நீங்க பார்க்கப் போறது வேற போலீஸ்!



“தமிழ்ல இதுக்கு முன்னாடி போலீஸ் கதைகள் நிறைய வந்திருக்கு. போலீஸ்னா.. ஒண்ணு.. அவர் ரவுடிமாதிரி நின்னு பிரச்னைகளை கையாள்வார். இல்லேனா.. பொறுக்கி மாதிரி இறங்கி எதிரிகளை என்கவுன்டர் பண்ணுவார். இப்படி ரவுடி-வில்லன் காம்பினேஷன், அப்புறம், சவால் விட்டு சரிபண்றது, இல்ல... ஒட்டு மொத்த பிரச்னையையும் ஒருத்தரே கம்ப்ளீட்டா தீர்க்கறதுனு ஏராளமான போலீஸ் கதைகள நாம பார்த்திருப்போம். ஆனா, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ அப்படியில்ல.

இது ஃபார்முலா எல்லாவற்றிலும் இருந்து ரொம்பவே வித்தியாசப்படும்’’ - நம்பிக்கை மின்ன பேசிக்கொண்டே, தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை நமக்கு ப்ளே பண்ணிக் காட்டி, நம் ரியாக்‌ஷனை எதிர்பார்க்கிறார் இயக்குநர் எச்.வினோத். ‘சதுரங்க வேட்டை’யை அடுத்து இப்போது கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என அடுத்த சிக்ஸருக்கு ரெடியாகியிருக்கிறார்.

‘‘பில்டப் பண்ணலீங்க.. உண்மையைத்தான் சொல்றேன். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ல  நோ பன்ச் டயலாக்ஸ். உங்க பக்கத்து வீட்டுல... எதிர் வீட்டுல, உங்க அப்பா, உங்க அண்ணா, சொந்தக்காரர் இப்படி இவங்கள்ல யார் போலீஸ் ஆபீஸரா இருந்தாலும் ரியல் லைஃப்ல அவர் எப்படி செயல்படுவாரோ.. அந்த அதிகாரிங்கள நீங்க எப்படி பார்த்து ரசிப்பீங்களோ... அப்படித்தான் இந்தப் பட ஹீரோவோட ஆக்‌ஷன்களும் இருக்கும். ‘சிறுத்தை’யில கார்த்தி சாரே போலீஸ் ஆபீஸரா பண்ணியிருப்பார். ஆனா, இதுல வேற ஒரு போலீஸ் ஆபீஸரை பார்க்கப் போறீங்க!’’ திருப்தியாக பேசுகிறார் எச்.வினோத்.

“இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எப்படி உருவானது?”
“தயாரிப்பாளர் ‘ட்ரீம் வாரியர்ஸ்’ பிரகாஷ்பாபுசார்கிட்ட ரெண்டு, மூணு கதைகள் சொன்னேன். அதில் இந்தப் படத்தோட ஒன்லைன் அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ‘சதுரங்க வேட்டை’க்கு முன்னாடி பத்திரிகை செய்தியா படிச்ச தகவலை கற்பனை கலந்து பண்ணின கதை அது. இப்போ அந்தக் கதையை மெருகேத்த மறுபடியும் அந்தப் பத்திரிகை நியூஸை படிச்சப்போ, எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தது. அந்தக் கேஸை விசாரிச்ச அதிகாரிகிட்டேயே அதைப் பத்தி கேட்டு தெரிஞ்சுக்க விரும்பினேன்.

அப்போ அவர் என்கிட்ட சொன்ன தகவலுக்கும், நான் யோச்சிச்சதுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் எதிர்பாராத திருப்பங்களுடனும், ஆச்சரியமுமா இருந்தது. அந்த உண்மைச் சம்பவத்தை தேடிப்போகப் போக புதுப்புது கதவுகள் நிறைய திறந்துட்டே இருந்துச்சு. ‘சதுரங்க வேட்டை’யில வொயிட் காலர் க்ரைம்ஸ் பண்ணியிருந்தேன். இதுல டார்க் க்ரைம்ஸ் பத்தி பண்ணியிருக்கேன். கார்த்தி சார்கிட்ட இந்தக் கதையை சொல்லும்போது அவரும் ரொம்பவே ஆச்சரியப்பட்டார்.

அவர் ‘சிறுத்தை’ பண்ணும்போது ஒரு போலீஸ் ஆபீஸர் அவர்கிட்ட சொன்ன ஒரு இன்ஸிடென்ட்டைத்தான் இப்போ நானும் கதையா பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சதும், ‘நம்மளையே இந்தக் கதை சுத்தி சுத்தி வருது’னு சந்தோஷமா சொல்லி கமிட் ஆனார். போலீஸ் ஆபீஸரோட லைஃப்தான் இந்தப் படம். போலீஸ் ஆபீஸர் தீரன் திருமாறனா கார்த்தி நடிக்கறார். ஆக்‌ஷன், லவ், ரொமான்ஸ், காமெடி தவிர, ஒரு போலீஸ் ஆபீஸர் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் எல்லாத்தையுமே அவர் கையாண்ட ஒரு வழக்கு மூலமா சொல்லியிருக்கோம். இப்படி பல அத்தியாயங்கள் சேர்ந்த ஒரு அதிகாரம் தான் தீரன் அதிகாரம்.”

“கார்த்தி, ரகுல்தான் தெரியுறாங்க.. மத்தவங்க?”
“கதைக்கான கேரக்டர்கள் நிறைய இருக்காங்க. கார்த்தி ஜோடியா டோலிவுட் டாப் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங், சத்யன், அபிமன்யுசிங், போஸ்வெங்கட்னு தெரிஞ்ச முகங்கள் நிறைய இருக்காங்க. இந்தக் கதை நிறைய இடங்களுக்கு டிராவல் ஆகும். ஸோ, நார்த் இந்தியாவில் பெரும்பாலான இடங்கள்ல கதை நடக்கறதால கேரக்டர்கள் ரியலிஸ்டிக்கா இருக்கணும் என்பதற்காக எந்த ஸ்டேட்ல ஷூட் பண்றமோ, அந்த ஸ்டேட் ஆர்ட்டிஸ்ட்கள நடிக்க வச்சிருக்கோம்.

இந்தி, மராத்தி, போஜ்புரி நடிகர்கள் நிறைய பேர் தமிழுக்கு வர்றாங்க. ராஜஸ்தான் பாலைவனம், மத்தியப்பிரதேசம்னு படப்பிடிப்பு தொடர்ந்து பல வாரங்கள் நடந்தது. அங்கேல்லாம் சாப்பாடும், மொழியும்தான் பிரச்னையாக இருக்கும்னு நினைச்சோம். ஆனா, அங்கே போனதும் தான் தெரிஞ்சது- சுட்டெரிக்கும் வெயில், வறண்ட காத்து, க்ளைமேட்டே வேறயா இருக்கு. ட்ரை காத்து வீசினா நமக்கு வியர்க்காது. ஆனா, மூக்குல இருந்து பொலபொலனு ரத்தம் வந்திடும், மயக்கம் வந்திடும், குடிதண்ணீர் தட்டுப்பாடு - இப்படி நிறைய சிரமங்களைக் கடந்து படப்பிடிப்பு நடத்திட்டு வந்தோம்.

ஒட்டு மொத்த யூனிட்டோட ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. ஒரு கட்டத்துக்கு மேல அவங்க சாப்பாத்தி எங்களுக்கு பிடிச்சுப் போச்சு. நம்ம பொங்கல் அவங்களுக்கு பிடிச்சிடுச்சு. சத்யன் சூரியனின் கேமரா, வட இந்தியாவை விஷுவல் ட்ரீட்டா கொண்டு வந்திருக்கு. ஸ்டோரி போர்டு ரெடி பண்ணின பிறகு ஷூட் போனதால, நினைச்ச விஷுவலை கொண்டு வந்திருக்கும். படத்துக்கு ஜிப்ரான் இசையமைச்சிருக்கார். ஆறு பாடல்களும் ஒவ்வொரு எமோஷன்ல இருக்கும்.”

“என்ன சொல்றாங்க ரகுல்ப்ரீத்சிங்..?”
“இதுல அவங்க வில்லேஜ் கேர்ள். கார்த்தியோட லவ்வர். ஸ்பாட்டுக்கு வந்துட்டா ரொம்ப புரொஃபஷனல். சொன்ன டைம்ல ஸ்பாட்ல ரெடியா வந்து நிற்பாங்க. தெலுங்குல பிஸியா இருந்தாலும், தமிழ்லேயும் நிறைய படங்கள் பண்ணணும்னு விருப்பம் இருக்குனு சொன்னாங்க. ஸ்பாட்டுல ஒரு நாள் அவங்ககிட்ட பேசும்போது, ‘இதுக்கு முன்னாடி தமிழ்ல நான் பண்ணின படங்களின்போது நான் புதுப்பொண்ணு. கதைகள் செலக்ட் பண்றதுல பக்குவம் இல்லாமல் இருந்தேன். இப்போ கதை நாலேஜ் கொஞ்சம் ஜாஸ்தியாகிருக்கு. ‘தீரன்..’ என்னோட முதல் படமா நினைக்கறேன். இப்போ நல்ல நல்ல கதைகள் தேடி வருது. கவனமா செலக்ட் பண்ணிட்டிருக்கேன்’னு சொன்னாங்க. தமிழில இனி ஒரு ரவுன்ட் வருவாங்க.”

“அப்புறம் ‘சதுரங்க வேட்டை 2’ எப்படி வந்திருக்கு?”
“அது முழுக்க முழுக்க டைரக்டர் நிர்மல்குமார் படம். அதுல அடிப்படையான சில விஷயங்கள் எழுதிக் கொடுத்தேன். ஆனா, அரவிந்த்சாமி, த்ரிஷா அதுல வந்ததுக்குப் பிறகு அவங்களுக்கு ஏற்ப முழுசா எல்லாத்தையும் மாத்திக்கிட்டாங்க. ‘சதுரங்க வேட்டை’யில் உள்ள காந்திபாபு கேரக்டரை மட்டும் வச்சுக்கிட்டு, முழுக்கவே புதுக் கதையா கொண்டு போயிட்டாங்க. ஸோ, அது நிர்மல்குமாரோட படம். அதோட பெருமை அவருக்குத்தான் சேரும்.”

“உங்களோட ‘சதுரங்க வேட்டை’யும் சரி, ‘தீரன்’ படமும் சரி அடுத்தடுத்து உண்மைச் சம்பவங்களையே கையில் எடுத்திருக்கீங்க. எதனால..?”
“உண்மையில் நடந்த ஒரு விஷயத்தை சொல்லும்போது, ஜனங்க எளிதா இதோட கனெக்ட் ஆகிடுவாங்க. நமக்குத் தெரிஞ்ச விஷயம்தான்னு ஆடியன்ஸ் மொதல்ல நினைச்சாலும், அதிலேயே அவங்க அறியாத விஷயங்களைச் சொல்லும்போது ‘அட ஆமால்ல...’னு அப்புறம் ஆச்சரியப்பட ஆரம்பிச்சிடுவாங்க.

நீங்க சம்பந்தப்படாத வரை உங்களுக்குப் பின்னாடி நடக்குற எதுவுமே உங்களுக்குத் தெரியாதுதானே! தினமும் படிக்கற செய்தினாலும், அதுக்கு பின்னாடி நடக்கற விஷயத்தைச் சொல்லணும்னுதான் எப்பவும் விரும்புவேன். இந்தக் கதையில் நான் தொட்டிருக்கும் விஷயம்.. பொதுவா நாம எதுக்கெடுத்தாலும் யாரையாவது ஈஸியா குற்றம் சொல்லிக்கிட்டே இருக்கறோம். போலீஸ் சரியில்லைங்கறோம். அரசியல்வாதி சரியில்லைனு கொதிக்கறோம்.

அரசாங்க அதிகாரிகள் வேலையே செய்யமாட்டேன்றாங்கனு எல்லாம் குமுறுறோம். ஆனா, நம்ம சிஸ்டம் எப்படி அமைஞ்சதுங்கற விஷயத்தை புரிஞ்சுக்கமாட்டேங்கறோம். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீஸ் இவங்கல்லாம் எங்கிருந்து வந்தாங்க? எல்லாருமே நம்மள்ல இருந்துதானே வர்றாங்க! நம்ம வீட்டுல இருக்கற ஒருத்தர் நாளைக்கு அரசியல்வாதி ஆகலாம். போலீஸ் ஆகலாம். இந்த உண்மையைப் புரிஞ்சுக்கணும்னு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ல சொல்லியிருக்கேன். போலீஸ் மீதான உங்க கண்ணோட்டம் ‘தீரன்’ல இருந்து நிச்சயம் இனி மாறும்.”

- மை.பாரதிராஜா