பெருவாழ்வு அளிப்பாள் பேச்சாயி



* புதுநல்லூர், குன்றத்தூர், சென்னை

பிரம்மா, மகாவிஷ்ணுவை நேரே உருவாய் காண வேண்டும் என்று சத்தியவிரத க்ஷேத்ரமான இன்றைய காஞ்சிபுரத்தில் யாகம் நடத்தினார். இதற்கு தன்னை அழைக்கவில்லை என்று கோபம் கொண்ட அவரது தேவி, நாவுக்கரசி கலைவாணி பிரம்மனின், யாகத்தை தடுக்கும் பொருட்டு வேகவதி ஆறாக உருவெடுத்து வந்தாள்.

வேகவதி வெள்ளம் பொங்கி வருவதைக் கண்ட பிரம்மா, திருமாலின் உதவியை நாடினார். அப்போது வேகாசேது என்ற திருநாமத்துடன், அந்த வேகவதி நதிக்குக் குறுக்கே அணையாக வந்து சயனித்தார் திருமால். இதனால் ஆத்திரமுற்ற சரஸ்வதி தேவி, வேகவதி ஆற்றின் கரையோர பகுதியான தும்ப வனத்தில் ஆக்ரோஷம் கொண்டு அலைந்தாள், திரிந்தாள். விண்ணுக்கும், மண்ணுக்குமாய் பெரிய ரூபம் கொண்டு யாகம் நடைபெறும் இடம் செல்ல முற்பட்டாள். அவளை மகாவிஷ்ணு சாந்தப்படுத்த மணம் வீசும் நறுமன மலர்களை தூவி, அவ்விடமே கலைவாணி மயக்கமுற்று மல்லாந்து படுத்தாள். அந்த தேவியை அப்பகுதியில் வாழ்ந்த கிராம மக்கள் பேச்சாயி என்றும், பெரியாயி என்றும் நாமமிட்டு பூஜித்து வந்தனர்.

ஆற்காடு நவாப் காலத்தில் அக்கோயிலும் சிலையும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அம்மனை வழிப்பட்டவர்களின் வம்ச வழியில் வந்த ரகுவின் தந்தை என்பவர், சென்னை தேனாம்பேட்டையில் குடியேறினார். ரகு என்பவரின் கனவில் வந்த பேச்சாயி தனக்கு கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று கேட்டதன் காரணமாக குன்றத்தூர் அருகேயுள்ள புதூர்நல்லூரில் ஏரிக்கரையோரம் கோயில் கட்டினார். பேச்சாயி என்றும் பெரியாயி என்றும் நாமமிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

சென்னை, குன்றத்தூர் அருகேயுள்ள புதூர் நல்லூர,்  பெருமந்தூர் சாலையில்  இக்கோயில் உள்ளது. ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில், அருள்வாக்கு மேடையில் அமர்ந்து ரகு அருள்வாக்கும் சொல்கிறார்.

சு.இளம் கலைமாறன்
படங்கள்: தமிழ்