ஆன்மிகம் பலன் தந்த இன்பக் கொடை



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

‘பாகவதம் காட்டும் நரசிம்மம்’ கட்டுரை பகவான் கிருஷ்ணர் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் மகிமைகளை அதன் தாத்பரியத்தை, வெகு சிறப்பாக விவரித்து ‘நரசிம்ம ஜெயந்தி’க்கு மகுடமாய் பிரகாசித்தது. ‘கனவில் உதித்த கந்தன்’ கட்டுரையைப் படித்து முடித்ததும் முருகப்பெருமானின்  அற்புதங்களைக்கூறும் ஒரு புராணப்படத்தைக் கண்ட நிறைவு மனதில் ஏற்பட்டது. ரங்கநாத பெருமாள் உத்திர நட்சத்திரத்தன்று ரங்கநாயகி தாயாரின் சந்நதியில்  எழுந்தருளி மட்டையடி உற்சவம் காணுகின்ற மகத்தான வைபவத்தை விவரித்த கட்டுரை  மறக்க முடியாத பரவச
அனுபவம் ஆகும்.

ராமனின் பாதுகைக்கு ஏன்  பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது என்பதன் தாத்பரியத்தை விவரித்த கட்டுரை  மனதைத் தொட்டது அதன் மகத்துவத்தை உணர வைத்தது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்,
  பட்டாபிராம், சென்னை-72

கொரோனா அச்சுறுத்தல் 21 நாட்கள் ஊரடங்கு, 144 தடை, வெளியே ஆள் அரவம் காணாத சூழல், வீட்டிற்குள்ளே  நடைப்பயிற்சி, அக்கம் பக்கத்து அயலார்களுடன் ‘செய்கை’ மூலமே நலம் விசாரிப்பு என்று தவ வாழ்வு வாழ்ந்துவரும் இன்றைய சூழலில் ‘ஆன்மிகம் பலன்’ எங்களுக்கு மன அழுத்தம் குறைந்து மறுமலர்ச்சி தந்தது. ஆன்மிகம் பலன் பழைய புத்தகங்களை திரும்பத் திரும்ப படித்து இம்மைக்கும் மறுமைக்கும் மருந்தாக உள்ளது. வசந்த நவராத்திரி நாளில் தமிழக சக்தி பீடங்கள் பற்றிய பக்தி மணம் கமழும்  அறிய பொக்கிஷம். அதிலும் காஞ்சி காமாட்சி பற்றி கேட்டறியாத பல கேட்டு  புத்துணர்ச்சி கொண்டோம். மெய்சிலிர்த்தது. ஆலயத்தில் பலிபீடத்தில் அஸ்திர  தேவி எனும் தேவியோடு இருப்பது புதிய செய்தி
 - R.தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76

உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொேரானா எனும் கொடூரம், வழிபாட்டு தலங்களையும் மூட வைத்தது பெரும் துரதிர்ஷ்டம் என்றாலும், வீட்டிலேயே ஜெபிப்பதும், பேரிடரில் பிறருக்கு உதவும் கருணையும், கடவுளுக்கான பிரார்த்தனைதான் என்று தெளிவுபடுத்தி வழிகாட்டிய தலையங்கம், காலமறிந்து வழங்கிய வரப் பிரசாதம். சித்ரகுப்தனுக்கு உகந்த சித்ரா பௌர்ணமியன்று, பூஜையில் வைத்து வழிபட  தனிப்புத்தகமாக பஞ்சாங்கம் கொடுத்ததும் துன்ப வேளையில் இன்பக் கொடைகள்.
- மல்லிகா அன்பழன்,4-வது செக்டர், சென்னை- 600078
.
இந்த இதழ் ஆன்மிகம் புத்தகத்தைப் படித்தேன். இப்பொழுதெல்லாம் கொரோனாவினால் புத்தகங்கள்தான் துணையாக இருக்கிறது. நரசிம்ம ஜெயந்தி பற்றி படித்தபின் எனக்கு இப்போதெல்லாம் பெருமாள் கோயிலுக்குப் போனால் நரசிம்ம ஸ்வாமி சந்நதி எங்கேயிருக்கு என்றுதான் தேடுகிறேன். இல்லையென்றால் என்னமோ சப்பென்று இருக்கு. எதனால் இந்த மாதிரி தோன்றுகிறது எனக்கு. அந்த சந்நதியைக் கண்டுவிட்டால் அப்படியே மெய்மறந்து போகிறேன். என் மகன்கூட எல்லா சந்நதியிலும் தெய்வங்கள் இருக்கிறது. அதென்ன இந்த சந்நதியில் இப்படி நிற்கிறாயே என்று கேட்பான். எனக்கு விளக்கத் தோன்றவில்லை அவனுக்கு. அதிலும் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி சந்நதி என்றால் அங்கிருந்து வரவே மனம்
வருவதில்லை எனக்கு.
- கெளரி ராமச்சந்திரன்,பாடி குப்பம் ரோடு,அண்ணாநகர், சென்னை-40

அட்டையில் கோதண்டராமன். உள்ளே நிறையவே பெருமாள் சம்பந்தப்பட்ட, அதிலும் நரசிம்மர் பற்றியவை தாராளமாகத் தந்து அசத்தியிருக்கிறீர்கள். நரசிம்மரின் கராவலம்பம் ஸ்லோகம் சற்றும் எதிர்பாராதது.விநாயகர் தலங்கள், சித்ரா பௌர்ணமியின் சிறப்புக்கள் என ஆசிரியர் குழுவின் ந.பரணிகுமார் அள்ளித்தந்தது ‘வழுதனங்கா’ பிரசாதமாய் மணம் வீசின. சார்வரி ஆண்டு ராசி பலன்களையும் (இதழையும்) பஞ்சாங்கத்தையும் 13-4-2021  முடிய பாதுகாக்க வேண்டிய கடமையையும் தந்து விட்டீர்கள். நன்றிகள் பல.
- சிம்ம வாஹினி,வியாசர் நகர்.