மகர லக்னம் தனித்த சனி தரும் யோகம்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 92

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

தியாகம், தியானம், தீரம் என்று நற்குணங்களை இயல்பாகக் கொண்டவர்கள் இவர்கள். சனி பகவான் மகரம், கும்பம் என்று இரண்டு லக்னங்களுக்கு அதிபதியாக வருகிறார். இந்த மகர லக்னத்தில் பிறந்த வர்கள் எல்லாவற்றிலுமே திறமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

வர்த்தக சிந்தனை அதிகமாக இருப்பதால் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். பிறந்த ஊர், வளர்ந்த ஊர், படித்த ஊர் என்று அவ்வப்போது பழைய நினைவுகளோடு ஊருக்குச் செல்வார்கள். தந்தையின் சொத்துக்கள் மற்றும் தந்தையால் மிகுந்த நன்மைகள் நடைபெறும்.

அவர் பார்த்த வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு அமையும். இருப்பதிலேயே மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பார்கள். அடுத்த தலைமுறைக்கென்று பல விஷயங்களை திட்டமிட்டுச் செய்வார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்கள். ஒவ்வொரு ராசியிலும் தனித்து சனி நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?

மகர லக்னத்திலேயே அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனி இருப்பதென்பது யோகம். மேலும், சனிக்கு இது ஆட்சி வீடு. லக்னாதிபதியும் குடும்பாதிபதியும் ஒன்றாக அமர்வதால் அடிப்படை விஷயங்கள் அனைத்தையுமே சனி பார்த்துக் கொள்கிறார். சொந்தங்கள் சூழ வாழ்வார்கள். எப்போதும் கம்பீரமும் புன்னகையுமாக வலம் வருவார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பாளராக அமருவதைத்தான் விரும்புவார்கள். இவர்களின் வாழ்க்கைப் பாதை மேலே மேலே செல்லுமே தவிர ஒருபோதும் கீழிறங்காது. இரண்டாம் இடமான கும்பத்தில் சனி அமர்ந்தால் பேச்சில் எப்போதும் தத்துவம் தெறிக்கும். ‘நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா...’ என்றுதான் ஆரம்பிப்பார்கள்.

தாவரவியல், வனவியல் கல்வியில் சேர்ந்து வித்தியாசமாக வருவதற்கு முயற்சிப்பார்கள். பிறமொழியில் மிகுந்த கவனம் கொண்டு கற்பார்கள். அதிலும் இவர்களுக்கு ஆங்கிலம் சாதாரணமாக வரும். தான், யாருக்கு உதவுகிறோமோ உண்மையிலேயே அவர்களின் நிலை என்ன என்று யோசித்து விட்டுத்தான் செலவைச் செய்வார்கள்.

எதைச் செய்தாலும் அதிவேகமாகச் செய்வார்கள். பிறரிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். பொதுவுடைமைச் சிந்தனை எழுத்தில் தெறிக்கும். தன் முயற்சியுடன், சுயகட்டுப்பாடோடு திகழ்வார்கள். தனித்திருந்து வெல்வார்கள். சிறிய உதவி செய்தால் கூட வாழ்வின் இறுதி வரையில் நினைவில் வைத்திருந்து சந்தர்ப்பம் பார்த்து உதவுவார்கள். மூன்றாம் இடத்தில் மீனத்தில் சனி இருந்தால் ஆகாது என்று சொல்வார்கள்.

ஆனால், இங்கு அப்படியல்ல. சனி மூன்றில் இருந்தால் நல்லதே. இளைய சகோதர, சகோதரிகளோடு நட்போடு இருப்பார்கள். தாமதப்பட்டு சகோதர வாரிசு கிட்டும். ஆளடிமை, நாணயம், கீர்த்தி, புகழ் போன்றவை நிச்சயம் நன்முறையில் அமையும். மூன்றாம் இடத்தில் சனி மறைவதால் எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் தொடக்க சிரமம் இருக்கும்.

இவர்களுக்கு டான்சில், இ.என்.டி. போன்ற பிரச்னைகள் வந்து நீங்கும். எந்தச் செயலைச் செய்யும் முன்னரும் வீட்டிலுள்ள பெரியவர்களை ஒரு வார்த்தை கேட்டுவிட்டோ அல்லது ஆலோசனை பெற்றோ செய்வார்கள். நான்காம் இடமான மேஷத்தில் சனி நீசமாகிறார். என்ன படித்திருந்தாலும் அதற்கேற்ப வேலை கிடைப்பதென்பது கடினம். தாயார் உடல்நிலையை அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏதேனும், தொந்தரவு வந்தபடி இருக்கும். மேற்கு, தெற்கு பார்த்த வாசலில் குடிபுகக் கூடாது. தாயா தாரமா என்கிற தடுமாற்றத்தையும், அதனால் சில பிரச்னைகளையும் ஏற்படுத்துவார். எல்லா விஷயங்களையும் அறிந்தும், புரிந்தும் வைத்திருப்பதால் முகத்தில் ஒரு முதிர்ச்சியிருக்கும். இவர்கள் இரு சக்கர வாகனங்களில் கியர் இல்லாத வண்டியை உபயோகப்படுத்துவது நல்லது.

ஐந்தாமிடமான ரிஷபத்தில் சனி இருந்தால் நல்லதே. ரிஷபம் நட்பு வீடுதான். ஆனால், பூர்வீகச் சொத்து நிற்காது. இல்லையெனில் நிறைய வழக்குகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். தாய் மாமன் உறவு கூட சீராக இருக்காது. கனவுத்தொல்லை அதிகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் தாமதமாகக் கிட்டும். பூர்வீகத்தை விட்டு வெளியே வந்தால் மிகவும் நல்லது.

இதைத் தவிர ஒரு பக்கம் புகழ் வந்தாலும் இவர்களைப்பற்றி தவறாகப் பேசுவதற்கென்றே ஒரு கூட்டமும் இருக்கும். பெண் குழந்தைகளால் விசேஷமான அதிர்ஷ்ட பலன்கள் கிட்டும். அத்தை, மாமா என்று எந்த சொந்தமாக இருந்தாலும் யாரிடமும் சென்று உதவி கேட்க மாட்டார்கள்.

ஆறாம் இடமான மிதுனத்தில் சனி இருந்தால் அசாத்திய திறமையோடு விளங்குவார்கள். கடனற்ற வாழ்க்கையை வாழ்வார்கள். ஆரம்பத்தில் சுமாராகப் படித்தாலும் போகப்போக நன்கு மதிப்பெண்களைப் பெறுவார்கள். கண்களில் நீர் வடிதலும், கண் கூச்சமும் இருந்து கொண்டேயிருக்கும். இவர்கள் அளவுக்கதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை உபயோகப்படுத்தக் கூடாது.

இவர்களுக்கும் பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியாமல் இருக்கும். அல்லது நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் யாருக்குமே சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபடுவார்கள். ஆறாம் அறிவை பயன்படுத்தி எல்லோரையும் திகைக்க வைப்பார்கள். ஏழாம் இடமான கடகத்தில் சனி இருந்தால் மிகச் சரியான பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

சுத்த ஜாதகமாகப் பார்த்துச் சேர்க்க வேண்டும். அல்லது ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து அல்லது வாழ்க்கைத் துணைவரை இழந்தவர்களாகப் பார்த்து திருமணத்தைச் செய்து கொள்ளலாம். இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று தள்ளிப் போட்டிருப்பார்கள். ஆனால், திடீர் திருமணமாகும். வாழ்க்கைத் துணையோடு ஏதேனும் வாத விவாதங்கள் வந்தபடியே இருக்கும்.

பெண்கள் விஷயத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. எட்டாமிடமான சிம்மத்தில் சனி அமர்வதும் அவ்வளவு நல்லதல்ல. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணைவர் சரியாக அமைந்திருக்கலாமோ என்று நினைப்பார்கள். கண்களில் நீர் வடிதல் பிரச்னை இருக்கும்.

எவ்வளவு சம்பாதித்தாலும் காசு கையில் தங்காது. தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பது நல்லது. இவர்களுக்கு சேமிப்பு பழக்கம் இருக்காது. நெருக்கடி நேரத்தில்தான் பணத்தின் அருமையை உணர்ந்து மாறுவார்கள். செலவுகள் துரத்தியபடி இருக்கும். காது, மூக்கு, தொண்டைகளில் பிரச்னைகள் வந்து நீங்கும். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவு செய்யக் கூடாது. 

ஒன்பதாம் இடமான கன்னியில் சனி இருந்தால் நல்லதே. புதனின் இடத்தில் சனி இருக்கிறார். ஆழ்ந்த சிந்தனையும், சமயோஜித புத்தியும் சேர்ந்திருக்கும். தந்தையை விஞ்சி வெளிப்படுவார். புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள். சிலசமயம் தந்தையை எதிர்த்து சில வேலைகளை செய்வார்கள்.

நீர்நிலைப்பகுதிகளில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் உடனே புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பது, மனதில் ரகசியங்களை வைத்துக்கொள்ளத் தெரியாமல் சங்கடப்படுவதும் உண்டு. புது எதிரிகள் எங்கிருந்தாலும் தங்களின் புத்தித் திறமையால் வீழ்த்தி முன்னுக்கு வருவார்கள்.

பத்தாம் இடமான துலா ராசியில் சனி உச்சமடைகிறார். நிலம், பண்ணை வீடு என்று ஏகபோகமாக வாழ்வார்கள். கேந்திர பலம் பெற்றிருப்பதால் சிவில் இன்ஜினியரிங், ஐஏஎஸ், ஐஆர்எஸ், பெரும் நிலக்கிழார்கள், பெட்ரோல், டீசல் என்று பல்வேறு துறைகளில் சாதிப்பார்கள். அரசியல் அல்லது சினிமா சம்பந்தப்பட்ட வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்.

ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டு நவீனமயமான நகர்களை உருவாக்குவார்கள். பதினோராம் இடமான விருச்சிக ராசியில் சனி அமர்ந்தால் கப்பலில் பயணிக்க விரும்புவார்கள். ஏற்றுமதி இறக்குமதியில் ஆர்வம் செலுத்தி ஏஜென்சி வைத்து நடத்துவார்கள்.  பொருட்களை கைமாற்றி விற்று அதில் நிறைய லாபத்தை பெறுவார்கள்.

தத்துவத்தில் பெரும் ஈடுபாடு காட்டி எப்போதும் படித்துக் கொண்டேயிருப்பார்கள்.  திடீர் பயணங்களால் நிறைய லாபம் சம்பாதிப்பார்கள். பன்னிரெண்டாம் இடமான விருச்சிகத்தில் காடு, மலைகளுக்கெல்லாம் அடிக்கடி குழுவோடு சென்று வருவார்கள். அவ்வப்போது சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு சென்று தியானமும் செய்து விட்டு வருவார்கள்.

ஏதேனும் தெய்வ உபாசனையில் தீவிரமாக ஈடுபடுவார்கள். குளம் வெட்டுதல், அன்ன சத்திரங்கள் அல்லது ஏதேனும் டிரஸ்ட் போன்றவற்றை உருவாக்கி நிறைய பேர் பயன்படும்படி செய்வார்கள். சனி ராஜ கிரகம் என்பதாலும் ஒருவரின் வாழ்வில் முக்கியமான விஷயங்களை தீர்மானிப்பவராக விளங்குகிறார்.

ஆகவே, ஒருவரின் சொந்த ஜாதகத்தில் சனி எங்கிருந்தாலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்துவார். சில இடங்களில் பகை பெற்றாலோ, நீச பாவம் அடைந்தாலோ எதிர்மறை பலன்களைக் கொடுப்பார். அம்மாதிரி சமயங்களில் நீங்கள் செல்ல வேண்டிய தலமே ஆவராணி ஆகும். இயற்கை எழில் சூழ்ந்த பரவசம்தரும் பச்சைவண்ண வயல்கள்.

அதன் மத்தியில் குடியிருக்கிறார் ஆவராணி அனந்தநாராயணப் பெருமாள். மிக அமைதியான, மனதிற்கு ஏகாந்தமான கிராமம். பச்சைக்கற்பூரத்தின் வாசமும், துளசியும் சேர்ந்த கலவை மனதை ஒருமுகமாக்குகிறது. சாந்நித்தியத்தின் அதிர்வுகள் சூழ நம்மையறியாது ஓர் பேரமைதி நம்மீது கவிழ்கிறது.

கருவறையின் சிறிய வாயிலிலிருந்து பள்ளி கொண்டருளும் பரந்தாமனைப் பார்க்க ஒரு கணம் மூச்சு நிற்கிறது. என்னவொரு பேரழகு. கிட்டத்தட்ட 21 அடியில் மிக நீண்ட சயனப் பெருமாள். தென்திசை முடியை வைத்து வடதிசை பாதம்நீட்டி சயனித்திருக்கும் கோலம் காண உள்ளம் குழையும்.

அனந்தநாராயணப்பெருமாள் ஒரு கரம் தலையைத் தாங்க, மற்றொரு திருக்கரம் முழங்கால் வரை நீண்டிருக்கும் ஒய்யாரம் உயிரை நெருடும். உலகனைத்திற்கும் படியளக்கும் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் அழகு காணுதற்கரியது. இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்