இறைவன் திருவடிகளில் இளைப்பாறுவோம்



மன இருள் அகற்றும் ஞானஒளி - 16

நான் நல்லதுதான் செய்து வருகிறேன் ஆனாலும் எனக்கு ஏன் சோதனை மேல் சோதனை பின் தொடர்கிறது? அப்படி என்ன நான் பாவம் செய்துவிட்டேன்? - இந்தப் புலம்பல்தான் நம்மில் பலபேரின் மனஓட்டமாக இருக்கிறது. இந்த சோதனைகளுக்கு முதலில் என்ன காரணம் என்பதை நாம் உணர முற்பட வேண்டும். நமக்கு கிடைக்கும் எல்லா நன்மை, தீமைகளையும் ஆகச் சிறந்த நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டால் நாம் முதலில் நம்மை வெறுக்க மாட்டோம். அடுத்தவரையும் வெறுப்புணர்வுடன் பார்க்க மாட்டோம்.

எல்லாம் கடவுள் தந்த அனுபவமாகவே நினைத்து வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வோம். அலைபாயும் மனதை அடக்கி அமைதியோடு இந்த உலகத்தில் வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. நமக்கு வரும் துன்பங்கள், துயரங்கள் விதிவழி பாதி என்றால் மதிவழி மீதியாக இருக்கிறது. ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் மனஅமைதிக்கும் எளிமையான வாழ்க்கைக்கும் சிறந்த உபாயத்தை காட்டுகிறார். அவருடைய திருவாய்மொழியில் ஒரு அற்புதமான பாசுரம்:

வீடுமின் முற்றவும்
வீடுசெய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய் மினே.

இந்த பாசுரத்தின் வாயிலாக நம்மாழ்வார் உலக மக்களிடம் ‘உங்களின் தேவையில்லாத ஆசைகளை விட்டு விட்டு இறைவன்பால் பக்தி செய்யுங்கள். அதன் மூலம் உய்வு பெறுங்கள்’ என்று ஞானஉபதேசம் செய்கிறார். ‘இறைவனுக்குப் புறம்பான எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். அப்படி விட்டபிறகு உங்களுடைய ஆத்மாவை பரமபதமாகிய வீட்டினைத் தரவல்ல எம்பெருமானிடத்தில் சமர்ப்பித்து விடுங்கள். அதாவது அவனிடமே முழுவதுமாக சரணடைந்து விடுங்கள்,’ என்கிறார்.

வீடுமின் என்றால் விட்டு விடுங்கள் என்று அர்த்தம். எதை விட்டு விடுவது? தேவையில்லாததை விட்டுவிட வேண்டும். எது தேவையில்லாதது? நமது அறியாமையினாலும் சுயவிருப்பத்தினாலும் தவறு என்று தெரிந்து நாம் பல செயல்களை செய்கிறோம் அல்லவா? அப்படிப்பட்ட செயல்களை விட்டுவிடச் சொல்கிறார் நம்மாழ்வார். தர்மசங்கடமான சூழ்நிலையில் தவித்துக்கொண்டு இருப்பவனுக்கு அதிலிருந்து தப்பிக்க வழி சொல்கிறார்.

வீடு தீப்பற்றி எரியும்போது உள்ளே உறங்கிக் கிடப்போரை முதலில் வெளியே வா என்று சொல்லி பின்னர் நெருப்பு என்று சொல்வதைப்போல ஆழ்வாரும் விட்டு விடுங்கள் என்று ஆரம்பித்து நமது செயல்களின் தன்மை குறித்து ஞான வகுப்பே எடுத்து நம் அஞ்ஞானத்தை போக்குகிறார். நாம்தான் தேவையில்லாத ஆசை வலைகளில் சிக்கி கட்டுண்டு கிடக்கிறோமே! நம் மனதை, மனஆற்றலை அதிகரிப்பதற்கு உண்டான வழிகளைத் தேடி அவற்றை நடைமுறை சாத்தியத்திற்கு உட்படுத்த வேண்டும்.

நல்ல புத்தகம், மென்மையான இசை, நல்ல நண்பர்கள் என்று நம்முடைய சுற்றுப்புறச் சூழலை நாம் செம்மையாக வைத்துக்கொண்டால் அந்தச் சூழலே ஒரு Positive Energyயைக் கொடுக்கும். ஐரோப்பியர்கள் 1945வரை ஒருவரை ஒருவர் வெறுத்து போர் செய்து லட்சக்கணக்கில் அழிவைத் தேடிக் கொண்டார்கள். ஆனால் இப்போது மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு தமக்குள்ளே ஒற்றுமை பாராட்டுகிறார்கள்.

ஐரோப்பிய யூனியனைப் பார்த்தாலே புரியும். அங்கு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்வதற்கு விசா, பாஸ்போர்ட்  என்று பெரிய கெடுபிடிகள் தேவையில்லை. கரன்ஸியும் ஒன்றுதான் (யூரோ). அவர்களுக்குள் அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று எல்லோருமே ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இதற்கு பெரிய காரணம் என்னவென்றால், ஐரோப்பியர்கள் அழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள்.

நம்மிடம் அந்த வரலாற்று உணர்வு இல்லை. நேற்று என்பதும் நாளை என்பதும் நம்முடைய அகராதியில் இல்லை. இன்றே இந்தக் கணமே நடந்துவிட வேண்டும் என்கிற பேராசை. அதுவும் பணத்தின் மீதான பேராசையே. நம் ஆன்மாவை அழித்தொழிக்கிறது. இதற்கு கடிவாளம் போடத்தான் நமக்கு ஆழ்வார்களும், நாயன் மார்களும், பட்டினத்தாரும், வள்ளலாரும், திருமூலரும், பரிபூரணத்தை அடைந்த குருமார்களும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

சிற்றின்பங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயல வேண்டும். அறம், பொருள், இன்பம் என பலவழிப் பாதைகளில் நாம் தினமும் பயணிக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் புயலும் தென்றலும் மாறி மாறி வீசுகின்றன. கரை சேருவதற்கான வழி தெரியவில்லை. என்ன செய்வது, எங்கே போகிறோம், பாதுகாப்பாக இருக்குமா பயணம், எந்த இடரும் இன்றி கரைசேர முடியுமா என ஆயிரத்தெட்டு கேள்விகள் நம்மை குடைந்து எடுக்கின்றன.

இத்தனை கேள்விகளுக்கும் மாமருந்தாக அமைந்திருக்கிறது, அப்பர் சுவாமிகளின் அற்புதமான தேவாரப் பாடல் ஒன்று:

தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்
தன் அடி அடையப் புன்னைப் பொழுதில்
புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத்து என் வினை
கட்டறுத்து ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கில் ஓட்டான் சிவலோகத்து
இருந்திடுமே

இதன் பொருள்: சிவபெருமானே அடைக்கலம் என்று அவன் தாள் அடைந்தேன். அவன் திருவடி அடைந்தால்,  புன்னை மரங்கள் மிகுதியாக உள்ள பொழில்கள் சூழ்ந்த புகலூர்ப் பெருமான் என்ன செய்வான், தெரியுமா? நல்வினை தீவினை என்று நிழல்போல் தொடர்ந்து வருகிற இரண்டு வினைகளையும் அறுத்து மீண்டும் பிறப்பை வழங்காமல் செய்வான். தவிர என்னை அவனோடேயே அவனுடைய திருவடிகளிலேயே இளைப்பாற வழி செய்து, சிவகதி அடையவும் வழி காட்டுவான்.

திருப்புகலூர் என்றதும் அந்த ஊரின் அழகு அங்கு குடிகொண்டு அருள்பாலித்து வரும் சிவபெருமான்தான் நினைவுக்கு வருகிறார். திருவாரூருக்குப் பக்கத்தில் இரண்டு அற்புதமான திருத்தலங்கள். ஒரு பக்கம் திருப்புகலூர் அப்பரின் ஆன்மா உறையும் இடம். மற்றொருபுறம் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள். சைவ-வைணவ ஒற்றுமைக்கு இதைவிட பெரிய சான்று எதுவும் வேண்டுமா என்ன?

சித்திரை மாதம் சதய நட்சத்திர தினத்தில் அப்பர் பெருமான் சிவபெருமானோடு ஐக்கியமான திருத்தலம் திருப்புகலூர். அப்பர் பெருமானைப் போல தொண்டு செய்து வாழ யாரால் இயலும்? தொண்டு செய்தே பழுத்த பழம் அவர். உழவாரப் பணிக்கு அவரைவிட சிறந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? சித்த சுத்தியே சிவபெருமானை அடையும் வழி என்று வாழ்ந்து காட்டிய பெருந்தகையாளர் அவர். திருக்கண்ணபுரத்து பெருமாள் பற்றி அற்புதமான பாசுரம் இதோ:

பெற்றாரும் சுற்றமும் என்று
இவை பேணேன் நான்
மற்று ஆரும் பற்றிலேன் ஆதலால்
நின் அடைந்தேன். உற்றான் என்று
உள்ளத்து வைத்து அருள் செய்கண்டாய்
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை
அம்மானே!

இதன் பொருள்: நிலையாமையான இந்த உலகப் பற்றுகளில் நான் ஈடுபடவில்லை. எல்லா உறவையும்விட உன்மேல் இருக்கும் உறவே சிறந்தது எனக் கருதி உன் திருவடிகளில், திருக்கண்ணபுரப் பெருமாளே, சரணடைந்தேன். அதனால் நீ எனக்கு வேண்டியவன் என்று மனதில் வைத்து நீ எனக்கு அருள வேண்டும். உள்ளம் நெகிழ திருமங்கையாழ்வார் இறைவனிடம் இவ்வாறு கையேந்துகிறார். திருமங்கையாழ்வாரே இறைவனிடம் நாம் பக்தி செய்யும் வழிமுறைகளை சொல்லித் தந்திருக்கிறார். அதன்படி நடந்தால் நமக்கு எந்நாளும் நன்னாளே!

ஆழ்வார்க்கடியான்
மை.பா.நாராயணன்

சிவனருள் பொழியும் பெருமாள்!

திருப்பாற்கடல் தலத்தில் பெருமாளின் கிடந்த, நின்ற கோலங்களை ஒரு சேர தரிசிக்கலாம். மூலவரின் சிலை, அத்திமரத்தால் செய்யப்பட்டது. 9 அடி நீளம், 3 அடி உயரம் கொண்ட ஆதிசேஷன் மேல், தலைக்கு நெல் அளக்கும் மரக்காலை அணையாக கொண்டு அனந்த சயனகோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள். பெருமாளின் திருமுடியருகே திருமகளும், திருவடி அருகே பூதேவியும் வீற்றிருக்கின்றனர். நாபிக் கமலத்திலிருந்து தோன்றும் தாமரை மீது பிரம்மா அமர்ந்திருக்கிறார்.

புண்டரீக மகரிஷி பெருமாளை தரிசனம் செய்ய, இக்கோயிலுக்கு வந்தார். ஆனால் அங்கு தூசேஸ்வரர் என்ற ஈசனின் வடிவைக் கண்டார். பெருமாள் ஆலயத்தில் சிவனா என்று வியந்து, குழம்பினார். உடனே திருமால் அவர்முன் தோன்றி லிங்கத்தின் மேல் நின்றகோலத்தில் காட்சியளித்தார்! சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் இருந்து தெற்காக பிரியும் சாலையில் 3 கி.மீ தூரம் சென்று திருப்பாற்கடலை அடையலாம்.