கும். ஆனால், பணமாக மாற்றத் தெரியாது. தீர்க்கமான ஆயுள் பெற்றிருப்பார்கள். சரியானபடி சேமித்தால் பிற்கால வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இராது. அவ்வப்போது சித்தர் பீடங்களுக்குச் சென்ற வண்ணம் இருப்பார்கள். மத்திம வயதுக்குப் பிறகு ஆசார, அனுஷ்டானத்தோடு இருக்கவே விரும்புவார்கள்.

ஒன்பதாம் இடமான துலா ராசியில் சனியும் ராகுவும் சேர்க்கையுற்றிருந்தால் இவர்களின் தந்தையார் இவர்களின் மத்திம வயதில் இவர்களை விட்டு தனியாக எங்கேனும் சென்று விடுவார்கள். மரபு, கலாச்சாரம் போன்றவற்றிற்கு புத்துயிர் கொடுப்பார்கள். பணத்திற்குப் பின்னால் ஓடுவதில் மிகுந்த சலிப்படைவார்கள்.

முன்னோர்களிடமிருந்து எதெல்லாம் கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் எப்பாடுபட்டாவது பெற்று விடுவார்கள். ஆறு, குளம், குட்டை, கடல் போன்றவற்றில் நீராடும்போது எச்சரிக்கை தேவை.

பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் ராகுவும் இணைந்திருந்தால் இன்ஷூரன்ஸ் கம்பெனி, கெமிக்கல் கம்பெனி, மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பு கம்பெனிகள், பொருளாதாரத்துறை பற்றி போதிக்கும் ஆசிரியர், விவசாயத்துறையில் அதிகாரி, கால்நடை மருத்துவர் போன்ற வேலைகள் கிடைத்தால் பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். மூத்த சகோதரர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவர்கள் வேலை பார்க்கக்கூடாது.

அது வியாபாரமாக இருந்தாலும் சேர்ந்து செய்யக்கூடாது. அலுவலக சம்பவங்களை அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். எப்போதுமே தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்கள் எதற்கு இன்னொருவருக்குத் தெரியவேண்டு மென்று நினைப்பார்கள். தாய்-சேய் நலவிடுதி, போதை மீட்பு மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் ஈடுபட முன்னேற்றம் எளிதாக இருக்கும்.

பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் மூத்த சகோதரர்களால் ஏதேனும் பிரச்சனை வந்தபடியே இருக்கும். தீவிரவாத இயக்கங்கள் மீது இவர்களுக்கு மென்மையான போக்கு இருக்கும். கமிஷன், ஏஜென்சி என்று முன்னேறுவார்கள். ஷேர் துறையில் தனி முத்திரை பதிப்பார்கள். பொருட்களை கைமாற்றி விற்று அதில் நிறைய லாபத்தை பெறுவார்கள்.

தான் சார்ந்த குலத்தின் தொழிலையே நவீனமாக நடத்துவார்கள். நான்கு கால் பிராணிகளிடத்தில் அலட்சியமாக இருத்தல் கூடாது.பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் ராகுவும் சேர்ந்திருந்தால் நண்பர்களைக் கொண்டுதான் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். சண்டைக் கோழிகளாக இருப்பவரிடையே சமாதானத்தை உருவாக்குவார்கள்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார்கள். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது குறித்து ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டு அறிவை மேம்படுத்திக் கொள்வார்கள். யாருக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தாற்போல் கொடுத்து உதவுவார்கள். ஆனாலும், இவர்கள் கொஞ்சம் ஓட்டை கைதான். வீணாக பணத்தை செலவு செய்து விட்டு விழிப்பார்கள்.

சனி-ராகு சேர்க்கை கொஞ்சம் சுமாரான அமைப்புதான். அதுதவிர கிரகங்கள் பகை பெற்றாலோ, நீசமடைந்தாலோ எதிர்மறையான பலன்களைத் தரும். அந்த நேரங்களில் நிச்சயமாக இவர்கள் உக்கிரமான கிராம தெய்வங்களை வழிபடுதல் மிகுந்த நன்மையைத் தரும். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அருள்மிகு ஐவராஜாக்கள், நீராவி சுடலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

‘‘இந்தக் குளத்தில் நீர் வற்றக்கூடாது. மழையில் பெருகி, வெயிலில் ஆவியாகி வற்றும் மற்ற குளங்களைப் போல் இல்லாமல், இந்தக் குளத்து தண்ணீர் வெயில் காலங்களில் ஆவியாகி நீர் வற்றும் நிலை வராமல் காத்து நிற்க வேண்டும் அய்யனே’’ என்றனர். ‘‘சுடலை காவல் தப்பாது, கவலை வேண்டாம், நீர் ஆவியாகாது’’ என்றுரைத்தார் அசரீரியாக பேச்சி மகன் மாயாண்டி சுடலை.

ஆண்டுகள் கடந்த போதும் நீராவியாகாமல் குளம் வற்றாமல் காத்து நின்றதாலே இவ்விடத்து சுடலை, நீராவி சுடலை என்று அழைக்கப்பட்டார். ஐவராஜாக்கள் நிறுவியதால் இந்தக்கோயில் ஐவராஜாக்கள் நீராவி சுடலை ஆண்டவர் கோயில் என்று இப்போது அழைக்கப்படுகிறது.

கோயிலைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகி விட்டன. தன்னை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து துணை நின்று காத்தருள்கிறார் நீராவி சுடலை ஆண்டவர். இக்கோயில் வள்ளியூர் பேருந்து நிலையத்திலிருந்து பண்டாரபுரம் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்