இது வேற ஜோதிகா!



அடி வாடி திமிரா...
புலி ஓட்டும் முறமா...
நம்ம வாழ்க்கை பயமா? வரமா?
ஒரு கோடி சிறகா
நம்ம பார்வை விரிஞ்சா
இந்தப் பூமி தகுமா... தகுமா?

- ஜிப்ரானின் இசைக்கு உமாதேவியின் வரிகளில் ஓபனிங் பாடல் பரபரக்கிறது. ஆக்ராவின் சாலைகளில் ஜோதிகா ஜம்மென புல்லட் ஓட்டிக்கொண்டிருக்க... ஜோதிகாவிற்கு பின்னால் கம்பீரமாக பயணித்திருக்கிறார் ஊர்வசி. ‘குற்றம் கடிதல்’ அடுத்து பிரம்மா இயக்கி வரும் ‘மகளிர்மட்டும்’ படத்தில்தான் இப்படி ஒரு காட்சி.

“இந்தப் படத்துக்காக திண்டிவனம் பக்கம் ஷூட்டிங் போயிருந்தோம். ஒரு ஸ்கூல் டீச்சர். அவங்களுக்கு ஐம்பது வயசு இருக்கும். ‘குற்றம் கடிதல்’ படம் இல்ல தம்பி... என் வாழ்க்கையில நடந்த விஷயம்...’னு தேம்பித் தேம்பி அழுதாங்க. போனவாரம் எங்க ஆபீஸுக்கு நூறு ரூபாய் மணியார்டர் வந்திருந்தது. ‘குற்றம் கடிதல்’ திருட்டு டிவிடில பார்த்தேன்.

ஒரு நல்ல படத்தை அப்படி பார்த்தது மனசாட்சி உறுதலா இருந்துச்சு. அதான் அதுக்கான பணத்தை அனுப்பினேன்’னு எழுதியிருந்தார் முகம் தெரியாத ஒருத்தர். நேஷனல் அவார்டு கிடைச்சதும் சினிமா இண்டஸ்ட்ரியில இருந்து ரஜினி சார்கிட்ட இருந்துதான் முதல் வாழ்த்து வந்துச்சு. இப்படி மறக்கமுடியாத தருணங்கள் நிறைய இருக்கு. அது ஒரு intensive film. ஆனா, மகளிர் மட்டும் எமோஷனலானது. அதிலும் ஒவ்வொரு ஃபிரேம்லேயும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து ரசிப்பீங்க’’ திருப்தியாக பேசுகிறார் பிரம்மா.

‘‘சூர்யா தயாரிப்பு.... ஜோதிகா லீட் ரோல்.... காம்பினேஷனே களைகட்டுதே.....?’’
‘‘கதை ரெடியானதும் ஜோதிகாவுக்குப் பொறுத்தமான கதையா இருந்துச்சு. நான் அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க.... நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார்.

ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைனால ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல்சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார்.

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதுமுகங்கள் இருக்காங்க.’’‘‘ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி நடிகர்களுக்கு ரிகர்சல் வைக்கிறது உங்க ஸ்டைல் ஆச்சே?’’

‘‘முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு. இந்த படத்துலேயே ஒரு மாசம் workshop வச்சிருந்தேன். இந்த மாதிரி பயிற்சி பட்டறை வைக்கறது அவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்ல. இது ஆக்டிங் ப்ராக்டீஸ் கிடையாது.

கேரக்டரோட ஆழத்தை உணர்ந்து உள்வாங்கிக்கற முயற்சியாகத்தான் இந்த ஒர்க்‌ஷாப். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா எல்லாருமே பிஸியானவங்க. அதனால அவங்கள தவிர மத்தவங்க பயிற்சி எடுத்தாங்க. ஊர்வசியும், நாசரும் ஏற்கனவே பழைய ‘மகளிர் மட்டும்’ல நடிச்சிருந்தவங்க. மறுபடியும் அதே டைட்டில்ல அவங்க நடிச்சிருக்கறது சந்தோஷமா இருக்குதுனு சொன்னாங்க.’’

‘‘பானுப்ரியாவுக்கு இந்தப்படம் செகண்ட் இன்னிங்ஸ்தானே?’’
‘‘ஆமாங்க. ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தமிழ்ல படம் பண்றாங்க. ‘மகளிர் மட்டும்’ படத்துலே அவங்கள நடிக்க வைக்கலாம்னு தேடினால் அவங்க வெளிநாடு போயிருந்தாங்க. அவங்க வரும் வரை காத்திருந்தோம். அதே மாதிரி ஊர்வசி மேம் ஒரு தகவல் களஞ்சியம். அவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.

ஆக்ரா ரோட்டுல ஜோதிகா புல்லட் ஓட்டுற சீன்ல பைக்ல பின்னாடி உட்காரச் சொன்னதும் ஊர்வசிமேம் மிரண்டுட்டாங்க. ‘எனக்கும் பைக்குக்கும் ராசியே கிடையாது’னு தயங்கினாங்க. யாருக்கும் தெரியாமல் கேமரா வச்சு, லைவ் ஷூட் பண்ணினோம். செட்டுல சரண்யாமேம்ல இருந்து எல்லாருமே ஒண்ணு சேர்ந்தால் பிக்னிக் மாதிரி பேசி, சிரிச்சு, ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டுனு செம ஃப்ரெண்ட்லியா பழகினாங்க.’’
‘‘தயாரிப்பாளர் சூர்யா என்ன சொல்றார்?’’

‘‘படத்தோட பூஜை அன்னிக்கு சூர்யா சாரால வர முடியல. முதல் நாள் ஷூட்டிங் அன்னிக்கு ‘அழகான படத்தை எடுத்துக்கொடுங்க.... வாழ்த்துகள்’னு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதன்பிறகு நிறைய முறை ஸ்பாட்டுக்கு வருவார். உங்களுக்கு யார் ஆர்ட்டிஸ்ட் தேவைனாலும் சொல்லுங்கனு என்கரேஜ் பண்ணினார்.

ஒரே ஒரு படம் பண்ணின இயக்குநர்னு நினைக்காமல் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். என்னோட குறும்படங்கள்ல இருந்து கூடவே இருக்கும் எஸ்.மணிகண்டன், ‘குற்றம் கடிதல்’ அடுத்து இதற்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இடையே தெலுங்கில் ரெண்டு படங்கள் பண்ணிட்டார் அவர். படத்துக்கு இசை ஜிப்ரான். ‘வாகை சூடவா’ல இருந்து அவரோட இசையை கவனிச்சிட்டிருக்கேன். இதுல அவர் நாலு பாடல்கள், ஒரு தீம் மியூசிக், ஒரு ஃபோக்னு வெரைட்டி கொடுத்திருக்கார்.’’

‘‘படத்துல ஜோதிகா யார்?’’
‘‘பிரபாவதி. ஆவணப்பட இயக்குநரா நடிச்சிருக்காங்க. வழக்கமான ஜோதிகால இருந்து கொஞ்சம் மாறியிருக்கற ஜோவாகவும் இருக்கணும். ரெகுலர் ஆடியன்ஸு விரும்பற ஜோதிகாவாகவும் தெரியணும்னு கேரக்டரை உருவாக்கினேன். புல்லட் தவிர, வேற ஒரு வாகனமும் அவங்க ட்ரைவ் பண்ணுவாங்க. நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு வந்தாங்க.

அவங்க பஞ்சாபி பெண். ஆனால் தமிழை உணர்ந்து பேசி நடிக்கறாங்க. தங்லீஷ்லதான் ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன். டயலாக்கை கூட முதல்நாளே வாங்கிட்டுபோய் மறுநாள் வரும்போது மனப்பாடமா பேசினாங்க. ‘மாயாவி’யில ஜோதிகாவாக அவங்க நடிச்சதால அவங்களே சொந்தக்குரல்ல டப்பிங் பேசியிருப்பாங்க. அதற்கு அடுத்து இதுல தான் அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க. காலையில ஆறு மணிக்கு ஷூட்டிங்னா....  ஷார்ப்பா அந்த டைம்முக்கு செட்ல இருப்பாங்க. அப்படி ஒரு டெடிகேட்டட்.’’

- மை.பாரதிராஜா