வேதம் உரைக்கும் வான சாஸ்திரம்



காலையில் நீலமாகவும் இரவில் கருமையாகவும் மாறும் இந்த வானம், தன்னகத்தே எண்ணிலடங்கா மர்மங்களை மறைத்து வைத்துள்ளது. குழந்தைப் பருவத்தில் இருந்தே மனிதனுக்கு வானத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதனால் தானே, சாப்பிடாத குழந்தையும் கூட, நிலாவை காட்டி தாயார் சோறு ஊட்டும்போது, தன்னை மறந்து உணவு உண்கிறது? 
பிரபஞ்சத்தின் எல்லையில்லா மர்மங்களை அறிய மனிதனும் பல நூறு ஆண்டுகளாக முயன்று வருகிறான். இப்போதும் வானின் மர்மத்தை அறிய பல நாடுகள் ஏவுகணைகளை விடுவதை பார்க்கிறோம். ஆனால், இப்படி ஏவுகணைகளை வானில் விடுமளவு ஞானத்தை மனிதன் எப்படி பெற்றான் என்பது ஒரு பெரிய கதை. சுவாரஸ்யமான அந்தக் கதையை சுருக்கமாக பார்ப்போம் வாருங்கள்.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் என்ற தத்துவ ஞானியும் அவரது குருவான பிளாட்டோவும் ”புவி மையக் கோட்பாட்டை” முதல் முதலில் உலகிற்கு தந்தார்கள். அந்தக் கோட்பாடு, பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று கூறியது. மேலும் பூமியை முறையே சந்திரன், சூரியன் ஏனைய மற்ற கிரகங்கள் எல்லாம், சுற்றி வருவதாகவும் அந்த கோட்பாடு உரைத்தது.

(அரிஸ்டாட்டிலுக்கு முன்பே பிதொகோரஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி இதே பூமி மைய கோட்பாட்டை அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

பல ஆண்டு காலமாக உலகமும் இந்த தவறான கோட்பாட்டையே பின்பற்றி வந்தது. இந்தக் கோட்பாட்டை உலகமே பின்பற்றியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒரு காலியான வெற்றிடத்தில் நாம் போய் நின்றுகொண்டு வானத்தை பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் சூரிய உதயம், சந்திர உதயம் போன்றவற்றை காணும்போது, நமது பூமி நிலையாக நிற்பது போலவும், சூரியனும் சந்திரனும் நம்மைச் சுற்றி வருவது போலவும் தோன்றும்இல்லையா?. அதனால்தான் இந்தக் கொள்கை உலகப் பிரசித்தமாக விளங்கியது.

இது இப்படி இருக்க, 1543 ஆம் ஆண்டு, “காப்பர்நிகஸ்” என்ற விஞ்ஞானி, பூமி மையக் கோட்பாட்டை, தக்க ஆதாரங்களைக் கொண்டு மறுத்து, சூரிய மையக் கோட்பாட்டை உலகிற்கு தந்தார். பிரபஞ்சத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், சூரியனைத் தான், மற்ற கிரகங்கள் சுற்றி வருவதாகவும் இவரது கோட்பாடு ஆணித்தரமாக உரைத்தது. மேலும் இவரது கோட்பாட்டின் படி, சூரியனை சுற்றி வரும் பூமி மற்றும் ஏனைய கிரகங்களின் பாதை வட்ட வடிவத்தில் இருக்கும்.

பிரபஞ்சத்தில் இருக்கும் சூரிய குடும்பத்தின் வடிவத்தை ஓரளவு சரியாக இவர் சொல்லி இருந்தாலும், இவரது கோட்பாட்டில் ஒரு சிறு பிரச்னை இருந்தது. கிரகங்களின் நிலைகளை துல்லியமாக கணிக்க இவரது கோட்பாட்டால் முடியவில்லை. அது ஏன் என்ற காரணமும் பல காலமாக விளங்காத புதிராகவே இருந்தது.

இந்த புதிருக்கு விடையாக 1609ம் ஆண்டு, ஜான்ஸ் கெப்லர் என்ற விஞ்ஞானி புதிய கோட்பாட்டை உலகிற்கு தந்தார். சூரியன் பிரபஞ்சத்தின் நடுவில் இருப்பதையும், சூரியனை மற்ற கிரகங்களும் பூமியும் சுற்றி வருவதையும் இவர் ஒப்புக் கொண்டார். ஆனால், சூரியனை சுற்றும் கிரகங்களின் சுற்றுப் பாதை வட்ட வடிவானது என்பதை இவர் மறுத்தார். இவரது வாதத்தின் படி சூரியனை சுற்றிவரும் கிரகங்களின் சுற்றுப் பாதை நீள்வட்ட (elliptical path) வடிவானது.

வானவியல் உலகில் புதிய புரட்சியையே உருவாக்கியது கோப்பர்நிக்கஸின் இந்தக் கோட்பாடு. ஆனால், இன்னமும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பல விஞ்ஞானிகளால் பதில் தர முடியவில்லை. எல்லா விஞ்ஞானிகளும் கிரகங்கள் அனைத்தும் சூரியனை சுற்றிவருவதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அவர்களால் ஏன் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகிறது என்ற கேள்விக்கு மட்டும் பதில் தர முடியவில்லை.  

இந்தப் புதிரான கேள்விக்கு, நியூட்டனின் ஈர்ப்பு விதி (newton’s universal law of gravitation) அற்புதமாக பதில் தந்தது. சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை சுற்றி வருகிறது என்பதை ஆதாரத்தோடு நியூட்டன், நிரூபித்தார். இப்படி மனிதனின் பல ஆண்டு காலத் தேடலுக்கான பதில் நியூட்டனால் 1687 ஆம் ஆண்டு தரப்பட்டது. மனிதன் இன்று அடைந்திருக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமைந்தது. இந்த முக்கிய கண்டுபிடிப்புகளே என்றால் அது மிகையில்லை.

ஆனால், இப்படி பல ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டதை நமது வேதங்கள் அன்றே சொல்லி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நீங்கள் சரியாகத் தான் வாசித்தீர்கள்.

நியூட்டனுக்கு பலப் பல ஆண்டுகள் முன்பே,” தைத்ரீய சம்ஹிதை” என்ற வேத நூல், சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் பூமியும் மற்றக் கிரகங்களும் தாங்கப் படுகிறது என்று ஆணித்தரமாக உரைத்தது. தைத்ரீய சம்ஹிதை என்பது யஜூர் வேத மந்திரங்களின் தொகுப்பாக விளங்கும் ஒரு நூலாகும். சம்ஹிதை என்ற வார்த்தைக்கு தொகுப்பு என்று பொருள்.

மித்ரோ தாதார பிருதுவீம் உதத்யாம்| மித்ர: க்ருஷ்டி:| (தைத்திரீய சம்ஹித்தை 3.4.10.3-4)( சொல் விளக்கம் : மித்திரன் - சூரியன், பிருதிவி - பூமி, த்யாம் - ஸ்வர்கம் அதாவது மற்றைய கிரகங்கள், தாதார - தாங்குகிறார்).  

இந்த மந்திரத்தை யஜூர் வேத அந்தணர்கள் காலை சந்தியாவந்தனத்தின் ( காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் செய்யப்படும் ஒரு வித வழிபாடு) போது, கிழக்கு முகமாக நின்று கொண்டு சொல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ” யேனேமா விஷ்வா புவனானி தஸ்து|
தத: க்ஷத்ரம் பலமோஜச்ச ஜாதம்.||”
( தைத்ரீய ஆரண்யகம் - 3.11)

“இந்த உலகம் நிலைபெற்று நிற்பதற்கு காரணம் சூரியன் தான். அந்த சூரியன் தான் உயிர்களுக்கு பலத்தையும் சக்தியையும் தந்து அருள்கிறார்” என்பது மேலே நாம் கண்ட வேத மந்திரத்தின் திரண்ட பொருளாகும். சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் பூமி இயங்குகிறது என்ற அறிவு, இந்தியர்களுக்கு வேத காலம் முதலே இருந்திருப்பதை எண்ணினால் புல்லரிக்கிறது இல்லையா? அது மட்டுமில்லை, சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் பாதையானது நீள் வட்ட வடிவானது என்பதை கெப்லருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நமது வேதங்கள் கூறி இருக்கிறது. “த்ரி நாபி சக்ரம் அஜரமனர்வம் யத்ரேமா விஷ்வா புவனானி தஸ்து”

(ரிக் வேதம் 1.164.2)
“கிரகங்களின் நீள் வட்ட வடிவான (elliptical path) சுற்றுப் பாதை, என்றும் அழியாது, தளர்ந்தும் போகாது” என்று மேலே நாம் கண்ட வேத மந்திரம் ஆணித்தரமாக சொல்கிறது. இந்த மந்திரத்தில் “த்ரி நாபி சக்ரம்” என்ற வார்த்தையை கவனியுங்கள். இந்த வார்த்தைக்கு நீள் வட்டம் (elliptical) என்று பொருள். நீள் வட்ட வடிவை இன்றைய அறிவியல் எப்படி விளக்குகிறது என்று பார்ப்போமா?

இந்த நீள் வட்டத்தை வரைய நமக்கு மூன்று புள்ளிகள் தேவை. இந்த மூன்றினுள், இரண்டு புள்ளிகள் நிலையானவை. அதாவது ஸ்திரமாக நிற்கக் கூடியவை. இதற்கு “focai” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த நிலையான புள்ளிகளை, மூன்றாவதாக ஒரு புள்ளி சுற்றி வரும். சுற்றிவரும் இந்தப் புள்ளி, பூமியையும் மற்ற கிரகங்களையும் குறிக்கிறது. சுற்றிவரும் இந்த புள்ளிக்கும், மற்ற இரண்டு புள்ளிகளுக்கும் (focai) இருக்கும் தூரத்தை கூட்ட (add) வேண்டும். விடையாக வரும் எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல சுற்றி வரும் புள்ளியின், சுற்றுப் பாதையில் இருக்கும் வேறு ஒரு இடத்திற்கும், நிலையான இரண்டு புள்ளிக்கும் (focai) நடுவே இருக்கும் தூரத்தை கணித்து கூட்டினால், மீண்டும் முதலில் வந்த அதே எண்தான் வரும். இப்படி இரண்டு தூரங்களை கூட்டுவதால் வரும் எண் எப்போதும் மாறாததாக இருக்கும்.( constant ).

மொத்தத்தில் கிரகங்களின் பாதைகளை கணிக்க மூன்று புள்ளிகள் இன்றி அமையாதது என்பது இன்றைய அறிவியலின் கூற்று. வேதம் கிரகங்களின் பாதையை ‘த்ரி நாபி சக்ரம்’ என்று கூறுகிறது. அதாவது, மூன்று புள்ளிகளை உடைய வட்டம் என்று நீள் வட்ட வடிவை வேதம் குறிக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

Ellipse வடிவை வரைவதற்கான குறிப்பையும் வேதம் எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள். மற்ற நாடுகளெல்லாம் அறிவியலைப்பற்றி சிந்தித்துக்கூட பார்க்காத காலத்தில் நமது முனிவர்கள், எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை அனாயாசமாக வேதங்களில் புதைத்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள். இதை அறியும்போது நமது முனிவர்களின் தவ வலிமையையும், அறிவியல் ஞானத்தையும், தன்னடக்கத்தையும் போற்றி மெச்சாமல் இருக்க முடியவில்லை இல்லையா?

மகேஷ்