பலர் கூடி பிரார்த்தனை செய்வதன் சிறப்பு என்ன?



தெளிவு பெறு ஓம்

கூட்டுப் பிரார்த்தனைக்கு என்றுமே மகத்துவம் அதிகம். எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே பலனை எதிர்பார்த்து பிரார்த்தனை செய்யும்போது நிச்சயமாக அதற்குப் பலன் கிடைக்கும். உதாரணமாக, நாம் வசிக்கும் பகுதியில் குடிதண்ணீர் வரவில்லை என்றால், உடனே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்திடம் மனு கொடுக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம், அதில் வெற்றியும் காண்கிறோம்.

ஒரு பகுதியை மட்டும் நிர்வகிக்கும் அரசாங்கத்தின் கவனம் நம் மீது வரவேண்டும் என்றாலே நாம் ஒன்று கூடி கேட்டால்தான் நடக்கிறது, யோசித்துப் பாருங்கள், தனி ஒரு மனிதர் எங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டும் என்று மனுகொடுத்தால் வேலை நடக்குமா? அரசாங்கத்திடமே இப்படி என்றால், அகில உலகத்தையும் கட்டி ஆளும் இறைவனின் கவனத்தை நம்பால் ஈர்க்க வேண்டும் என்றால், அதற்கு பலரும் ஒன்றாக கூடி பிரார்த்தனை செய்தால்தானே நடக்கும்?

பலரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்காங்கே ஊருக்கு பொதுவில் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனைப் புரிந்துகொள்ளாமல், நாம்தான் தனிப்பட்ட நலனுக்காக மட்டும் ஆலயத்திற்குச் செல்வதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு, ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷம் முதலான விசேஷ நாட்களில் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தனை செய்தோமானால், மாதம் மும்மாரி பொழியும், நீர்நிலைகள் நிரம்பும், நமது வாழ்வும் சிறக்கும்.

* அந்த மூன்று நாட்களில் பெண்கள் விலகித்தான் இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறதா?
- சுபஸ்ரீ சங்கரன், முகப்பேர்.

நிச்சயமாக. விலகி இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே தமிழறிஞர்கள் அந்த மூன்று நாட்களை ‘மாதவிலக்கு’ நாட்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்! சாஸ்திரம் மட்டுமல்ல, வேதமே இதனை வலியுறுத்திச் சொல்கிறது. யஜுர் வேதத்தின் ஐந்தாவது காண்டத்தில் ஏன், எதற்காக என்று தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் மஹரிஷிகள். அந்த மூன்று நாட்களையும் பெண்கள் விசேஷம் நிறைந்த நாட்களாகக் கருதி ஒருவிதமான தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும், தவத்திற்கான காலம் அது என்று வேதம் வலியுறுத்துகிறது.

ஆனால், நாம் அதனைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். தவம் இயற்ற வேண்டும் என்றால் ஆண்கள் வீட்டினைத் துறந்து, ஆசாபாசங்களைத் துறந்து, காட்டிற்குச் சென்று தவம் இயற்றுவதைப் போல, பெண்கள் வீட்டிலேயே இருந்தாலும், அந்த மூன்று நாட்களில் மட்டும் தங்களுக்கு என தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, பொதுவான ஆசாபாசங்களைத் துறந்து ஒரே ஆடையுடன், தியாக உள்ளத்துடன், அலங்காரம் ஏதுமின்றி அமர்ந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இது சம்பந்தமாக ஒரு புராணக் கதையும் உண்டு. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், விருத்திராசுரன் என்ற அசுரனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் விருத்திராசுரனைக் கொன்று வெற்றி பெற்றான் இந்திரன். விருத்திராசுரனைக் கொன்றதனால் ப்ரஹ்மஹத்தி தோஷம் இந்திரனை பிடித்தது. ப்ரஹ்மஹத்தி தோஷம் உள்ள ஒருவரால் இந்திரப் பதவியை வகிக்க இயலாது.

சிக்கலான சூழலில் தேவகுருவான ப்ருஹஸ்பதி மற்றும் ப்ரஹ்ம தேவர் உள்ளிட்ட பெரியவர்களின் ஆலோசனை இந்திரனுக்கு உதவுகிறது. அதாவது, இந்திரனின் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை யாராவது தானமாக பெற்றுக்கொண்டால் இந்திரனை விட்டு அந்த தோஷம் நீங்கிவிடும் என்பதே அந்த ஆலோசனை.

மஹாபாரதத்தில் எவ்வாறு கர்ணன் செய்த தான, தர்மத்தின் பலன் முழுவதையும் கிருஷ்ண பரமாத்மா தானமாக யாசித்துப் பெறுகிறாரோ, அதேபோல, செய்த பாவத்தினால் உண்டாகும் தோஷத்தினையும் யார் வேண்டுமானாலும் தானமாக பெற்றுக் கொள்ள இயலும். இவ்வாறு இந்திரன் தனது ப்ரஹ்மஹத்தி தோஷத்தை யாராவது தானமாகப் பெற்றுக் கொள்ளமாட்டார்களா என்று தேடி அலையும்போது எவரும் முன்வராமல் தயங்கி நின்றனர். காரணம் ப்ரஹ்மஹத்தி தோஷம் என்பது பிராயச்சித்தமே இல்லாத மிகக்கடுமையான ஒன்று.

இந்தச் சூழலில் இந்த தோஷத்தின் பலனை சில கூறுகளாகப் பிரித்து ஒருவருக்கே இல்லாமல் பலருக்கும் தானமாக கொடுத்தால் அதன் வீரியம் குறையுமே என்ற யோசனையை தேவகுரு இந்திரனுக்குச் சொல்ல, அதன் அடிப்படையில் ஐந்து பேர் இந்திரனின் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை ஐந்து பாகமாகப் பிரித்து தானமாகப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கின்றனர். இதற்குப் பிரதி உபகாரமாக இவர்கள் ஐவருக்கும் இந்திரன் சிறப்பான வரத்தினையும் அளிக்கிறார்.

அக்னி என்கிற நெருப்பு, வருணன் என்கிற ஜலம், பிருத்வி என்கிற பூமி, வ்ருக்ஷம் என்கிற பால் சுரக்கும் மரம், ஸ்த்ரீ என்கிற பெண் ஆகிய இந்த ஐவரும் இந்திரனின் ப்ரஹ்மஹத்தி தோஷத்தினை ஐந்து பாகமாகப் பிரித்து தானமாகப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த தோஷத்தின் தாக்கத்தினால் அக்னிக்கு புகை என்கிற குறை உண்டாகிறது. எங்கெல்லாம் நெருப்பு உண்டாகிறதோ அங்கெல்லாம் நிச்சயம் புகையும் இருக்கும். இதற்கு பிரதி உபகாரமாக அக்னிக்கு எதையும் ஜீரணித்துக் கொள்ளும் சக்தியினை இந்திரன் வரமாக வழங்குகிறார்.

ஜலம் என்கிற தண்ணீருக்கு இந்த தோஷத்தினால் எளிதில் அழுக்கு சேர்ந்து நுரை உண்டாகிறது. அதற்கு மாற்றாக ஜலத்திற்கு ஸரூபம் என்கிற வரம் கிடைக்கிறது. அதாவது, ஜலம் எதற்குள் நுழைகிறதோ அதன் வடிவத்தினைப் பெற்றுக் கொள்கிறது. குடத்திற்குள் சென்றால் குடத்தின் வடிவத்தைப் பெறுகிறது, தான் எந்தப் பாத்திரத்திற்குள் நுழைகிறதோ அதன் வடிவத்தைப் பெறுகின்ற வரம் வருணனுக்கு இந்திரனால் வழங்கப்படுகிறது.

வருண பகவானைப் பூஜை செய்யும்போது ‘ஸ்வரூபிணே நம:’ என்று அர்ச்சனை செய்வார்கள். மூன்றாவதாக பூமிக்கு உவர்மண் என்கிற தோஷம் பற்றிக் கொள்கிறது. அதாவது அந்த உவர்மண்ணில் எந்த தாவரமும் விளையாது. இதற்குப் பதிலாக பூமியில் எந்த பாகத்தில் பள்ளம் எடுத்தாலும் அதனைத் தானாகவே மூடிக் கொள்ளும் வரம் பூமிக்கு கிடைக்கிறது. பூமியில் எங்கு பள்ளம் எடுத்து அதனை அப்படியே விட்டுவிட்டோமானால் சிறிது காலம் கழித்து அந்தப் பள்ளம் தானாகவே மூடிக் கொண்டிருப்பதை நம்மால் காண இயலும்.

அடுத்ததாக பால் உள்ள மரம். தானமாகப் பெற்ற தோஷத்தின் பயனாக இந்த மரங்களில் ஒருவிதமான பிசின் வடிவதைக் காண இயலும். மரத்திலிருந்த வடிகின்ற பிசின் தோஷம் உடையது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் மரப்பிசின் ஆன பெருங்காயத்தை சிராத்தம் உள்ளிட்ட ஆசாரமான சமையலில் சேர்க்க மாட்டார்கள். இதற்கு மாற்றாக இந்த மரங்களை வெட்டினால் மீண்டும் துளிர்த்துக் கொள்கின்ற வரத்தினை இந்திரன் வழங்கினார்.

பால் உள்ள மரங்களை எந்த இடத்தில் வெட்டினாலும், அந்தப் பகுதியில் அது மீண்டும் துளிர்விடுவதை நம்மால் காண இயலும். இறுதியாக ஸ்த்ரீ என்கிற பெண் இந்திரனின் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை தானமாகப் பெற்றதன் விளைவாக மாதத்தில் மூன்று நாட்கள் உதிரப் போக்கிற்கு உள்ளாகிறாள். உடல் ரீதியான உபாதைகளை அனுபவிக்கிறாள். உடல் ரீதியாக மட்டுமல்லாது மன ரீதியாகவும் அவள் பாதிப்பிற்கு உள்ளாகிறாள்.

இந்த மனதைக் கட்டுப்படுத்தவே அவள் தவ வாழ்வினை மேற்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதாவது தலையில் பூ வைத்துக் கொள்ளுதல், கண்களில் மையிடுதல் போன்ற எந்த அலங்காரமும் இன்றி தனியாக ஒற்றை ஆடையுடன் நீர் ஆகாரம் மட்டுமே உட்கொண்டு வாழவேண்டும் என்று வேதமும் அறுதியிட்டுச் சொல்கிறது. இதற்கு பிரதி உபகாரமாக அவளுக்கு இந்திரன் அளித்த வரம் அலாதியானது.

அவளது கணவன் செய்யும் புண்ணியத்தில் பாதி இந்தப் பெண்ணுக்கு வந்து சேர்கிறது. கணவன் செய்யும் பாவத்தின் பங்கு எதுவும் இந்தப் பெண்ணை வந்து சேராது. அதே போன்று இவள் செய்கின்ற பாவத்தில் பாதி அவளது கணவனை சென்று அடைகிறது. அதே நேரத்தில் இவள் செய்கின்ற புண்ணியத்தின் பலன் முழுவதும் இவளை மட்டும் சேருமே தவிர, இவளது கணவனுக்கு கொஞ்சம்கூட சேராது.

ஆக புண்ணிய காரியத்தின் பெரும்பாதி பயன் பெண்களையே சென்று சேருகின்ற வகையில் இந்திரனின் வரம் துணை நிற்கிறது. இந்திரன் அளித்த வரத்தின் பலன் முழுமையாக வந்து சேர வேண்டும் என்றால் வேதம் சொல்வதைப் போல, பெண்ணானவள் அந்த மூன்று நாட்களிலும் கண்டிப்பாக தவ வாழ்வினை மேற்கொள்ள வேண்டும், அதில் மாற்றம் வருகின்ற பட்சத்தில் அவன் அளித்த வரத்தின் பலன் முழுமையாக அந்தப் பெண்ணைச் சென்று சேர்வதில்லை.
   
அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியைக் கண்டிருக்கும் இந்த காலத்தில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் தரவேண்டுமா என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த காலத்தில்தான் சிசேரியன் மூலமாகப் பிள்ளைப் பெற்றுக் கொள்வதும், செயற்கை முறை கருத்தரிப்புகளும், கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளையும் நாம் அதிகமாகக் காண்கிறோம். குறிப்பாக கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்ற பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

வேதவாக்கு பொய்க்காது என்பதை நினைவில் கொண்டு, பெரியவர்கள் சொல்லிச் சென்ற பாரம்பரியத்தை பெண்கள் ஏன் கடைபிடிக்கக் கூடாது? சாஸ்திரம் சொல்லும் அனைத்தையும் கடைபிடிக்க இயலாது போனாலும், முடிந்தவரை தனியாக அமர்ந்து உலக வாழ்வியல் சம்பந்தப்பட்ட இதர விஷயங்களில் தங்கள் கவனத்தை செலுத்தாது, மனதைக் கட்டுப்படுத்தி தங்கள் அன்றாட கடமையை மட்டும் செய்ய முயற்சிக்கலாமே.

சாஸ்திரம் சொல்லும் விதிகளை வேறு வழியில்லாமல் கடைபிடிக்க இயலாதவர்களுக்கு ரிஷி பஞ்சமி முதலான விரதங்கள் பிராயச்சித்தமாக சொல்லப்பட்டுள்ளன. ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட, மாதவிலக்கு நின்ற பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு, தங்கள் வாழ்நாளில் அந்த மூன்று நாட்களில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம். அறிவியல் ரீதியாக உதிரப்போக்கு இருக்கும் காலத்தில் பெண்களின் சுத்தத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும், கிருமித் தொற்று ஏதும் உண்டாகக் கூடாது என்பதற்காகவும்தான் தள்ளி வைத்தார்கள்.

இந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இடமளிக்காத வகையில் பல முன்னேற்பாடுகள் வந்துவிட்டன என்று பகுத்தறிவு பேசுவதைவிட, ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற வள்ளுவனின் வாக்கினைக் கருத்தில் கொண்டு, வேதவாக்கு என்றுமே பொய்ப்பதில்லை என்பதனையும் நினைவில் நிறுத்தி, முடிந்தவரை அந்த மூன்று நாட்களும் பெண்கள் விலகி அமர்ந்திருப்பதே அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும், அவர்களது வம்சத்திற்கும் நல்லது. இவ்வாறு விலகியிருக்க வேண்டும் என்பதை ‘தீட்டு’ என்ற மூடநம்பிக்கையில் பழமைவாதம் பேசவில்லை, பெண்களின் உடல்நலம் மற்றும் மனநலம் கருதியே வேதம் இதனை வலியுறுத்திச் சொல்கிறது என்பதனைப் புரிந்து கொண்டோமேயாகில் அதில் உள்ள அறிவியல் உண்மையும் நமக்கு நன்றாகப் புலப்படும்.

* கடலில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு ஒப்பானதா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நிச்சயமாக. கடலில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு ஒப்பானதே. புண்ணிய நதியாம் கங்கை நதி சென்று கலப்பது வங்காள விரிகுடா கடலில். அப்படியென்றால் வங்காள விரிகுடா கடலில் நீராடினால்தான் கங்கையில் நீராடிய பலன் வந்து சேருமா என்ற சந்தேகம் நமக்கு உதிக்கும். உலக வரைபடத்தை உற்று நோக்கினால் ஒரு உண்மை நமக்கு புலப்படும். வங்காள விரிகுடா, இந்து மஹா சமுத்திரத்தோடு குமரிமுனையில் இணைகிறது, அங்கே அரபிக்கடலும் வந்து சங்கமிக்கிறது.

இவ்வாறு இந்த மூன்று கடல் மட்டுமல்ல, உலகில் உள்ள அத்தனை கடலும் ஒன்றோடொன்று இணைவினைப் பெற்றுள்ளதை உலக வரைபடத்தினில் நாம் காண்கிறோம். அது பசிபிக் பெருங்கடலானாலும் சரி, அட்லாண்டிக் பெருங்கடலானாலும் சரி, அனைத்தும் ஒன்றோடொன்று இணைவினைப் பெற்றுள்ளன. ஆக எல்லா சமுத்திரங்களிலும் கங்கை நீர் கலந்திருக்கிறது. ஆக, எந்த ஊரில் இருந்தாலும், கடலில் நீராடுவது என்பது கங்கையில் நீராடுவதற்கு ஒப்பானதே என்பது புவியியல் ரீதியான உண்மை.

பாரத தேசத்தைப் பொறுத்தவரை கங்கை பூமியின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுப்பதால் நம் நாட்டில் உள்ள அத்தனை நீர் நிலைகளும் கங்கையின் தாக்கத்தினைப் பெற்றுள்ளன. நம் வீட்டு கிணற்றிலும் கங்கையே பிரவாகிக்கிறாள். அதனால்தான் அந்நாட்களில் நம் முன்னோர்கள் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள சுவரில் மாடம் அமைத்து அதில் தினமும் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வந்தார்கள். அதன் சிறப்பினைப் புரிந்துகொள்ளாததால் இன்று நீரின்றி தவித்து வருகிறோம்.

* வெவ்வேறு மாதத்தில் இறந்த தாயார், தகப்பனார் இருவருக்கும் ஒரே நாளில் திதி கொடுக்கலாமா? சகோதரர்களில் பெரியவர் வீட்டில்தான் திதி கொடுக்க வேண்டுமா?
 - தி.கோ. ராஜேந்திரன், வீரபத்திர நகர்.

வெவ்வேறு மாதங்களில் இறந்த தாயார், தகப்பனார் இருவருக்கும் பொதுவாக ஒரே நாளில் சிராத்தம் செய்வது கூடாது. அவரவர் இறந்த மாதத்தில் வரும் அந்தந்த திதிக்குரிய நாட்களில்தான் செய்ய வேண்டும். சகோதரர்களில் பெரியவர் வீட்டில்தான் சிராத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை. பெற்றோர் சொத்தில் பாகம் பிரிந்திருந்தால் மட்டுமல்ல, பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தால், அந்தச் சகோதரர்கள் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். மூப்பு அல்லது உடல்நலக் கோளாறால் அவதிப்படுபவர்கள் எந்தச் சகோதரனின் வீட்டில் சிராத்தம் நடந்தாலும் அங்கு சென்று கலந்துகொள்ளலாம். இதில் மூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு கிடையாது.

* ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன?
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

சமித்து, அன்னம், ஆஜ்யம் என்பது அத்தனை விதமான ஹோமங்களுக்கும் உண்டான பொதுவான விதி. சமித்து என்பது ஹோமத்தில் அக்னியை வலுப்படுத்துவதற்கான குச்சி. அன்னம் என்பது வெள்ளை சாதம். ஆஜ்யம் என்பது பசுநெய். ஆக இந்த மூன்றும் ஹோமம் செய்வதற்குண்டான அத்தியாவசியமான பொருட்கள். சமித்துக்களிலும் எல்லா மரத்தினுடைய குச்சிகளையும் உபயோகப்படுத்த இயலாது.

அரசு, புரசு, எருக்கு, கருங்காலி, அத்தி, வன்னி, நாயுருவி என்று ஒவ்வொரு ஹோமத்திற்கும் ஒவ்வொரு விதமான சமித்தினைப் பயன்படுத்துவர். பசு நெய்யை விட்டு அக்னியை வளர்ப்பதே மிகவும் முக்கியமான விதி. இந்த பசு நெய் என்பதே நாம் இறைவனுக்கு கொடுக்கும் ஆகாரம். இறைவனுக்கு ஆகாரமாக உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமான பொருளை கொடுக்கவேண்டும் என்ற ஆராய்ச்சியில் கிடைத்ததே பசுநெய்.

பசுமாடு, சுத்தத்தின் அடையாளம். பசுமாட்டின் கோமியத்தை இல்லத்தை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்துகிறோம். தொற்றுக் கிருமிகள் அண்டாமல் இருப்பதற்காக சாணம் கரைத்து வாசலில் தெளிக்கிறோம். பசுவின் கழிவுகளே இத்தனை புனிதத்தன்மை வாய்ந்தது என்றால் பசுவின் பால்தான் எத்தனை சிறப்புடையது! அந்தப் பாலைப் புடமாக்கி அதிலிருந்து உருவாகும் தயிர் அதைவிட புனிதமானது.

அந்தத் தயிரைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் அதனினும் உயர்ந்தது. இறுதியாக அந்த வெண்ணெயைக் காய்ச்சினால் கிடைக்கும் நெய், உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமானது. ஆகவே இந்த பரிசுத்தமான நெய்யினை இறைவனுக்கு ஆஹுதியாகத் தரவேண்டும் என்கிறது வேதம். இறைவனுக்கு உரிய ஆகாரமாகவே நெய்யினை சமர்ப்பிக்கிறோம்.

ஆக ஹோமத்திற்காக வாங்கும் நெய், பசுநெய்யாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். நெய்தான் ஆகாரம் என்றால் அன்னம் எதற்கு என்ற கேள்வி எழலாம். அன்னம் என்பது, இறைவனுக்கும், நமக்கும் இடையே தூதுவனாக செயல்படும் அக்னி பகவானுக்குக் கொடுக்கப்படுகின்ற ஒரு ஊதியம்.

மற்றபடி விலை உயர்ந்த பட்டு, தானியங்கள், பழங்கள், ரத்தினங்கள் ஆகியவற்றை ஹோமத்தில் இடுவது என்பது, இறைவன் நமக்கு அளித்த செல்வத்தில் ஒரு சிறிய பாகத்தினை மீண்டும் இறைவனுக்கே அர்ப்பணிக்கிறோம் என்ற பக்தி உணர்வோடு சமர்ப்பணம் செய்கின்ற ஒரு செயல். ‘ஸ்வாஹா’ என்று சொல்லி அக்னியில் நாம் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதை இறைவன் உண்மையாகவே ஏற்றுக் கொள்கிறான் என்பதற்கு கண்கூடான ஆதாரமும் உண்டு.

விலை உயர்ந்த பட்டுத்துணி, திரவியங்கள், பழங்கள் முதலானவற்றை ‘ஸ்வாஹா’ என்று சொல்லி அக்னியில் சமர்ப்பிக்கும்போது அந்த ஹோமத்தில் இருந்து அந்தப் பொருள் கருகும் துர்நாற்றம் வரவே வராது. சாதாரணமாக ஒரு துணியின் மூலையில் லேசாக தீப்பிடித்துக் கருகினாலே துர்நாற்றம் வீடு முழுவதும் பரவும்போது, ஒரு முழு புடவையை மந்திர சப்தத்துடன் ஹோமத்தில் சமர்ப்பிக்கும்போது எந்த துர்நாற்றத்தையும் நுகர முடியாது. இதுவே நாம் கொடுக்கும் ஆஹுதிகளை இறைவன் ஏற்றுக்கொள்கிறான் என்பதற்கான சான்று. ஆக அக்னியில் பொருட்களை சமர்ப்பணம் செய்வது என்பது இறைவனுக்கு அக்னி மூலமாக நம்முடைய காணிக்கைகளை செலுத்துகிறோம் என்று பொருள் கொள்ளலாம்.

* வீட்டின் எந்த பகுதியில் பூஜையறையை அமைக்க வேண்டும்?
- எஸ்.ராம்குமார், திருச்சி.

வடகிழக்கு பாகம் என்றழைக்கப்படும் ஈசானிய மூலையில் பூஜையறையை அமைக்க வேண்டும். ஈசானிய மூலை என்றழைக்கப்படும் வடகிழக்கு பகுதியும், நிர்ருதி மூலை அல்லது கன்னி மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு பகுதியும் தெய்வீக மூலைகள் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிர்ருதி மூலையிலும் பூஜை அறையை அமைக்கலாம்.

இவ்விரண்டு பகுதிகளில் பூஜையறையை வைக்க இயலாதவர்கள் ப்ரஹ்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்ற வீட்டின் நடு மையத்திலும் பூஜையறையை அமைக்கலாம். அந்தந்த மனை மற்றும் நிலப்பகுதியின் அமைப்பிற்கு ஏற்றவாறு பூஜையறை மட்டுமல்லாது, சமையலறை, படுக்கை அறை மற்றும் கழிப்பறைகளை அமைத்துக் கொள்வதில் கவனம் கொள்வது நல்லது.

* குழந்தைக்கு எந்த வயதில் காது குத்துவது நல்லது. குழந்தைக்கு வலிக்கும் என்று பரிதாபப்பட்டு அதன் ஐந்தாவது வயதில் டாக்டர் ஒருவரை வைத்து காது குத்தினார்கள். இப்படிச் செய்யலாமா?
- மீரா பத்மநாபன், (இ-மெயில் மூலமாக)
   
கூடாது. குழந்தை பிறந்த 12 முதல் 16வது நாட்களிலோ, 6, 7, 8வது மாதங்களிலோ கர்ணவேதை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதிக பட்சம் அந்தக் குழந்தையின் முதலாவது ஆண்டு நிறைவிற்குள்ளாக காதுகுத்தல் செய்ய வேண்டும் என்பது நம் சம்பிரதாயம். குழந்தைக்கு வலிக்கும் என்ற காரணத்தினால் மருத்துவரைக் கொண்டு ஐந்தாவது வயதில் காது குத்துதல் என்பது முற்றிலும் தவறு.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா