‘தீர்த்தமாடினோம்’
‘ஆன்மிகம்’ அக்டோபர் (16- 31) 2019 இதழில் திரு சு. இளம் கலைமாறன் அவர்கள் எழுதியுள்ள ‘செருப்பு காணிக்கை செலுத்தி வழிபடும்கோயில் கட்டுரை படித்தேன். மிகவும் வியப்புற்றேன். தென் மாவட்ட கோயில்களை அதிகம் பார்க்காத நான் இந்த கோயில் வரலாற்றை வைத்தே ஒரு வரலாற்றுப் புதினம் எழுதி விடலாமே என நினைத்தேன். இக்கோயில் வரலாற்றை மிகவும் சுவைபட எழுதிய எழுத்தாள சகோதரர் திரு. இளம் கலைமாறனை வெகுவாகப் பாராட்டுகின்றேன். - முனைவர் சு. குலசேகரன், வேலூர் - 632001.
ஐப்பசி அமாவாசையில்தான் கங்காதேவி மயிலாடுதுறையில் உள்ள காவரியில் நீராடுவாள் என்ற அரிய அற்புதத் தகவல்களுடன் காவிரி நீராடலின் மகத்துவங்களை விவரித்த கட்டுரை ஆனந்த நதியில் மூழ்கடித்து விட்டது. தீபாவளியில் அரங்கனின் ஜாலி (சாளி) உற்சவம் என்கிற தெய்வீக வைபவத்தைப் பற்றிய அற்புதத் தகவல்கள் சந்தோஷ மழையில் நனைய வைத்து விட்டன! - த. சத்தியநாராயணன், அயன்புரம்.
மகாலட்சுமி தேவியின் அட்டைப்படம் கண்ணைக் கவிர்ந்தது, சடங்குகள் பற்றி விரிவாக ஆசிரியரின் தலையங்கக் கட்டுரை விளக்கியது. தீபாவளியின் சிறப்பினை விவரிக்கும் கட்டுரை, வழக்கமான கட்டுரை தொடர்கள் நெஞ்சை அள்ளியது. ஆன்மிக உலகின் இமயம் ‘ஆன்மிக பலன்’ ஒன்றே. - இரா. கல்யாண சுந்தர், கொளப்பாக்கம்.
சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் மரபின் அடிப்படையில் தொடர்ந்து கொண்டேயிருக்கும் நிகழ்வுகள். அதை ஆராய்வதை விட எல்லாமும் இறைவனையே நோக்கி நகர்கின்றன என்பதை உணர்ந்தால் எந்த வித ஐயத்திற்கும் வழியில்லை. விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியது பொறுப்பாசிரியரின் தலையங்கம். - ஆர். கே. லிங்கேசன், மேல கிருஷ்ணன்புதூர்.
எத்தனை… எத்தனை கங்கைகள்… படித்தவுடன் எத்தனை வகையான கங்கைகள்… என பிரமித்து விட்டேன்… 17 வகையான கங்கைகள்… அவை உற்பத்தியாகும் இடம்.. கலக்கும் ஆறு. பாயும் பகுதி… என கங்கையைப்பற்றி ஆன்மிகம் தெளிவாக புரிய வைத்தது. - K.R.G. SRIRAMAN, Bangalore - 560077. படபட பட்டாசு ஸ்வீட் பலகாரங்களோடு ஆன்மிக பலனோடு தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம். சடங்குகளை மீறலாமா ? குடந்தை வெங்கடேஷ் காவிரி நீராடல். அண்ணாமலையார் குறித்த குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய கட்டுரையும் அப்பப்பா... எத்தனை கங்கைகள் என்று எங்களை ஏங்க வைத்தது. நவ நரசிம்மர்கள் ஆன்மிகத்தின் மகுடம். - தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.
தீபாவளி ஸ்பெஷலில் வெளியாகியிருந்த ‘‘ஐப்பசி அமாவாசையில் காவிரி நீராடல் என்ற கட்டுரை அன்றைய தினத்தில் காவிரி நீராடுதலின் மகத்துவங்களை A to Z விளக்கியிருந்தது. இந்த ஐப்பசி அமாவாசைக்கு காவிரிக் கரையில் வழக்கத்திற்கு அதிகமாக கும்பலை சேர்ப்பதாகவும் அமைந்திருந்தது, கட்டுரை! - இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.
சங்கத் தமிழ் இலக்கியங்களின் ராமாயணம் இடம் பெற்ற மற்ற குறிப்புகள், ராமாயண புராணங்களில் சொல்லப்படாத கருத்துகளை சிற்பங்கள் பலவற்றுடன் விளக்கியிருந்ததும், ராவணன் கயிலையை எடுக்க முயன்ற காட்சியை சிற்பத்தில் வெளியிட்டதும், கம்ப ராமாயணத்திற்கு முன்பே சிலப்பதிகாரத்தில் ராமன் கடவுளாக வழிபட்ட பாடலால் விளக்கியதும் அற்புதம். - K. சிவக்குமார், சீர்காழி - 609110.
|