பிஜூ தீவில் பார்ட்டி! ஷாம் ஹேப்பி



கேரக்டருக்காக மெனக்கெடும் நடிகர்களில் கமல், விக்ரம், சூர்யா வரிசையில் இடம் பிடித்தவர் ஷாம். ‘6 மெழுகுவர்த்திகள்’  படத்துக்காக மெலிந்த தேகம், கண்களில் வீக்கம் என கெட்டப்பை மாற்றி தன்னுடைய அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர் இப்போது வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படத்தில் செம பிஸி. பிஜூ தீவில் படப்பிடிப்பில் இருந்தவரை வாட்ஸ் அப் காலில் பிடித்தோம்.

“உங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸ் என்று ‘பார்ட்டி’யை சொல்லலாமா?”
“நல்ல இயக்குநர்களால் மட்டுமே அது முடிவு செய்யப்படுகிறது. சத்யராஜ் சாருக்கு ‘பாகுபலி’, அரவிந்த் சாமிக்கு ‘தனி ஒருவன்’, மாதவனுக்கு ‘இறுதிச்சுற்று’ கிடைத்த மாதிரி எனக்கு இந்த ‘பார்ட்டி’. இப்போது பிஜூவில் ‘பார்ட்டி’ பண்ணிக்கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு இயக்கும் படம். அம்மா கிரியேஷன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு.

 இதில் எனக்கு ஒரு அழகான ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் கேரக்டர். நீங்கள் கேள்வி கேட்ட மாதிரி இந்த ‘பார்ட்டி’ படத்தின் மூலமும்  நடக்கலாம்.  வெங்கட்பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் ஏதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.” “இந்த வாய்ப்பு எப்படி அமைஞ்சது?”

“தயாரிப்பாளர் சிவா அண்ணன் ஒரு  நாள் போனில் கூப்பிட்டு கிளம்புங்க பிஜூக்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு ஒரு சொந்த சகோதரன் போல அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். இதில் பிரச்சினை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன். வெங்கட் பிரபு டீமை பற்றி சொல்லவே தேவையில்லை.

கும்மாளத்துக்கு குறைவே இருக்காது. எவ்வளவு கடினமான காட்சியையும் ஜஸ்ட் லைக் தட் என்பது மாதிரி எடுப்பார். அவ்வளவு இளமையான, ஜாலியான டீமுடன் வேலை பார்ப்பது எனக்குள் புது ரத்தம் பாய்ந்த மாதிரி இருக்கு. படப்பிடிப்பில் இருக்கிறோம் என்ற பீல் இல்லவே இல்லை. ஏதோ பிக்னிக் வந்த மாதிரி இருக்கு.” “ஹீரோ இமேஜ் பார்க்காமல் அடிக்கடி வில்லனா நடிக்க கிளம்பிடுறீங்க?”

“எங்கே வேணா யார்கூட வேணா நடிக்கலாம். ஆனால், என்னவா நடிக்கிறோம்கிறது முக்கியம். நண்பர் ஒருவர் சொன்னார் கடைசி வரைக்கும் நல்லவனாகாம செம வில்லனா ஒரு படம் நடிங்க. அது உங்களை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கும்னார். நானும் நிறைய கதை கேட்டேன். சரியா எதுவும் அமையவில்லை. ஆனால், அதற்குள் அரவிந்தசாமி முந்திக் கொண்டார். மனுஷன் பிரிச்சி மேய்ஞ்சிட்டார். நானும் அப்படி பண்ணலாம். ஆனா செம வில்லன் ரோலா இருக்கணும்.

அது மாதிரி நினைத்து எதிர்பார்த்து பண்ணிய படங்கள் நானும் பண்ணியிருக்கிறேன். ‘தில்லாலங்கடி’ தெலுங்கில் ‘கிக்’ ஆக வந்து எனக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படம். தமிழில் எதிர்பார்த்த அளவில் அமையாதது வருத்தம்தான்.”
“அப்புறம் உங்க ‘காவியன்’ என்னதான் ஆச்சு?”

“படப்பிடிப்பு எல்லாம் முடிஞ்சிடிச்சி. முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட படம். கார் ரேஸ் பற்றிய கதை. வழக்கம் போல கடின உழைப்பை போட்டிருக்கிறேன். நிச்சயமா பலன் கிடைக்கும். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதியை
எதிர்பார்க்கலாம்.”

“நடிகருக்கு அங்கீகாரம் விருது. அது கிடைக்காதபோது உங்கள் மனநிலை?”
“வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. தோல்வியில் வீழ்ந்த நடிகன் ஒருவனால் நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் சோர்வு தருது. ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் அதிக உழைப்பை போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. நானும் சரியாக பயன்படுத்திக்கொண்டேன்.

மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லியிருந்தார் இயக்குநர் துரை. அந்த கருத்தும் பயமும் அவர்களைச் சென்றடைந்திருக்கவேண்டும். அது தியேட்டர் மூலமாக நடக்கவில்லை. டி.வி மிகவும் தாமதமாக மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது. வெற்றி பெற்றவர்கள், தோல்வியானவர்கள் என்று படம் பார்க்காமல் நல்ல படமா பார்ப்போம் என்ற மனநிலை இருந்திருந்தால் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடியிருக்கும்.

இப்போது அந்த மனநிலை மக்கள் மத்தியில் வந்திருக்குன்னு நினைக்கிறேன். படம் வெற்றிபெறுவதும், அடுத்து நல்ல கதையில் நடிப்பதும்தான் ஒரு நடிகனுக்கு உண்மையான விருது என்பது என் நம்பிக்கை. அப்படி பார்த்தால் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் விருதுகளால் மகிழ்விக்கப்பட்டவன்தான்.

இன்னொன்று, ஒன்று கிடைத்தால் நல்லது. கிடைக்கலைன்னா ரொம்ப நல்லதுன்னு நினைப்பதால் எனக்கு வருத்தம் என்று எதுவும் இருப்பதில்லை. இன்னும் நிறைய படங்கள் நடிக்கப்போகிறேன். காலங்கள் இருக்கு. விருது கிடைக்காமலா போகும்?”

- சுரேஷ்ராஜா