திருப்பங்கள் தருவார் திருக்கண்டியூர் திருமால்



பார்வதி தேவி அருளிய ஐந்து மணி மந்திரங்களையும் பிரம்மா நினைவுக்குள் நிறுத்தினார். ‘ஈசனின் ஐந்தொழிலையும் தாமே புரிந்தால் என்ன’ என்று தீவிரமாக யோசித்தார். தான் யாசித்துப் பெற்ற மந்திரங்களை மழைபோல் பிரவாகமாய் பொழிந்தார். மந்திரங்களின் மகாத்மியத்தால் மகாசக்தி நான்முகனை ஐம்முகன் ஆக்கியது. ஈசன் வெகுதொலைவே ஆர்ப்பரித்து வரும் பிரம்மனைப் பார்த்தார். அகங்காரத்தில் உருண்டு வரும் கோளமான ஐந்தாவது தலையைக் கவனித்தார். அதனுள் வேரோடியிருக்கும் கர்வத்தைக் கண்டு, ‘இது பிரம்மனின் இயல்பு அல்லவே’ என கவலையுற்றார்.

வேதசொரூபனான பிரம்மனே இப்படி அகங்காரத்துடன் திரிந்தால் சாமானிய மானிடர்களின் கதி என்ன என்று பிரம்மனின் மீது கோபமுற்றார். ஆணவம் கொடுத்த போதையால் ஈசனையே, ‘நீ யார்?’ என்ற செருக்கில் ஏறிட்டுப் பார்த்தார் பிரம்மன். சிவன் முகம் சினத்தில் சிவந்தது. அதை அலட்சியப்படுத்தியபடி, ‘உமக்கும் ஐந்து முகம்; எனக்கும் ஐந்து முகம். நானும் உமக்கு இணையானவர்தானே?’ என்று மிதப்பாய் கொக்கரித்தபோது, ருத்ரன் ரௌத்ரமானார். நெற்றிக்கண்ணில் கனல் தெறித்தது. பிரம்மனின் ஐந்தாவது முகத்தை தம் இரு கரங்களாலும் அழுத்தினார்.

ஈசனின் ஸ்பரிசம் கிடைத்த உடலில் அதிவேகமாக வேதசக்தி பாய்ந்தது. நான்கு முகங்களும் வேத ஒலியால் நிறைந்தன. ஆனால், பிரம்மா தான் எனும் அகங்காரத்தை விடமுடியாமல் தவித்தார். கருணை நாயகனான ஈசன், ‘இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறானே பிரம்மன்’ என ஐந்தாவது தலையை முறுக்கித் தனியே துண்டமாய் எடுத்தார். உடனேயே ஈசனின் கைகளை பிரம்ம கபாலம் எனும் அந்த எச்சம் இறுகப் பற்றிக் கொண்டது. பிரம்மனை காப்பாற்றியவர் இப்போது வேறொரு சிக்கலில் சிக்கிக் கொண்டார். என்ன இருந்தாலும் வேதத்தை சுமந்தவனின் தலையல்லவா! எனவே பிரம்மஹத்தி தோஷம் அவரைச் சூழ்ந்தது.

யார், எவ்வளவு பிச்சையிட்டாலும் நிறையாத அந்தக் கபாலம், திருக்கரம்பனூர் எனும் உத்தமர்கோயிலில் பூரணவல்லித் தாயார் பிச்சையிட்டதும் நிறைந்தது. அதனால் ஈசனின் பசித்துயர் நீங்கினாலும், கபாலம் கையை விட்டு நீங்காமலிருந்தது. அவர் அங்கிருந்தவாறே திருமாலை வேண்டினார். ‘கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி, அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழிபட கபாலம் கையை விட்டு அகலும்’ என்றார் திருமால். அவ்வண்ணமே ஈசன் கண்டியூர் வந்தார். கபாலமும் கையை விட்டு அகன்றது.
இவ்வாறு ஹரனுக்கு ஏற்பட்ட சாபத்தை ஹரி தீர்த்ததால், ‘ஹரசாப விமோசனப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.

கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு நின்ற கோலத்தில் கமல நாதன் எனும் மற்றொரு பெயரோடும் அருள்கிறார் பரந்தாமன். கல்யாண குண பரிபூரணனாய்,  கருடாரூடனாய், விஷ்வக்ஸேனர் போன்ற நித்ய சூரிகளால் சூழப்பட்டவனாக திருமால் அருள்கிறார். சங்கு, சக்ர, கதாதாரியாய் தேவி, பூதேவி பிராட்டிகளுடன் சேவை சாதிக்கிறார். ஈசனுக்கும், அகத்தியருக்கும் நேரில் தரிசனமளித்தவர் இவர். கருவறை விமானம் கமலாக்ருதி என வழங்கப்படுகிறது. தாயார் கமலவல்லி நாச்சியார். பெருமாளுக்கு முன்னால் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் அருள்கின்றனர்.

இத்தலத்து சக்கரத்தாழ்வார் மிக விசேஷமானவர். போருக்குச் செல்லும்போது இடது காலை முன்னே வைத்துச் செல்வது அந்தக் காலத்து வழக்கம். இந்த சக்கரத்தாழ்வார் அந்த நிலையிலேயே தரிசனமளிக்கிறார். ஆலயத்திற்குச் சற்று மேற்கே இருக்கும் தீர்த்தம் கபால மோட்ச புஷ்கரணி என்றும், ஆலயத்திற்கு எதிரே உள்ள தீர்த்தம் பத்ம தீர்த்தம், பலி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகின்றன. கபால தீர்த்தத்தில் நீராடி, அதன் கரையிலுள்ள அரசமரத்தடியில் அமர்ந்து, ஹரசாப விமோசனப் பெருமாளை நினைத்து, ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ எனும் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து ஏகாதசி விரதமிருந்து, துவாதசி அன்று அதிகாலையில் பாரணை (நெல்லிக்கனி, அகத்திக்கீரையோடு புளியில்லாமல் சமைத்த உணவு) உண்டு விரதத்தை முடித்தால் பெருமாள் அருள் கிட்டும் என தலபுராணம் கூறுகிறது.

பெருமாள், தாயார், விமானம், தீர்த்தம், தலம் என அனைத்திலும் ‘கமல’ எனும் தாமரையைக் குறிக்கும் சொல் சம்பந்தப்பட்டிருப்பதால் இத்தலம் பஞ்ச கமல க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இத்தலம் மும்மூர்த்தித் தலமாகவும் போற்றப்படுகிறது. ஈசன் தன் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலத்தை நீக்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தானும் இவ்விடத்திலேயே கோயில் கொண்டார். பிரம்மா, சரஸ்வதி போன்றோர் எதிரேயுள்ள ஈசன் ஆலயத்தில் அருள்கின்றனர்.

சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில் பெருமாளுக்கு கொடியேற்றி பல்லக்கு உற்சவத்தை ஆரம்பித்து வைத்தார் ஈசன்.  இன்றும் சித்திரை மாதம் வேத முழக்கங்களுடன் ஒன்பது நாள் பல்வேறு வாகனங்களில் பெருமாளை எழுந்தருளப் பண்ணி ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவத்தோடு இத்தலத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. விரோசன மன்னனின் மகனான பலி, பெருமாளின் தங்கக் கிரீடத்தை அபகரித்ததால் சித்தப்பிரமை ஏற்பட்டு அலைந்து திரிந்து கடைசியில் திருக்கண்டியூர் தலம் வந்து ஹரசாப விமோசனப் பெருமாளை சரணடைந்தான்.
பெருமாள் அவன் உடலையும், மனதையும் சரி செய்து அவனை சொர்க்க லோகம் அனுப்பினார் என தல புராணம் கூறுகிறது. அதனால் பெருமாளுக்கு பலிநாதன் என்ற பெயரும் உண்டு. ‘கிருஷ்ணலீலா தரங்கிணி’ என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர், கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சேர்ந்தவர். இந்த கண்டியூர் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி செலுத்தியவர். பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம் இது. தஞ்சாவூர்-திருவையாறு பாதையில், தஞ்சாவூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கண்டியூர்.

- கிருஷ்ணா
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்