எந்த கோயில்? என்ன பிரசாதம்?



திருப்பதி லட்டைப் போன்றே திருப்பதி வடையும் பிரசித்தி பெற்றதாகும். அதைச் செய்யும் முறையை அறிவதற்கு முன்பு திருப்பதி கோயில் குறித்த சில அபூர்வ  தகவல்களை பார்ப்போமா!

திருப்பதி மூலவர் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அந்த  விக்ரகம் முந்திய பழமையான ஒரு அபூர்வ பாறையிலிருந்து  வடிக்கப்பட்டது. கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ’சிலாதோரணம்’ என்ற பாறைகள் உள்ளன. உலகிலேயே இங்கு மட்டும்தான் இந்த பாறைகள் இருக்கிறது.  இந்த பாறையும் திருமலை மூலவர் சிலையும் ஒரே தன்மையானது. பச்சைக் கற்பூரம் ஒரு அமில தன்மையுடைய ரசாயனம் அதை சாதாரண பாறைக் கல்லில்  தடவினால் பாறை அரிக்கப்படும் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணம் பாறையில் தடவினால் எதுவும் ஆவதில்லை.

திருமலை மூலவர் சிலைக்கு தினமும் பச்சைக் கற்பூரம் சார்த்தப்பட்டாலும் ஒன்றும் ஆகாமல் இருப்பது இந்த சிலாதோரண பாறை மகிமையே! எந்த சிலையிலும்  உளியால் செதுக்கப்பட்ட தடங்கள் இருக்கும் அப்படி எதுவும் இல்லாமல் நுட்பமான வேலைப்பாடுகளால் மெருகேற்றப்பட்டுள்ளது. மேலும் சிலையில்  அணியப்பட்டுள்ள நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் பாலிஷ் போட்டதுபோல பளபளப்பாக இருக்கின்றன. ஏழுமலையான் திருவுருவச்சிலை  எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. 3000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசத்தில்தான் சிலை உள்ளது.

அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்தாலும் சிலை வெப்பமாகவே உள்ளது. சிலையின் வியர்வை  பீதாம்பரத்தால் ஒற்றி எடுக்கப்படுகிறது. அபிஷேகத்துக்கு முன்னால் நகைகளை கழற்றும்போதும் நகைகள் சூடாக கொதிக்கின்றன.  மூலவரை வாரத்தில் நான்கு  நாட்கள் அம்பாளாகவும் இரண்டு நாட்கள் விஷ்ணுவாகவும் ஒரு நாள் சிவனாகவும் பாவித்து மந்திரங்கள் அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்படுகிறது.  ஏழுமலையான் உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டு பீதாம்பரம். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமே வஸ்திரம் சாத்துவார்கள்.

இது கடையில் வாங்க முடியாது தேவஸ்தானத்திலே பணம்கொடுத்து சாத்த வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அரசு சீர்வரிசை வஸ்திரமும் அங்கு  சாத்தப்படுகிறது. அபிஷேகத்திற்குரிய குங்குமப்பூ, ஸ்பெயின் மற்றும் நேபாளத்திலிருந்தும் கஸ்தூரி சீனாவிலிருந்தும் புனுகு பாரீஸிலிருந்தும் வரவழைக்கப்பட்டு  தங்கதாம்பாளத்தில் சந்தனத்தில் கரைக்கப்படுகிறது. 51 வட்டில் பாலபிஷேகம் நடத்த ஒரு லட்சத்திற்கும் மேலாகசெலவாகிறது. அதிகாலை 4.30 லிருந்து 5.30  வரையில் அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகத்தின் போது ஏழுமலையானின் மூன்றாவது கண் திறப்பதாக ஐதீகம்.

அபிஷேக நீர், குழாய் மூலமாக புஷ்கரணியில் கலக்கிறது. அதனால், புனிதநீராக கருதப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமிலிருந்து பதப்படுத்தப்பட்ட  ரோஜா மலர்கள் பக்தர்களால் வாங்கி விமானத்தில் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும் சீனாவிலிருந்து சூடம், அகில் சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம்,  குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் வருகிறது. ராஜேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் போன்ற மன்னர்கள்  ஏழுமலையானுக்கு காணிக்கையும் செலுத்தி அறக்கட்டளையும் நடத்தியுள்ளனர். இது கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருக்கோயில் சமையல் கூடம் மிகப்பெரியது. அங்கு பொங்கல், புளியோதரை , தயிர்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம் அப்பம்,  போளி, மெளகாரம், லட்டு, பாயாசம், தோசை, ரவைகேசரி, முந்திரிப்பருப்பு கேசரி, பாதாம்பருப்பு கேசரி அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. ஆனால்,  ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்கி அதில் தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியத்திற்காக கர்ப்பக்கிரகத்துக்குள் குலசேகரப்படியை தாண்டி  செல்லும் வேறு எந்த உணவு மட்டுமல்ல, வைரம், வைடூரியம் தங்கப்பாத்திரங்கள் உட்பட எதுவும் உள்ளே செல்வதில்லை. ஏழுமலையானுக்கு படைத்த  தயிர்சாதமும் மண்சட்டியும் கிடைத்தால் பெரிய பாக்கியமாகும்.
 
திருப்பதி வடை
 
தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து 2 படி
மிளகு 100 கிராம்
சீரகம் 100 கிராம்
நெய் பொரிக்கத் தேவையான அளவு
உப்பு  தேவையான அளவு.
 
செய்முறை

கருப்பு உளுந்தை  நன்றாகக்  கழுவிக் களைந்து முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்கிறார்கள். மிளகு,  சீரகத்தை கரகரப்பாகப் பொடித்துக் கொள்கிறார்கள்.  மறுநாள் காலையில் ஊற  வைத்த உளுந்தை தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுத்து பொடித்த மிளகு சீரகத்தைச் சேர்த்து நன்கு கலந்து  ஈரத்துணியில் பெரிய வடைகளாகத் தட்டி நெய் பொரித்தெடுக்கிறார்கள். மொறுவென திருப்பதி வடை பிரசாதம் தயார்.

ந.பரணிகுமார்